வியாழன், 17 ஜூலை, 2014

திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ்



1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் தேதி கோவையில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள்.

1978-ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கிய போது, அதில் உதவியாளராக சேர்ந்த பாக்யராஜ். பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில்  கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.

கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குனராக அறிமுகப் படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான கே ஆர் ஜி அவர்களின் சகோதரர் கோபிநாத்

ராஜேஷ் அறிமுகமான  'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு  திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில்  வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசைஎன்கிற படத்தின் மூலம் தயரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரே இயக்கிய இந்தத் திரைப்படத்தில் ஊமையாக நடித்து தன்  நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்

அடுத்து இவர் இயக்கிய 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா', படங்கள், மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.  

விடியும் வரை காத்திரு,  அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும்  வெற்றிப் படங்களாக அமைந்தன.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருனாதர் பாரதிராஜாவுடன் இணைந்து   இவர் பணியாற்றிய  படம் ஒரு கைதியின் டைரி  கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதானாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார்.  ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.

பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார்.  வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில்  என பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன  

புதிய வார்ப்புகள் படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின்  விருதினைப் பெற்றார்.

பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப்  பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.

தமிழ்த் திரையின் கதனாயகர்கள் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில்  அடுத்த வீட்டு வாலிபன் போன்ற தோற்றத்தில்  தனது இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் இவர்

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து பாதியில் நின்று போன திரைப் படமான  அண்ணா நீ என் தெய்வம் திரைப்படத்தில்            எம்.ஜி. ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக் கொண்டு அதற்கு புதிய  திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் - 100" என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்டது  பாக்யராஜின்  தனித் திறமை

இவர் உதவி இயக்குனராக இருந்த போது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை. அப்போது முதலே இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்தது. கதாசிரியராக அறிமுகமாகி இயக்குனராக உயர்ந்து வெற்றிகரமான கதானாயகன் என்ற இடத்தைப் பிடித்த பிறகு,  1981 ஆம் ஆண்டில் பிரவீணாவை மணந்து காதலுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் இவர்.

"இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து நண்பர்கள் வற்புறுத்தியதைத் தட்ட முடியாமல் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்த  பாக்யராஜ், அப்போது  முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் இவரோடு டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதானாயகியாக  இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.

சாந்தனு "சக்கரக்கட்டி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

திரையுலக நியதிக்கேற்ப கதானாயகன் என்ற நிலையிலிருந்து ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 

இப்போது துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும்  இவர், சாதாரண உதவி இயக்குனராக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு அற்புதமான கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக