வெள்ளி, 13 மே, 2022

இயக்குநர், ஒளிப்பதிவார் கே.வி.ஆனந்த் வாழ்க்கை வரலாறு

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்த் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி சென்னை அருகே உள்ள பழவேற்காட்டில் கரிமனல் முணுசாமி வெங்கடேசன், அனசூயா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்.

பழவேற்காட்டில் பள்ளி படிப்பை முடித்த ஆனந்த், பட்டப் படிப்பை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் முடித்தார். பிறகு சென்னை லோயலோ கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றார்.

ஒருநாள் உறவினர் ஒருவர் இல்ல திருமண விழாவுக்கு சென்ற போது அந்த விழாவில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு கிடைத்த மரியாதையை கண்டு வியந்தவர், உடனே ஒரு புகைப்பட கேமிராவை வாங்கி படம் எடுக்க கற்றுக் கொண்டார்.

கல்லூரியின் வருடாந்திர இறுதி நாட்களில் இமயமலையில் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்று தனது புகைப்படம் எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு, அவரது ஆய்வுப் பயணங்கள் புகைப்படம் எடுப்பதில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டின.

கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றார். அவரது காட்சி படங்கள் அவருக்கு ஏராளமான புகைப்பட விருதுகளைப் பெற்றன.

முன்னணி பத்திரிகைகளான இந்தியா டுடே, டைம்ஸ் ஆப் இந்தியா, கல்கி ஆகிய பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய கே.வி.ஆனந்த், திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அறிமுகம் கிடைக்க அவரிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த ‘கோபுர வாசலிலே’, ‘மீரா’, ‘தேவர் மகன்’, ‘அமரன்’, ‘திருடா திருடா’ போன்ற பல படங்கள் கே.வி.ஆனந்தின் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

தனது உதவியாளர் கே.வி.ஆனந்தின் திறமையை நன்கு அறிந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தனக்கு வந்த  ‘தேன்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாள திரைப்படத்தின் வாய்ப்பை கே.வி.ஆனந்துக்கு பரிந்துரை செய்தார்.

மோகன்லால், ஷோபனா நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள திரைப்படம் கே.வி.ஆனந்தின் திறமையை பயன்படுத்திக் கொண்டு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை பெற்று தந்தது.

தன்னை நம்பி ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்துக்கு சிபாரிசு செய்த குருநாதர் பி.சி.ஸ்ரீராமுக்கு, அந்தப் படம் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை பெற்று வந்து நன்றியினை சமர்பித்தார், கே.வி.ஆனந்த்.  

1994-ம் ஆண்டு வெளியான ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள திரைப்படம், அவருக்கு மலையாளத்தில் இன்னொரு வாய்ப்பினையும் பெற்று தந்தது.  அந்தப் படத்திலும் மோகன்லால், ஷோபனா ஜோடியாக நடிக்க தன்னை ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்த பிரியதர்ஷனே இயக்கினார்.

அந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு மொழியில் மோகன்பாபு, மீனா நடிப்பில் கோதண்டராமி ரெட்டி இயக்கிய ‘புண்ணிய பூமி நா தேசம்’ என்கிற படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அப்படியே தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்தை தமிழுக்கு அழைத்து வந்தவர், இயக்குநர் கதிர். அவர் இயக்கிய ‘காதல் தேசம்’ படமே கே.வி.ஆனந்துக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது.

மீண்டும் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ‘சந்திரலேகா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், தமிழில் மணிரத்னம் தயாரிப்பில் விஜய், சூர்யா நடிப்பில் வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

‘நேருக்கு நேர்’ படம் சூர்யாவுக்கு முதல் படம். தன்னை படமெடுத்த கே.வி.ஆனந்த்  பற்றி சூர்யா கூறும்போது “நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில் தான், சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன்.

மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் அந்த இரண்டு மணிநேரம், ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன். ‘நேருக்கு நேர்’ திரைப்படத்துக்காக நீங்கள் என்னை எடுத்த அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம் தான், இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும், என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தைவிட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும், நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள்தான்.

முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்கமுடியாதது. உன் வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழி நடத்துகின்றன” என்கிறார் சூர்யா.

அடுத்து பிரியதர்ஷன் இயக்கிய ‘டோலி சஜா கே ரக்னா’ இந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இந்தியில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தமிழில் ஷங்கர் தயாரித்து, இயக்கிய ‘முதல்வன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.

மணிரத்னத்தின் உதவியாளர் சுசி கணேசன் இயக்குனராக அறிமுகமான ‘விரும்புகிறேன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், அதன் பிறகு ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோஸ்’, அணில் கபூர் நடித்த ‘நாயக்’, அஜய் தேவ்கான் நடித்த ‘த லெஜன்ட் ஆஃப் பகத்சிங்’, அமிதாபச்சன், அக்சய்குமார் நடித்த ‘காக்கே’ ஆகிய இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

ஷங்கரின் உதவியாளர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக அறிமுகமான ‘செல்லமே’ படத்திகு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், அடுத்து ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனிடையே தனது திறமையை ஒளிப்பதிவுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த ‘கனா கண்டேன்’ என்கிற படத்தை இயக்கி, இயக்குனராக 2005-ம் ஆண்டு அறிமுகமானார், கே.வி.ஆனந்த்.

‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் மலையாள நடிகர் ப்ரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தவர், கே.வி.ஆனந்த். கதை முடிவாகி ப்ரித்விராஜை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த கே.வி.ஆனந்த், ப்ரித்விராஜின் செல்நம்பருக்கு அழைத்த போது, நான் டிரைவிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன் என்று பதில் சொன்ன ப்ரித்விராஜ், கே.வி.ஆனந்த் பற்றி சிலரிடம் விசாரித்து தெரிந்து கொண்டு உடனே கே.வி.ஆனந்தை அழைத்து பேசி இருக்கிறார்.

அதன் பிறகு அவரை சென்னைக்கு வர வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து ‘கனா கண்டேன்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த கனா கண்டேன் படத்தை பி.எல்.தேனப்பன் தயாரிக்க, வித்யாசாகர் இசையமைக்க திரில்லர் படமாக உருவாக்கி வெளியிட்டார்.

