புதன், 3 செப்டம்பர், 2014

சூப்பர் ஹீரோ சரத்குமார்

தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள். வில்லன் என படிப்படியாக நடித்து கதாநாயகனாகி நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவரான சரத்குமார்,  1954ம் ஆண்டு ஜூலை 14ம் நாள் ராமநாதன் - புஷ்பலீலா தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தவர்.

சரத்குமாருக்கு சுதர்ஷன் என்கிற அண்ணனும், மல்லிகா என்கிற அக்காவும் உடன் பிறந்தவர்கள். சரத்குமாரின் தந்தை சிவகங்கை எம்.ராமநாதன் டெல்லியில் உள்ள இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தில் (Press Information Bureau of India) பணியாற்றி வந்தார். இதனால், ராஜ முத்தையா பள்ளியிலும், ஐ.ஐ.டி மதராஸ் சென்ட்ரல் ஸ்கூல் மற்றும் செயின்ட் பாட்ரிக்ஸ் ஆங்கிலோ மேல்நிலை பள்ளியிலும் படித்திருக்கிறார்.

படிக்கும் காலத்தில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சரத்குமார், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 1970ம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட NCC மாணவர்களில் சரத்குமாரும் ஒருவர். ப்ரீ- யூனிவர்சிட்டி சென்னை லயோலா கல்லூரியில் முடித்த பிறகு, பி.எஸ்.சி. மேத்ஸ் நியூ காலேஜில் முடித்தார் சரத்குமார்.

உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சரத்குமார், 1974ம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி டைட்டில் பட்டம் வென்றார். சரத்குமாரின் அக்காள் மல்லிகாவின் கணவர் கே.பி.கந்தசாமி நடத்தி வந்த தினகரன் பத்திரிகையின் பெங்களூர் விநியோகம் வேலை விஷயமாக பெங்களூர் சென்ற சரத்குமார், அங்கு சினிமா உலகத்தினருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

‘சமாஜம்லோ ஸ்த்ரி’ என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பாளரின் நண்பருடன் சென்ற சரத்குமாரை தெலுங்குப் பட  இயக்குனரான முக்கால் ராமகிருஷ்ணா பேசிக் கொண்டிருந் போது, சிறந்த ஆணழகன் பட்டம் வென்ற சரத்குமாரின் உடற்கட்டை கண்டு ஆச்சர்யப்பட்ட முக்கால் ராமகிருஷ்ணா, தான் இயக்கிய ‘சமாஜம்லோ ஸ்த்ரி’ தெலுங்குப் படத்தில் சுரேந்திரபாபு என்கிற வேடத்தில் நடிக்க வைத்தார். 1986 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் சுமன், பானுசந்தர், விஜயசாந்தி மூவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அடுத்து ‘தாயே நீயே துணை’ படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவருக்கு  அந்தப் படத்தின் கதாநாயகன் கார்த்திக்கின் நட்பு கிடைக்க, அதைத் தொடர்ந்து தனது நண்பருடன் இணைந்து கார்த்திக் நடித்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராகவும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார், சரத்குமார்.

கவிஞர் கண்ணதாசனின் மகன் கலைவாணன் அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். 1988-ல் வெளியான அந்தப் படமே சரத்குமாரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. அந்தப் படம் தமிழில் நூறுநாள் படமாக அமைந்ததோடு தெலுங்கில் ‘கார் கோட்ட குடு’ என்கிற பெயரில் மொழி மாற்றத்துடன் வெளியானது.

திரைப்பட கல்லலூரி மாணவரும், மணிவண்ணனின் உதவியாளருமான ஆர்.கே.செல்வமணி இயக்குனராக அறிமுகமான  புலன் விசாரணை படத்தில் கதாநாயகன் விஜயகாந்துக்கு எதிரான வில்லனாக நடித்தார் சரத்குமார். ஆட்டோ சங்கரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘புலன் விசாரணை’ படத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிக பிரமாண்டமாகவும், அழகாகவும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார், சரத்குமார். இதே ஆண்டில் பதினைந்து தமிழ் படங்களிலும், நான்கு தெலுங்கு படங்களிலும் நடித்தார் சரத்குமார்.

தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த சரத்குமாரை பாசிடிவ்வான வேடத்தில் காட்டிய படம் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநராக அறிமுகமான 'புரியாத புதிர்' படத்தில் ஒரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் சரத்குமார்.

அடுத்த ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' படம் மூலம் அதுவரை சிறிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவரானார். அந்தப் படத்தில் அவர் கதாநாயகன் இல்லை என்றாலும் அந்த படமே அவர் கதாநாயகனாக உயர்வதற்கு அடித்தளம் அமைத்தது. அந்த அளவு 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமார் ஏற்ற கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் ஒரு நாயகத்தன்மையுடன் மக்களை ஈர்த்தது.

அதே ஆண்டில் பவித்ரன் இயக்கிய 'வசந்தகாலப் பறவைகள் படத்தில் கதாநாயகனாக நடித்தார் சரத்குமார். அடுத்த ஆண்டு பவித்ரன் இயக்கிய 'சூரியன்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்று சரத்குமாரை ஒரு கதாநாயக நடிகராக நிலைநிறுத்தியது.

இயக்குனர் மணிவாசகம் இயக்கிய பெரிய கவுண்டர் பொண்ணு படமும் நூறு நாள் ஓடி சரத்குமாரின் உயரத்திற்கு துணை நின்றது.

சரத்குமாரின் 62 வது படமாக வெளிவந்த நாட்டாமை படம்  வெற்றி படமாக அமைந்தது மட்டுமின்றி  அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத்  தந்தது. சரத்குமாரின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக விக்ரமனின் இயக்கத்தில் உருவான சூரியவம்சம் படம் அமைந்தது.

தொடர்ந்து நட்புக்காக, சிம்மராசி, மாயி, 'மகாபிரபு', சமுத்திரம், அரசு, அய்யா, ஏய் என பல படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக  அமைந்தன.

'பெண்னின் மனதைத் தொட்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ஜித்தன்' போன்ற படங்களில் கவனிக்கத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். 2007-ல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் ஒரு நடிகராக தன் இயல்புக்கு மாறாக பலவீனங்கள் நிறைந்த நடுத்தர வயது மனிதராக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

2006-ல் வெளியான 'தலைமகன்' ஒரு நடிகராக சரத்குமாரின் 100-வது படம். அதுவே ஒரு இயக்குநராக அவருடைய முதல் படமாகவும் அமைந்தது. ஆம் தமிழில் தன்னுடைய நூறாவது படத்தை தானே இயக்கிய நடிகர் சரத்குமார் தான். இயக்குநர் சேரன் திரைக்கதை எழுதிய அந்தப் படத்தில் தன் பழைய அவதாரமான பத்திரிகையாளராகவும் வாழ்ந்து பார்த்திருந்தார்.

2009-ல் 'பழசிராஜா' என்கிற சரித்திரப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து மலையாள சினிமாவில் கால்பதித்தார் அது தொடங்கி கடந்து பத்தாண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்க்கும் கெளரவ வேடங்களிலும் நடித்துவருகிறார்.

2011-ல் தமிழில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்தார் சரத்குமார். அதுவரை பல நடிகர்கள் பெண்ணாக நடித்திருந்தாலும் ஒரு நட்சத்திர நடிகர் திருநங்கையாக நடித்தது அதுவே முதல் முறை. அந்தக் கதாபாத்திரத்தில் சரத்குமார் போன்ற ஒரு மதிப்புக்குரிய நடிகர் நடித்ததன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் குறித்த அவலப் பார்வையின் தாக்கம் குறைய உதவியது.

'கொல கொலயா முந்திரிகா', 'சென்னையில் ஒரு நாள்', 'கோச்சடையான்', 'நிமிர்ந்து நில்', வானம் கொட்டட்டும், கன்னடத்தில் 'மைனா', தெலுங்கு மொழியில் 'பரத் அனே நேனு' என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சரத்குமார், 'ஜக்குபாய்', 'சண்டமாருதம்', 'சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம், ஆகியி படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் 'சண்டமாருதம்' படத்துக்கு திரைக்கதை எழுதினார். மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டடமாக உருவாக்கி வரும் வரலாற்று படமான பொன்னியின்செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்திருக்கிறார், சரத்குமார்.