அடுத்து சூர்யா நடிப்பில் ‘அயன்’ என்கிற பெரும் வெற்றிப் படத்தை ஏவி.எம்.நிறுவனத்துக்கு இயக்கிய கே.வி.ஆனந்த், அதன் பிறகு ஜீவா நடிப்பில் ‘கோ’, சூர்யா நடிப்பில் ‘மாற்றான்’, தனுஷ் நடிப்பில் ‘அனேகன்’, விஜய்சேதுபதி நடிப்பில் ‘கவண்’,  சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார்.

தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை கபிலன் வைரமுத்துவுடன் ஓராண்டு காலமாக விவாதித்து எழுதிமுடித்த கே.வி.ஆனந்த், 'கோ', 'கவண்' போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்பினார்.

பட உருவாக்கத்திற்காக அவர் தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் 29-4-2021 அன்று நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவரே தன்னுடைய காரை ஓட்டிச் சென்று  மருத்துவமனையில் சேர்ந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கே.வி.ஆனந்த் மறுநாள் 30-04-2021 அதிகாலை 3:00 மணி அளவில் மாரடைப்பால் மறைந்தார்.

நடிகர் விவேக்கின் மறைவு ஏற்படுத்தியே வேதனையே விலகாத நிலையில் கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்துக்கு சசிக்கலா என்கிற மனைவியும், சினேகா, சாதனா என இரு மகள்களும் உள்ளனர்.

நாம்.... ஒரு சிறந்த இயக்குநரை - ஒப்பனையற்ற மனிதரை இழந்து ஓராண்டாகிவிட்டது. அவருடைய திரைப்படங்களால் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


இயக்குநர் எல்.வி.பிரசாத் வாழ்க்கை வரலாறு

ஆந்திர மாநிலத்தில் ஏலூரு தாலுக்காவில் அமைந்துள்ள சொமவார்ப்புடு என்ற சிறிய கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அக்கினேனி ஸ்ரீராமுலு, பசவம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் எல்.வி.பிரசாத். அவரது இயற் பெயர் லட்சுமி வரபிரசாத்.

பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களை பார்த்து நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் எழுந்தது. முயற்சி செய்தார். சின்ன சின்ன வேஷங்கள் கொடுத்து நடிக்க வைத்தார்கள். அதன் பிறகு எங்கு நாடகம் போட்டாலும் நடிக்க சென்று விடுவா, பிரசாத்.

இப்படி நடிப்பு நடிப்பு என்று திரிகிறானே, அவனுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் குடும்பம், குழந்தை என்று மாறிவிடுவான் என்று கணக்கு போட்ட பெற்றோர், பிரசாத்துக்கு பதினேழு வயதில் சவுந்தர்யா மனோகரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

பெற்றோர் நினைத்தது போலவே வீட்டில் தங்கினார் பிரசாத். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் நாம் சினிமா நடிகராகிவிடலாம் என்று கணக்குப் போட்டார், பிரசாத். சினிமாவில் நடிக்க பம்பாய்க்கு போகிறேன் என்று கூறினால் அனுப்ப மாட்டார்கள். அதனால் பம்பாய்க்கு சென்று நடித்து புகழ் பெற்று ஊருக்கு திரும்ப வேண்டும் என்று சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டார்.

பம்பாய் சென்றார். கோகினூர் ஸ்டுடியோ அருகே உள்ள லாட்ஜில் அறை  எடுத்தார். இந்தி மொழி புரியவில்லை. யாரிடம் வேலை கேட்பது என்று தெரியவில்லை. ஸ்டுடியோவுக்குள் நுழைவது எளிதாக இல்லை. அதனால், இரண்டு நாள் ஸ்டுடியோவை சுற்றி வந்து வேடிக்கைப் பார்த்தவர், மூன்றாம் நாள், ஸ்டுடியோவுக்கு எதிரே இருந்த தையல் கடைக்காரர் அழைத்து, எத்தனை நாளைக்கு ஓட்டை வழியாக சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பாய். உள்ளே போய் பார்க்க வேண்டாமா என்று கேட்டவர், பிரசாத்தின் நிலை அறிந்து கொஞ்ச நாள் தன்னிடம் வேலை செய்யுமாறு கூறி இருக்கிறார்.  

தையல் கடையில் கொஞ்ச நாள் வேலை பார்த்த பிரசாத், பிறகு வீனஸ் திரைப்பட நிறுவனத்திலும், அதன் பிறகு இந்தியா பிகசர்ஸ் என்ற நிறுவனத்திலும் அலுவலக உதவியாளராக வேலை செய்திருக்கிறார். இந்தியா பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்’ என்கிற மௌனப் படத்தை தயாரித்த போது அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிற வாய்ப்பு பிரசாத்துக்கு கிடைத்தது. ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை.

பிரசாத்துக்கு அங்கு தாரிலால் என்கிற நண்பர் கிடைத்திருந்தார். அவரது உதவியால் இம்பீரியல் பட நிறுவனத்தின் சார்பில் தயாரான இந்தியாவின் முதல் பேசும் படமான “ஆலம் ஆரா” படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரசாத்துக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் பண்டிதர், வேலைக்காரர் என்று பல வேடங்களில் நடித்தார் பிரசாத்.

அந்தப் படத்தில் நடித்த போது அங்கு உதவி இயக்குனராக பணிபுரிந்த எச்.எம.ரெட்டியின் அறிமுகம் பிரசாத்துக்கு கிடைத்தது. நெருக்கமான நண்பர்களானார்கள். அடுத்து தமிழில் தயாரான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தை இயக்குகின்ற வாய்ப்பு எச்.எம்.ரெட்டிக்கு கிடைத்த போது, அதில் பூசாரி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரசாத்துக்கு வழங்கினார்.

காளிதாஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘பக்த பிரகலாதா’ என்ற பெயரில் முதல் தெலுங்கு பேசும் படத்தை இயக்கிய எச்.எம் ரெட்டி அந்தப் படத்திலும் எல்.வி.பிரசாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்.

சினிமாவில் நடித்துவிட்ட மகிழ்ஹ்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய பிரசாத், அங்கு அவரது மகள் இறந்த செய்தி அறிந்து அதிர்ந்து போனார். இனிமேல் ஊரோடு உன் மனைவியோடு இரு. இல்லை என்றால் நீ எங்கு செல்கிறாயோ அங்கு உன் மனைவியையும் அழைத்து செல் என்று அவருடைய சினிமா கனவுகளுக்கு தடை போட பார்த்தார்கள். இல்லை என் மனைவியை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன் என்று அவரை அழைத்துக் கொண்டு பம்பாய் சென்ற பிரசாத், அங்கு இம்பீரியல் பிலிம் கம்பெனி தயாரித்த கமர்-அல்-சமான் என்ற படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

சில மாதங்களில் அங்கு வேலை இழந்த பிரசாத், மனைவியை காப்பாற்ற, எந்த வேலை கிடைத்தாலும் சரி என்று கிருஷ்ணா தியேட்டரில் காவலாளி வேலைக்கு சேர்ந்தார்.  

பிரசாத்தின் நண்பர் எச்.எம்.ரெட்டி "சீதா சுயம்வர்" என்ற இந்திப் படத்தை இயக்க தொடங்கிய போது அந்தப் படத்திலே எல்.வி.பிரசாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தின் போது பிரசாத்து வேலையில் இருந்த ஈடுபாட்டை கண்ட அந்த நிறுவனத்தினர், அந்த நிறுவனத்தின் நிர்வாகியாக அவருக்கு பதவி உயர்வு அளித்தனர்.

காலம் அந்த கம்பெனியையும் இழுத்து மூடியது. சரியான வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்பட்டார். வறுமை வீட்டில் தாண்டவ மாடினாலும், அதை மறைக்க மகன்கள் ஆனந்த் பாபு, ரமேஷ் பிரசாத் என்று இரு செல்வங்கள் இருந்தனர்.

ஸ்ரீ என்கிற இந்திப் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தார். உதவி இயக்குநர், உதவி ஒளிப்பதிவாளர், தயாரிப்பு நிர்வாகி, நடிகர் என, எட்டு ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்கள் அவருக்கு கிடைத்தது. இதனால், படத் தயாரிப்பில் ஈடுபடாலாம் என்று முடிவு செய்தார்.

சொந்த ஊருக்கு சென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் பணம் திரட்ட முயன்றார். அவரை நம்பிய மக்கள், சினிமாவை நம்பவில்லை. அதனால் அவரது எண்ணம் தோல்வியில் முடிந்தந்தை எண்ணி வருந்திய போது, மீண்டும் இயக்குநர் எச்.எம்.ரெட்டி அழைத்து உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டதுடன் அவர் இயக்கிய “தெனாலி ராமகிருஷ்ணா” படத்தில் மகா மந்திரி திம்மராசுவின் பாத்திரத்திலே நடிக்கின்ற வாய்ப்பையும் வழங்கினார். அந்தப் படம், சென்னையில் உருவானது. அதன் பிறகு “கரானா தொங்கா” என்ற படத்திலும் அவரை பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் உலகப்போரின் தீவிரம் காரணமாக பலர் சென்னையை காலி செய்ய, எல்.வி.பிரசாத்தும் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்.

பிறகு பம்பாய்க்கு சென்று ‘கஷ்ட ஜீவி’ என்கிற படத்தில் உதவி இயக்குனராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றிய பிரசாத், அந்தப் படம் பாதியில் நின்றதும் “சவால், லேடி டாக்டர், டர்பன்” போன்ற சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியாற்றியதுடன், “தேவர்” என்ற படத்துக்கு கதை எழுதினார்.

“ஆலம் ஆரா” படத்தில் நடித்த போது அதன் நாயகன் பிருத்விராஜ் கபூருடன் அப்போது பழக்கம் இருந்ததால் அவரை மீண்டும் சந்தித்து, அவருடைய பிருத்வி தியேட்டர்ஸில் சகுந்தலா, தீவார் போன்ற நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

1930 ஆம் ஆண்டு மௌனப் பட காலத்தில் சினிமாவுக்குள் நுழைந்த எல்.வி.பிரசாத்துக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1943 ஆம் ஆண்டு பணிபுரிந்த ‘கிரஹ பிரவேசம்’ படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் அவர் ஒரு உதவி இயக்குநராகத்தான் முதலில் இணைந்தார். பின்னர் ஒரு கால கட்டத்தில் அவரே அந்த படத்தை இயக்குகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு அந்தப் படத்திற்கு அவரே கதானயகனானர். மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த அந்தப்படம் நாற்பதுகளில் வெளியான மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. அதற்குப் பிறகு எல்.வி.பிரசாத்தின் வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

எல்.வி.பிரசாத் இயக்கத்தில் அடுத்து வெளியான ‘பல்நாட்டி யுத்தம்’ மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கிலே உருவான முதல் சரித்திரப்படமான அந்தப் படத்தில் கதாநாயகனாக ஏ.நாகேஸ்வரராவ் நடித்திருந்தார். முதலில் அந்தப் படத்தை இயக்கிய பத்திரிகையாளரான ராமபிரம்மம் இறந்து விடவே அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பு பிரசாத்தை வந்தடைந்தது. அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரசாத் அதை மிவும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.பிரபல குணச்சித்திர  நடிகையான எஸ்.வரலட்சுமி பாடகியாக  அறிமுகமான முதல் படமாகவும் ‘பல்நாட்டி  யுத்தம்’ படம் அமைந்தது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வசந்த மாளிகை படத்தை இயக்கிய கே.எஸ்.பிரகாஷ்ராவ், ‘துரோகி’ என்ற தெலுங்கு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை பிரசாத்துக்கு வழங்கினார். ஜி.வரலட்சுமியும், பிரகாஷ் ராவும் முக்கிய பாத்திரங்களில் நடித்த அந்தப் படத்திலே சிறு வேடம் ஒன்றிலும் பிரசாத் நடித்திருந்தார்.