பவித்ரன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிவாசகம், சுரேஷ் கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ், விக்ரமன் உள்பட பல இயக்குநர்களுடன் பணியாற்றி பல வகைமைகளைச் சேர்ந்த படங்களில் நாயகனாக நடித்துள்ள சரத்குமார், 111 தமிழ்ப் படங்களிலும்  21 தெலுங்குப்  படங்களிலும், 8 மலையாளப் படங்களிலும், 5 கன்னடப்  படங்களிலும்  நடித்திருக்கிறார்.

தனது நிறுவனத்தின் சார்பில் பதினோரு படங்களை தயாரித்திருக்கும் சரத்குமார், ஏய், சாணக்கியா, தலைமகன், இலக்கணம் இல்லா காதல், சண்டை மாருதம் ஆகிய படங்களில் பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சின்னத்திரையிலும் இவரது பங்களிப்பு உண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கோடீஸ்வரன் என்ற பொது அறிவுப் போட்டியைத்  தொகுத்து வழங்கினார் சரத்குமார்.

நாட்டாமை, நட்புக்காக மற்றும் சிம்மராசி படங்களுக்காக இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற சரத்குமார், தமிழக் அரசின் எம்.ஜி.ஆர்.விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள சரத்குமார், சினிமா எக்ஸ்பிரஸ், பிலிம்பேர், தினகரன், மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின்  விருதுகள் பலமுறை பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசக் கூடிய ஆற்றல் பெற்ற சரத்குமார், மீடியா வாய்ஸ் என்ற பத்திரிகையை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஒரு நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி நடிகர் சங்கத்தை கடன்களிலிருந்து மீட்டதில் விஜய்காந்துக்கு தக்க துணை புரிந்தார் சரத்குமார். விஜயகாந்த் தலைவராக இருந்த காலத்தில் பொதுச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்தார் சரத்குமார்.

1996-லிருந்து அரசியலிலும் தீவிரமாக இயங்கிவருபவர் சரத்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர் 1998-ல் அக்கட்சியின் சார்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு 2001-ல் திமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினாராகி ஆறு ஆண்டுகள் முழுப் பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். 2007-ல் சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கினார். 2011 தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்ட சரத்குமாருக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை விட்டுப் பிரிந்த சரத்குமார், நடிகை ராதிகாவை 2001 ஆண்டில்  திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார்

திரையுலகில் அலைபோல் நுழைந்து மிகக் குறுகிய காலத்தில் மலை போல் உயர்ந்து நின்ற  சரத்குமாரின் வளர்ச்சி  உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்  உருவானது.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நட்புக்கு மரியாதை தரும் குஷ்பு

1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி மும்பையில் பிறந்தவர் குஷ்பு. அந்தேரி பகுதியில் உள்ள சுவாமி முக்தானந்தா உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

பத்தாவது வயதில் ரவி சோப்ரா இயக்கிய The Burning Train என்கிற இந்திப் படத்தில் "Teri Hai Zameen Tera Aasman" என்கிற பாடலை பாடும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டில் சிறுமியாக நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து ஆறு படங்களில் நடித்தார். இதில் சுனில் தத் நடித்த Dard Ka Rishta படம் அவரை கவனிக்க வைத்தது. அதே போல அனில் கபூர் நடித்த Meri Jung படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.  

1985 ஆம் ஆண்டு ஜாக்கி ஜெராப் ஜோடியாக ஜானோ என்கிற இந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக 1986ல் கலியுக பாண்டவலு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க வந்தார். இந்தப் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ந்து நான்கு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

1988ல் ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் தமிழ் படத்திலும், ரவிச்சந்திரன் நடித்த ரணதீரா கன்னட படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்கள் அவருக்கு அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கமலுடன் வெற்றி விழா, கார்த்திக்குடன் கிழக்கு வாசல், பிரபுவுடன் சின்னத்தம்பி, சத்யராஜூடன் நடிகன், சரத்குமாருடன் நாட்டாமை, அர்ஜுனுடன் சேவகன், முரளியுடன் வீரதாலாட்டு, ஜெயரமுடன் புருஷ லட்சணம், பார்த்திபனுடன் தாலாட்டு பாடவா, பாண்டியாஜானுடன் கோபால கோபாலா, பாக்யராஜூடன் அம்மா வந்தாச்சு, ராஜ்கிரனுடன் பொண்ணு வெளையி பூமி நெப்போலியனுடன் எட்டுபட்டி ராசா என மொத்தம் 97 தமிழ் படங்களிலும் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், ஜெயராம், குன்சக்க போபன் போன்ற நடிகர்களுடன் 14 மலையாள படங்களும்,  ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன், அம்பரிஸ் போன்றவர்களுடன் 18 கன்னட படங்களிலும், 13 இந்திப் படங்களிலும் என மொத்தம் 142 படங்களில் நடித்திருக்கிறார் குஷ்பு.

தமிழில் சத்யராஜீடன் `நடிகன்தொடங்கி `பெரியார்வரை 13 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரபுவுடன் 10 படங்களிலும்,  பி.வாசுவின் இயக்கத்தில் ஒன்பது படங்களிலும் நடித்திருக்கிறார். அமிதப்பச்சனுடன் மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தவர் இவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்.
குஷ்புவின் ஒரிஜினல் பெயர் நக்கத்கான். சினிமாவில் `நக்கத்என்று உரிமையோடு அழைக்கும் ஒரே ஒருவர் கமல், சுந்தர்.சி. அவரை குட்டிம்மா என்றும் வைஃபி என்றும் அழைப்பார். அவரது தோழிகளும் நண்பர்களும், குஷ் என்று செல்லமாக அழைப்பார்கள்.

இவர் நடித்ததில் இவருக்கு பிடித்த படங்கள் `சின்னத்தம்பி’, ஜாதி மல்லி’, `வருஷம் 16’. இவரது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் பிடித்தவை `உள்ளத்தை அள்ளித்தா’, `அன்பே சிவம்’. கணவர் நடித்ததில் பிடித்த படம் `தலைநகரம்’.
இவருக்கு தமிழில் கார்த்திக், அர்விந்தசாமி, பாலிவுட்டில் அமிதாப், அமீர் கான் பிடித்த கதாநாயகர்கள். பாலிவுட் கோவிந்தா இவருடைய சிறந்த நண்பர்.
நடிகர் பார்த்திபனை `மூர்த்திஎன்று இயற்பெயர் சொல்லி அழைப்பார். அதேபோல கார்த்திக்கை முரளி என்று இயற்பெயர் சொல்லி அழைப்பார்.
இன்றைய ஹீரோக்களில் யாருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் என்று கேட்டால் யோசிக்காமல் வரும் பதில், `தனுஷ்’!

`தர்மத்தின் தலைவன்தொடங்கி இன்று வரை ரஜினியும் குஷ்புவும் சந்தித்தால் மராத்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.

அஞ்சலிதேவி, சாவித்ரி, சரோஜாதேவி, ராதிகா, ரேவதி, ஊர்வசி ஆகிய ஆறு நடிகைகளும் இவருக்குப் பிடித்தவர்கள். இதில் அழுது வடிவதுபோல் வரும் சரோஜாதேவியைப் பிடிக்காதாம். கிளாமராக நடிக்கும் சரோஜாதேவிதான் இவருக்கு பிடிக்குமாம்.

குஷ்புவிக்கு திருச்சிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியது செய்தி. ஆனால், இன்று வரை அந்த ரசிகர் யார் என்றும் தெரியாது, அந்த கோயிலையும் நான் பார்த்ததில்லை என்கிறார் குஷ்பு.

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர் அனு, நடிகை மதுபாலா, நடிகர் பஞ்சு சுப்பு, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகிய ஐவர்தான் குஷ்புவின் மிக நெருங்கிய நண்பர்கள். நட்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பார் இவர்.