விஜயவாடாவில் 1946ஆம் ஆண்டு சேசின பாபம் என்கிற நாடகத்தை பார்த்த எல்.வி.பிரசாத், அதில் நடித்த என்.டி.ராமாராவின் தோற்றத்தையும் நடிப்புத் திறமையையும் கண்டு வியந்ததுடன், அடுத்து அவர் இயக்கிய “மன தேசம்” படத்தில் ஒரு போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்தவர், 1949ஆம் ஆண்டு இயக்கிய சவுகாரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்தப் படம் 1950 ஆம் ஆண்டு வெளியாகி விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

மீண்டும் அதே ஆண்டில் என்.டி.ராமாராவ் நடிப்பில் சம்சாரம் படத்தை இயக்கிய வெற்றிப் படமாக கொடுத்த எல்.வி.பிரசாத், அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான படங்களை இயக்கினார். தெலுங்கு மொழில் என்.டி .ராமராவ் கதாநாயகனாக நடிக்க ‘பெல்லி சேசி சூடு’ என்கிற பெயரிலும், தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்கிற பெயரிலும் வெளியான அந்தப் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இரு மொழிகளிலும் அந்தப் படத்தின் வெற்றி பிரசாத்தை இன்னும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அடுத்து தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவான ராணி படத்தை இயக்கினார். அடுத்து அந்தப் படத்தில் வீணை எஸ்.பாலசந்தர், பானுமதி முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அதன் பிறகு அஞ்சலிதேவி நடித்து தயாரித்த பரதேசி படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் நாகேஸ்வரராவ் நாயகனாக நடிக்க, சிவாஜி கணேசன் சிறிய வேடத்தில் நடித்தார். அந்தப் படம் தமிழில் பூங்கோதை என்கிற பெயரில் வெளியானது.

அடுத்து எல்.வி.பிரசாத் இயக்கிய தமிழ்ப் படம் மனோகரா. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான மிஸ்ஸியம்மா என்கிற படத்தை இயக்கினார். தமிழில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் ஜோடியாக நடிக்க, தெலுங்கு மொழியில் என்.டி.ராமராவும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தின் வெற்றி அந்தப் படத்தை இந்தியிலும் பிரசாத்தை இயக்க வைத்தது. இந்தியில் ஜெமினிகணேசன், மீனாகுமாரி நடிப்பில் மிஸ் மேரி என்கிற பெயரில் இயக்கி வெளியிட்டார், பிரசாத்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான வெற்றிகரமான இயக்குனராக புகழ் பெற்றிருந்த எல்.வி.பிரசாத், மிஸ் மேரி படத்தின் வெற்றியின் மூலம் இந்தி மொழியிலும் புகழ் பெற்ற இயக்குனராக உயர்ந்தார்.

சினிமாவில் கிடைத்த புகழையும் வருமானத்தையும் சினிமாவுக்கே திருப்பி கொடுக்க முடிவு செய்த எல்வி.பிரசாத், ரங்கநாததாஸ் என்பவரிடம் நிலத்தை வாங்கி சொந்தமாக ஒரு ஸ்டுடியோவைக் கட்ட ஆரம்பித்தார்.

தனது பெயரான லட்சுமி வரபிரசாத் என்கிற பெயரில் உள்ள லட்சுமி என்கிற பெயரில் ஒரு படநிறுவனத்தை தொடங்கி, தன்னிடம் உதவியாளராக இருந்த டி.யோகானந்த் இயக்கத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாக நடிக்க ‘இளவேல்பு’ என்ற படத்தையும் தயாரித்தார். தமிழில் ஸ்ரீதர் கதை வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த எதிரபாராதது படத்தின் கதையான அந்தப் படம் தெலுங்கு மொழியில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்து தனது இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘மங்கையர் திலகம்’, பாக்யவதி என இரண்டு படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத், 1956ஆம் ஆண்டில் பிரசாத் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, “ஷாரதா” என்கிற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார்.   ராஜ்கபூர், மீனா குமாரி நடித்த அந்தப் படத்தின் கதை இலவேல்பு படத்தின் கதை.

அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எல்.வி.பிரசாத் இயக்கிய படத்தை நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. தமிழில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடிக்க, ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ என்கிற பெயரிலும், தெலுங்கு மொழியில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடிக்க “அப்பு சேசி பப்பு கூடு” என்கிற பெயரிலும் வெளியானது. இந்தப் படங்கள் மிஸ்ஸியம்மா பெற்ற வெற்றியை பெறவில்லை.

மனோகரா படத்தின் வசனகர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதியுடன் எல்.வி.பிரசாத் மீண்டும் இணைந்த படம், ‘தாயில்லா பிள்ளை’. கல்யாண்குமார்-எல்.விஜயலட்சுமி நடித்த இந்தப் படத்தை தனது பிரசாத் மூவீஸ் பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியிருந்தார் எல்வி.பிரசாத்.

தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற “பார்யா பார்த்தலு” படத்தின் தமிழ், மற்றும் இந்தி மொழிக்கான உரிமையை பெற்ற எல்.வி.பிரசாத், தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பில் இருவர் உள்ளம் என்கிற பெயரில் தானே தயாரித்து இயக்கியவர், இந்தியில் ராஜேந்திரகுமார் நடிப்பில் டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் தயாரித்தார்.

அதன் பிறகு இந்தி, வங்காளம், ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்கள் தயாரித்தார்.

“இருவர் உள்ளம்” படத்திற்குப் பிறகு 1977ஆம் ஆண்டு வரை சில இந்திப் படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத் அதற்குப் பிறகு முழு நேர தயாரிப்பா ளராக மாறினார். அப்படி அவர் தயாரித்த படங்களில் மிகவும் முக்கியமான ஒரு படம் சஞ்சீவ்குமாரும் மும்தாஜும் ஜோடியாக நடித்த “கிலோனா”. அந்தப் படம்தான் சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடிக்க தமிழிலே “எங்கிருந்தோ வந்தாள்” என்ற பெயரில் கே.பாலாஜியின் தயாரிப்பில் உருவானது.

“இருவர் உள்ளம்” வெளியாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரவிச்சந்திரன்-கே.ஆர்.விஜயா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க “இதயக் கமலம்”என்ற படத்தைத் தயாரித்த எல்.வி.பிரசாத் அதற்குப் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு “பிரியா விடை” என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். முத்துராமனும், பிரமீளாவும் ஜோடியாக நடித்த அந்தப் படமே பிரசாத் தயாரித்த கடைசி தமிழ் திரைப்படம்.

கே.பாலச்சந்தர் இயக்கத்திலே கமல்ஹாசன் நாயகனாக நடிக்க சரிதா கதாநாயகியாக அறிமுகமான மரோசரித்ரா படத்தைத் தயாரித்தார் அரங்கண்ணல். அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து மகிழ்ந்த பிரசாத், மரோ சரித்ரா படத்தை இந்தியிலே பாலச்சந்தரின் இயக்கத்திலேயே படமாக்க முடிவு செய்தார்.

மரோ சரித்ரா மூலம் தெலுங்கிலே கமல்ஹாசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் அதன் இந்திப் பதிப்பிலே கமல்ஹாசனை கதாநாயகனாக்க விரும்பினார். அவருடைய அந்த விருப்பத்தை எல்.வி.பிரசாத் ஏற்றுக்கொண்டதும் தெலுங்குப் பெண்ணைக் காதலிக்கும் தமிழ்ப் பையனின் கதையாக இருந்த மரோசரித்ராவின் கதை இந்திப் பெண்ணைக் காதலிக்கும் தமிழ் பையனின் கதையாக மாற்றி, ஏக் தூஜே கேலியே என்ற பெயரிலே தயரித்தார். அந்தப் படம் தான் கே.பாலச்சந்தரும்  கமல்ஹாசனும்  இந்தியிலே அறிமுகமான முதல் படம். அவர்கள் மட்டுமின்றி ரதி, மாதவி, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் அதுதான் முதல் படம்

1981ஆம் ஆண்டு ஜுன் மாதம்  5ஆம் தேதியன்று வெளியான “ஏக் தூஜே கேலியே” இந்திப் படம் பத்து கோடி ரூபாய் வசூலித்து இந்திப்பட உலகில் மிகப் பெரிய வசூல் சாதனையைப் புரிந்தது.  அந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்துத்தான் பிரசாத் 70 எம்.எம் என்ற பெயரிலே ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றைக் கட்டினார் எல்.வி.பிரசாத்

திரைப்படங்களில் நடிப்பதை 1953ஆம் ஆண்டு  வெளியான “பெம்புடு கொடுக்கு” என்ற படத்தோடு நிறுத்திவிட்ட எல்.வி.பிரசாத்தை இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வைத்த பெருமை கமலஹாசனுக்கு சொந்தமானது.  கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார், எல்.வி.பிரசாத்.

மக்கள் தங்களுடைய கண்களின் வழியாக சினிமாவைப் பார்த்ததால்தானே தன்னால்  சினிமாவின் மூலம் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க முடிந்தது என்று  எண்ணிய எல்.வி.பிரசாத் ஹைதராபாத்தில்  கண் மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்காக தனக்கு சொந்தமான நிலத்தை இலவசமாக கொடுத்தது மட்டுமின்றி அந்த மருத்துவமனை அமைய பெரும் தொகை ஒன்றையும் வழங்கினார்.

எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனை என்ற பெயரிலே இயங்கும் அந்த மருத்துவ மனை இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவ மனைகளில் ஒன்றாக உள்ளது.

எண்ணற்ற திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள எல்.வி.பிரசாத்தின் கலைச் சேவையைப் பாராட்டி திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப் படுகின்ற உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை இந்திய அரசாங்கம்  1982ஆம் ஆண்டில் எல்.வி.பிரசாத்துக்கு வழங்கியது.

சிறிது காலம் உடல் நலக் கோளாறினால் அவதிப்பட்ட எல்.விபிரசாத் தனது 86 வது வயதில்  1994ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் பம்பாய்க்கு ரயில் ஏறிச் சென்று அதற்குப் பிறகு எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு பிரசாத் என்ற பெயரிலே திரைத்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி அந்தப்  பெயரை  இந்தியா முழுவதும் அறியச் செய்த எல்.வி.பிரசாத்,  இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று சினிமாத்துறையில் பல பிரிவுகளிலும் சாதனை புரிந்திருந்தாலும் சினிமாவில் அவருக்கு மிகவும்  பிடித்தமாக இருந்தது நடிப்புதான்.

தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்தவர்கள் பலர். சகாப்தமானவர்கள் சிலர். அந்த சிலரில் எல்வி பிரசாத் ஒருவர்.

தொகுப்பு : ஜி.பாலன் 



இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் வாழ்க்கை வரலாறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்துள்ள கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் வசித்த வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் தம்பதிக்கு மகனாக 1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி பிறந்தவர் மகாதேவன்.

கே.வி.மகாதேவனின் தாத்தா ராம பாகவதர் அந்த நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரது தந்தை வெங்கடாசலமும் புகழ்பெற்ற பாகவதர். இசைக்கலை இவர்களது குடும்பச் சொத்து. அதனால் சிறுவயதிலேயே இசை அவருக்குள்ளும் வந்தது. இசைமீது மகனுக்கு இருந்த ஆர்வம் காரணமாக தந்தையே முதல் குருவாக இருந்து ஆரம்ப பாடத்தை கற்றுக்கொடுத்தார்.

வடசேரியில் இருந்த எஸ்.எம்.ஆர்.வி. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட மகாதேவன், சங்கீதம் படிக்க பூதப்பாண்டி கிராமத்தில் வசித்து வந்த அருணாச்சலக் கவிராயர் என்பவரிடம் சென்றார்.

வாய்ப்பாட்டைத் தவிர நாதஸ்வரம், தவில், பம்பை, முரசு, புல்லாங்குழல், ஹார்மோனியம், மோர்சிங், ஜலதரங்கம், வீணை, வயலின், கொன்னக்கோல், கோட்டுவாத்தியம் ஆகியவற்றையும் கற்றுக்கொண்ட மகாதேவன், சிறுவயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்யும் அளவுக்கு இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார்.

பாட்டு மகாதேவனை ஈர்த்த அளவுக்கு படிப்பு அவரை ஈர்க்கவில்லை. இந்த நிலையில் ஒருநாள் சென்னையில் இருந்து வந்த பால கந்தர்வ கானசபா என்ற நாடகக் குழுவினர் பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயரை தொடர்பு கொண்டு நன்றாகப் பாடத்தெரிந்த யாராவது இருந்தால் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்வதாக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்க, அவருக்கு மகாதேவனின் நினைவு வந்தது.  உடனே மகாதேவனின் முகவரியை கொடுத்திருக்கிறார்.

"நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னைக்கு சென்றால் நன்றாக முன்னுக்கு வரலாம். ஒரு தியாகராஜ பாகவதர் மாதிரி.. நாமும் நன்னா பெரிய லெவல்லே வரலாம்." - பதினான்கு வயசு மகாதேவனின் மனசுக்குள் கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது. அதே சமயம் வீட்டிலோ மூத்த மகனை அப்படி அனுப்ப மனமில்லை.  ஆனால் மகாதேவன் மனதிலோ நாடகக் கம்பெனியில் சேரவேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்திருந்தது. பெற்றோருக்கு சமாதானம் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தார்.