`முறை மாமன்படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துகொண்டு இருந்த சமயம் `பம்பாய்படம் பார்க்கப் சென்று திரும்பிய போது சுந்தரின் மீது காதல் பூத்ததாம் இவருக்கு. குஷ்பு சுந்தர்.சி தம்பதியினருக்கு  அவந்திகா, அநந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

மழலைப் பேச்சு, கிறுக்கல் கையெழுத்து, பிறந்த நாள் உடைகள், வீசியெறிந்த சாக்லேட் பேப்பர்கள், புகைப்படங்கள் என்று தன் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்கிறார் இவர்.
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் ஸ்பெஷல், மற்ற வார நாட்களில் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். மகள்கள் படிக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பெற்றோர்கள் சங்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுப்பார்.

அவ்னி சினிமாக்ஸ்என்ற படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு பொன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது அரண்மனை படத்தை தயரித்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி புகழ் பெற்றது. சில தொடர்களில் நடித்திருக்கிறார்.


2010ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பத்மஸ்ரீ மணிரத்னம்

நாயகன், தளபதி, ரோஜா, போன்ற தரமான படைப்புகளை தந்த மணிரத்னத்தின் இயற்பெயர் பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம். 1956 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி மதுரையில் பிறந்த இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தவர். இவரது தந்தை ரத்னம், உத்தம புத்திரன் போன்ற எண்ணற்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வீனஸ் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின்  பங்குதாரர். தந்தை சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்தது

எம்பிஏ பட்டதாரியான இவர். இயக்கிய  முதல் படம் பல்லவி அனுபல்லவி என்ற கன்னடப்படம்.  . வயதான ஒரு  பெண்மணிக்கும் ஒரு வாலிப இளைஞனுக்கும் இடையே இருந்த உறவை அடிப்படையாகக் கொண்ட  அந்தக் கதையில் அனில் கபூரும்  லட்சுமியும் ஜோடியாக நடித்தனர்.  இவர் இயக்கிய முதல் படமே  சிறந்த திரைக்கதைக்காக  கர்நாடக அரசின் விருதினைப்  பெற்றது. இப் படத்தை ஒளிப்பதிவு செய்தவர் பிரபல காமிரா கவிஞரான பாலுமகேந்திரா.

இவர் இயக்கிய இரண்டாவது படம்   உணரு.  இந்தப் படம் மலையாள மொழித் திரைப்படமாகும்.

1985ல் தமிழில் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கினாலும் மணிரத்தினத்திற்கு ஒரு தனி அடையாளத்தைத் தந்த . படம் என்றால் அது  1986ல் இவர் இயக்கிய மௌனராகம்தான்  அப்  படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது மட்டுமின்றி  சிறந்த படத்துக்கான தேசிய விருதையும்  பெற்றது.

1987ல் உலகநாயகன் கமல்ஹாசன்  நடித்த நாயகன் என்கிற படத்தை இயக்கியதன் மூலம் மொத்தத் தமிழ்த் திரையுலகையும் தன பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்குண்டு.   இப்படம் சிறந்தப் படத்துக்கான தேசிய விருது, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது, சிறந்த கலை இயக்குனருக்கன தேசிய விருது என மூன்று விருதுகளை ஒரு சேரப்  பெற்றது.

உலகின் சிறந்த 1௦௦  திரைப்படங்களை டைம் பத்திரிகை பட்டியலிட்ட போது அதில் இடம்பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம்  மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான நாயகன்.

கார்த்திக் பிரபு இருவரையும் இணைத்து அக்னி நட்சத்திரம் என்கிற படத்தை இயக்கிய இவர் இயக்கிய முதல் தெலுங்குப்படம்  கீதாஞ்சலி  நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்த இப்படம் சிறந்தப் படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த கதைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றது.