சென்னை  வந்த மகாதேவனுக்கு பாலகந்தர்வ நாடக சபா நாடககுழு நடத்திய நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசை ஞானம் நிரம்பப் பெற்ற மகாதேவனின் சாரீர வளம் அவனது திறமையை வெளிப் படுத்த உதவியது. ஆனாலும், நாடகத்திற்கு வசூல் இல்லை என்று தினம் சாப்பாடு சாப்பிடுவதற்கே அனைவரும் கஷ்டப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் நம்பி வந்த நாடக கம்பெனி நஷ்டத்தில் இழுத்து மூடப்பட்டதும், ஊருக்கு திரும்ப மனமில்லாமல்,  வடசென்னையில் வால்டாக்ஸ் ரோட்டின் கடைசியில் இருந்த யானை கவுனியில் ஒரு ஹோட்டல் வேலைக்கு சேர்ந்தார் மகாதேவன்.

நடிக்க வந்த மகாதேவனனுக்கு ஓட்டலில், "சார்  சாப்பிட்டது  ரெண்டு தோசை.. ஒரு காப்பி.. ரெண்டரை அணா"  -  என்று ஒரு அறிவிக்கும் சர்வர் வேலை.

ஓட்டலில் வேலைப் பார்த்துக் கொண்டே நாடகங்களில் நடிக்கவும், வாசிக்கவும் முயற்சி செய்தார். பெருசாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சின்ன சின்ன வாய்ப்புகள் அவ்வப்போது கிடைத்தன. அப்படியே நான்கு ஆண்டுகள் ஓடின. ஒருமுறை  "திருமங்கை ஆழ்வார்" என்ற படத்தில் துவார பாலகர்களில் ஒருவராக தோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. நடித்தார்.

பாய்ஸ் நாடக கம்பெனி போலவே "ஸ்பெஷல் நாடகக் கம்பெனி"களும் இயங்கி வந்தன. அதாவது மிகப் பிரபலமான நாடக நடிகர் - நடிகையர்கள் தங்களுக்கென்று தனிக்குழுவை அமைத்துக்கொண்டு நடத்தும் நாடகங்கள். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர் இப்படி ஸ்பெஷல் நாடகக் கம்பெனிகள் மூலம் பிரபலம் ஆனவர்கள். அதுபோல ஒரு "ஸ்பெஷல்" நாடகக் குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது.

தொடர்ந்து அந்த நாடக்குழு நடத்திய நாடகங்களுக்கு ஊர் ஊராக சென்று ஹார்மோனியம் வாசித்த மகாதேவன், கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் நாடகம் நடந்த போது அங்கும் உற்சாகமாக வாசித்தார்.

அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்து மகாதேவன் திறமையை கவனித்தவ இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கடராமன், நாடகம் முடிந்த பிறகு மகாதேவனை மனமார பாராட்டியதுடன், தான் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நந்தகுமார் படத்துக்கு இசையமைக்க இருப்பதகாவும், அதில் தன்னுடன் இணைந்து பணியாற்றும்படியும் அழைப்புவிடுத்தார். 

நந்தகுமார் படத்தில் இசையமைப்பாளராக எஸ்.வி.வெங்கடராமன் அறிமுகமானார். அவரிடம் உதவியாளராக மகாதேவன் பணியாற்றினார். முதல் முறையாக டி.ஆர்.மகாலிங்கம், டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த அந்தப் படத்தில் முதல் முறையாக பின்னணி பாடும் முறையை அறிமுகம் செய்யப்பட்டு, அதில் முதல் முறையாக பின்னணிப் பாடினர் லலிதா வெங்கட்ராமன்.

நந்தகுமார் படம் எதிரப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததடுத்து வந்த படங்களின் தோல்வி கருத்து வேறுபாடுகளினால் ஏவி.எம்.நிருவனத்தைவிட்டு எஸ்.வி.வெங்கடராமன் வெளியேறினார். இதனால், டி.ஓ.சுப்பாராவ் என்ற இசை அமைப்பாளரிடம் சேர்ந்து அவரிடம் சிறிது காலம் வேலை செய்த மகாதேவன், பிறகு டி.ஏ.கல்யாணத்திடம் வந்து சேர்ந்தார்.

சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இசை அமைப்பாளராக டி.ஏ.கல்யாணம் பணியாற்றினார். அங்கு மனோன்மணி படம் உருவான போது அந்தப் படத்திற்கு இசையமைத்த டி.ஏ.கல்யாணம், மகாதேவனிடம் நீ ஒரு பாட்டுக்கு டியூன் போடு என்று கூறி இருக்கிறார்.

தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு “மோகனாங்க வதனி" என்று துவங்கும் பாபநாசம் ராஜகோபால அய்யரின் பாடளுக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அந்தப் பாடலைக் கேட்ட கதாநாயகன் பி.யு.சின்னப்பா கே.வி.மகாதேவனை அழைத்து பாராட்டியதுடன் அந்தப் பாடலில் உணர்ச்சிப் பொங்கும் குரலில் பாடி நடித்தார்.

டி.ஏ.கல்யாணம் இசையமைத்த படத்தில் உதவியாளராக இருந்து ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்து இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவன் அறிமுகமான ஆண்டு 1942 ஆம் ஆண்டு.

அதன் பிறகு,  டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து மாயஜோதி, சிவலிங்க சாட்சி ஆகிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களுக்கு பணியாற்றிய கே.வி. மகாதேவன். ஜி.ராமநாதன் இசையமைத்த ஆனந்தன் அல்லது அக்னிபுராண மகிமை என்கிற படத்துக்கும் இசையமைத்தார்.

அதன் பிறகு எழுத்தாளர் பி.எஸ்.ராமையா இயக்கிய ‘தன அமராவதி’ படத்திற்கு தனியாக இசையமைத்தார், கே.வி.மகாதேவன். அந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் அறிமுகமான ஜே.பி.சந்திரபாபுவை “உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது” என்கிற பாடலை பாடவைத்தார். அந்தப் படத்தில் நடித்த பி.எஸ்.சரோஜாவிற்காக வைக்கம் சரஸ்வதி என்கிற பாடகியை பின்னணி பாட வைத்தார்.