அடுத்து அஞ்சலி என்ற படத்திற்காக தேசிய  விருது பெற்ற இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய முதல் படம் தளபதி.  மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த இப் படத்தில் .மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்

தளபதி படத்தில் கலெக்டராக நடித்த அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்க இவர் இயக்கிய ரோஜா   படத்தில்தான் இன்று உலகம் போற்றும் இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர்.ரகுமானை இவர் இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். ரகுமானின் சிறந்த இசையிலும், மணிரத்தினத்தின் மிகச் சிறப்பான இயக்கத்திலும் உருவான இப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும்  தமிழக அரசின் விருதையும்  இவருக்கு பெற்றுத்  தந்தது.

ரோஜா திரைப்படத்திற்கு முன்பு பல படங்களில் இளையராஜாவோடு பணியாற்றியுள்ள இவர்  ரோஜா படத்திற்குப் பிறகு இன்று வரை  இயக்கியுள்ள படங்கள் எல்லாவற்றிற்கும் இசை ஏஆர் ரகுமான்தான் 

மும்பை மதக் கலவரத்தை மையமாக வைத்து பம்பாய் படத்தை இவர் உருவாகியதைத் தொடர்ந்து  இவரது வீட்டில்  வெடிகுண்டு வீசப்பட அதைத் தொடர்ந்து இன்றுவரை போலீஸ்  பாதுகாப்போடு வலைய வருகிறார் இவர்  

இரு அரசியல் நண்பர்களின் கதையைத் தழுவி  இருவர் என்கிற பெயரில் இவர் உருவாக்கிய படத்தால் தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது . இந்தப் படத்தில்தான் உலக அழகியான ஐஸ்வர்யாராய் தமிழுக்கு அறிமுகமானார்  .

இவர் இயக்கிய ரோஜா பம்பாய் போன்ற படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியைத் தழுவிய படங்கள் என்றாலும் இவர் நேரடியாக இயக்கிய முதல்  இந்திப்படம்  ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த  தில்சே, திரைப்படம்தான்  இப்படம்  தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு  உயிரே என்ற பெயரில் வெளிவந்தது

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சாக்லட் பாய் இமேஜுடன் பல திரைப்படங்களில் நடித்த மாதவனை திரையில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்

.அதன் பிறகு இலங்கை பிரச்சனையை தொட்டு கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற படத்தை தந்தார். இப்படம் தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது, உட்பட பல விருதுகளை பெற்றது

பாரதிராஜாவை தனது ஆயுத எழுத்து  படத்தில் நடிக்க வைத்த இவர்தான் நடிகர் விக்ரமை தனது ராவணன் படத்தின் மூலம் இந்திப்பட உலகிற்கு அறிமுகம் செய்தவர் 

கடல் படத்தின் மூலம் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்கையும் ராதாவின் மகள் துளசியையும் அறிமுகப்படுத்தியவர் இவர் .

ஆறுமுறை தேசிய விருதையும் எண்ணற்ற முறை மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகளும் நடிகையுமான சுகாசினியை 2 0 0 2  ஆம் ஆண்டில்  திருமணம் செய்து கொண்டார் இவர் இவர்களுக்கு நந்தன் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.

தனது உதவியாளர்கள் கே.சுபாஷ் இயக்கத்தில் சத்ரியன், அழகம்பெருமாள் இயக்கத்தில் டும்டும்டும், சுசி.கணேசன் இயக்கத்தில் பைவ் ஸ்டார், போன்ற படங்களையும், தனது மனைவி சுகாசினி இயக்கத்தில் இந்திரா படத்தையும் வசந்த் இயக்கத்தில் ஆசை, நேருக்கு நேர் பொன்ற படங்களையும் இவர்  தயாரித்திருக்கிறார்.

நேர்த்தியான தொழில் நுட்பத்திற்கு பெயர் பெற்ற இவருக்கு  தான் இயக்கிய படங்களில்  மிகவும் பிடித்த  படம்   இருவர்.


இளம் இயக்குனர்களின் படைப்புகளைப் பார்த்துவிட்டு அவர்களைப் பாராட்டத் தயங்காத இவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படாத இந்திய நடிகர்களே இல்லை இன்று என்பது இவரது தனிச் சிறப்பு