அடுத்து இசையமைத்த ‘தேவதாசி’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு 1953 ஆம் ஆண்டு வெளியான ‘மதன மோகினி’ படத்தில் பனிரெண்டு பாடல்களுக்கு இசையமைத்தார். அதில் நான்கு பாடல்களை பாடியவர், பி. லீலாவுடன் இணைந்து பாடிய “கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி" என்கிற பாடல் அவருக்கு பெரும் புகழ் ஈட்டி தந்தது.

1952 ஆம் ஆண்டு ஆர்.பதமநாபன் தயாரித்து, இயக்கிய ‘குமாரி’ படத்துக்கு இசையைத்து, அதில் இடம் பெற்ற ‘ஆணுக்கு பெண் வேணுமே’ என்கிற பாடலையும் பாடி இருந்த மகாதேவன், இரண்டு பாடல்களை பாடவைத்து ஏ.எம்.ராஜாவை பாடகராக அறிமுகம் செய்தார். கதாநாயகனாக எம்.ஜி.ஆரும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீரஞ்சனியும் குமாரி படத்தில் நடிக்க, மகாராணியாக மாதுரிதேவியும் அவரது தம்பியாக டி.எஸ். துரைராஜும் நடித்தனர்.

அடுத்து.எம்.எல். பதி இயக்கத்தில் ‘மதன மோகினி’ என்ற படத்துக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன். நரசிம்மபாரதி, சி. ஆர். ராஜகுமாரி நடித்த இந்தப்  படத்துக்கு இசை அமைக்கும் போது  ஒரு டூயட் பாடலைப் பாட பி. லீலா பாடல் பதிவுக்கு வந்து விட்டார்.  ஆனால் பாடவேண்டிய ஆண் பாடகர் வரவே இல்லை.  அதனால், கே.வி. மகாதேவனே பி. லீலாவுடன் இணைந்து பாடிவிட்டார்.  இந்த ஒரு பாடல் என்று இல்லை.  படத்தில் கதாநாயகனுக்கான மூன்று பாடல்களையுமே கே.வி. மகாதேவனே பாடிவிட்டார்.

ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப் பட்ட  "கண்ணோடு கண்ணால் ரகசியம் பேசி” என்று தொடங்கும் பாடலில் கே.வி. மகாதேவனின் குரல் இனிமை கேட்பவரை பிரமிக்க வைத்தன.

நடிகை மாதுரி தேவி தயாரித்து நடித்த ரோஹினி, ஏ.பி.நாகராஜன் கதை எழுதி நடித்த நாலவர், மாங்கல்யம், எம்.கே.ராதா நடித்த நல்லகாலம், எம்.ஜி.ஆர். – சிவாஜி நடித்த கூண்டுக்கிளி என பள படங்கள் வந்தாலும் அடுத்த வெற்றி படமாக எம்.ஏ.வேணு தயாரித்த "டவுன் பஸ்" படம் 1955-இல் வெளிவந்தது.   கண்ணப்பா - அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த அந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள் வெற்றிக்கு உதவின.

அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” பாடல் பெரும் புகழ் பெற்ற பாடலாகும். இந்த பாடலுக்கு மிகக் குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு அவர் இசையமைத்திருந்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தில் ஏ.மருதகாசி எழுதிய “மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா” என்கிற பாடல் கே.வி.மகாதேவனை இன்னும் உயர்த்தி அழகுப் பார்த்தது. அடுத்து வந்த ‘முதலாளி’ படத்தில் இடம்பெற்ற “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே” பாடல் திக்கெட்டும் பரவியது.

மக்களை பெற்ற மகராசி படத்தில், டி.எம்.சௌந்தரராஜன் பாடிய “மணப்பாற மாடுகட்டி”, “போறவளே போறவளே பொன்னுரங்கம்”, நடிகை பானுமதி பாடிய “சொன்ன பேச்ச கேக்கணும்”, சீனிவாஸ் பாடிய “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா”, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ஓ மயிலக்கா என எல்லா பாடல்களும் புகழ் பெற்ற பாடல்களாக, கேட்கக் கேட்கத் திகட்டாக மண்மணம் கமழும் பாடல்களாக  அமைந்தன.

நல்ல இடத்து சம்பந்தம், படிக்காத மேதை, சாரதா, இருவர் உள்ளம், வானம்பாடி, திருவிளையாடல், இதயக் கமலம், தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, சங்கராபரணம், சம்பூர்ண ராமாயணம், அடிமைப்பெண், வசந்தமாளிகை, குலமா குணமா, கண்கண்ட தெய்வம், கைதி கண்ணாயிரம்,  அன்னை இல்லம், விளையாட்டுப் பிள்ளை என பல படங்களின் மகத்தான வெற்றிக்கு கே.வி.மகாதேவனின் இசையமைப்பும் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இவரது இசையில் எத்தனை எத்தனை பாடல்கள் காலம் கடந்து காற்றின் பெருவெளிக்கு கவுரவம் செய்திருக்கின்றன. மிஸ்ர யமன் ராகத்தில் ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே’, அரபி ராகத்தில் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’, மோகனத்தில் ‘மலர்கள் நனைந்தன பனியாலே’, கல்யாணி ராகத்தில் ‘மன்னவன் வந்தானடி’, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘கோமாதா எங்கள் குலமாதா’ என்று ராகங்களுக்கு இவர் செய்த ஆராதனையின் பட்டியல் அடங்க மறுக்கும்.

சுத்தமான கர்நாடக இசையில் பாடல்கள் அமைத்தால் “இது என்ன பாகவதர் காலமா?” என்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நேரத்தில் செந்தேனாக கர்நாடக இசையைத் திரையிசையில் குழைத்துத் தந்தவர்தான் ‘திரை இசைத்திலகம்’ என்று அனைவராலும் முடிசூட்டப்பட்ட கே.வி.மகாதேவன். 1965-ல் அவரது இசையமைப்பில் வெளிவந்த ‘திருவிளையாடல்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலை மறக்க முடியுமா?

தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடக மேடைக்காக எழுதிய விருத்தப் பாடல் அது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு, முழுமையாக ஒரு ராகத்துக்குள் பொருத்தி, கே.பி. சுந்தராம்பாளைப் பாடவைத்து பண்டிதர் முதல் பாமரர்வரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு நம்பிக்கையும் துணிவும் ஒரு இசை அமைப்பாளருக்கு இருந்திருக்க வேண்டும்! அது கே.வி. மகாதேவனுக்கு இருந்தது. அதனால் அவரால் அந்தப் பாடலை ஒரு வெற்றிப்பாடலாகக் கொடுக்க முடிந்தது.

திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருத்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை” என்ற அழுத்தமான கருத்தைப் பலதரப்பட்ட பாடல்கள் மூலமாக நிரூபித்திருக்கிறார். புன்னாகவராளி ராகத்தில் “நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே” என்று கர்நாடகரீதியில் அமைத்தவர் அதே ராகத்தைப் பயன்படுத்தி ‘எலந்தப் பயம்’ என்ற ‘பணமா பாசமா’ படத்தின் பாடலை அமைத்து பாமர மக்களின் இதயத்தையும் வென்றிருக்கிறார்.

கர்நாடக இசையின் பெருமையைத் திரைப்படங்களின் மூலம் எடுத்துக் காட்டியவர்களில் கே.வி.மகாதேவனும் ஒருவர். கிராமியப் பாடல்களுக்கு-கிராமிய இசைக்கு முக்கியத்துவம் ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

தனது பாடலை நன்றாகப் பாடிவிட்டால் பாடகரை உடனே பாராட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதே நேரத்தில் வெற்றிபெறும் பாடல்களால் தேடி வந்தபடியிருக்கும் பாராட்டுக்களைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார். பணிவும் இனிமையும் எளிமையும் கே.வி.மகாதேவனே.

‘மன்னவன் வந்தானடி’ பாடலுக்காக அவரைப் பிரபல வீணை இசைமேதை எஸ்.பாலச்சந்தர் மனமார பாராட்டியபோது, “இதை போய்ப் பெரிசாச் சொல்லறேளே.. ‘அம்பிகாபதி’ படத்துலே பெரியவர் ‘இசைச் சக்கரவர்த்தி’ ஜி.ராமநாதன், ‘சிந்தனை செய் மனமே’ன்னு போட்ட பாடல் இன்னும் நம்ம சிந்தனையக் குடைஞ்சுகிட்டு இருக்கே! அது கல்யாணி. அதுக்கு முன்னாலே நான் போட்டது வெறும் கடையாணி” என்றார் கே.வி.மகாதேவன்.

ஒரு கோரஸ் பாடகியாக இசை வாழ்க்கையைத் தொடங்கிய எல்.ஆர். ஈஸ்வரியை முதன்முதலாகப் பின்னணிப் பாடகியாக ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தின் மூலமாக அறிமுகம் செய்தவர் கே.வி.மகாதேவந்தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதன்முதலாகச் சொந்தக் குரலில் ‘அம்மா என்றால் அன்பு’ பாடலைப் பாடவைத்தவரும் அவரே.  ‘ஆயிரம் நிலவே வா’ பாடலின் மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இங்கே அறிமுகம் செய்தவரும் அவர்தான்.

“கர்நாடக இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அதிக அனுபவம் இல்லாதது தெரிந்தும், ”சங்கராபரணம்” படத்தின் கதாநாயகன் சோமையாஜுலுவின் சாரீரத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல்தான் பொருத்தமாக இருக்கும் என்று கே.வி.மகாதேவனும் அப்படத்தின் இயக்குநர் கே.விஸ்வநாத்தும் தீர்மானம் செய்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சற்று கடினமான பயிற்சி அளித்து பாடச் செய்தார். அவரும் சிரமப்பட்டு அக்கறையுடன் நன்கு பாடி கே.வி.மகாதேவனுக்கு வெற்றி தேடி கொடுத்தார்”.

கலைஞர்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல; தனது இசையில் அமைத்த ஒரு அருமையான மெட்டு மக்களிடம் சரியாகச் சென்று சேரவில்லை என்றால் அந்த மெட்டை எப்படியாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார் அவர்.

‘எங்க வீட்டுப் பெண்’ பி. நாகிரெட்டியார் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த படம். இந்தப் படத்துக்காக ‘கால்களே நில்லுங்கள்’ என்று ஒரு அருமையான மெலடி பாடலை கொடுத்திருந்தார். ஆனால், படம் சரியாகப் போகாததால் பாடல் எடுபடாமல் போனது. நல்ல ஒரு டியூன் இப்படி எடுபடாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அவர் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

பிற்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின் வெற்றிப் படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு இசை அமைக்கும்போது ‘கால்களே நில்லுங்கள்’ மெட்டையே சிறிய மாறுதல் செய்து சற்று வேகமான தாள கதியில் பாடலை அமைத்து வெளியிட்டபின் அந்தப் பாடலின் வெற்றியை ரசித்தார். அந்தப் பாடல்தான் ‘பட்டிக்காடா பட்டணமா’.

பாடலுக்கான சரணத்தை அமைக்கும்போது, கடைசி வரியை வாத்தியங்கள் இல்லாமல் நிசப்தமாக அமைத்து மறுபடியும் பல்லவிக்குத் திரும்பும்போது தாளத்தில் ஒரு ‘பீட்’ முத்திரை கொடுப்பது கே.வி.மகாதேவனின் பாணி.

எந்தப் பாடலிலும் சரணத்தின் கடைசி வரி பாடலின் மையக்கருத்தாக அமையும். அந்த மையக்கருத்தை இப்படிப்பட்ட தாளம் மற்றும் மவுன இடைவெளியுடன் அமைக்கும்போது அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதியவைக்க முடியும். உதாரணமாக ‘வசந்த மாளிகை’ படத்தில் வரும் ‘மயக்கமென்ன’ பாடலின் இறுதிச் சரணத்தில் வரும் கடைசி வரிகள் இப்படி இருக்கும்.

‘உன் உள்ளம் இருப்பது என்னிடமே - அதை

உயிர் போனாலும் தரமாட்டேன்’

இந்த வரிகளை பி.சுசீலா பாடும்போது ‘உயிர்போனாலும்’ என்ற வார்த்தைகளுக்குத் தனி அழுத்தம் கொடுத்து அந்த வரிகளை நிசப்தமாக அமைத்து அழுத்தமான காதலைக் கேட்பவர் மனதில் பதியவைத்திருப்பார் கே.வி.மகாதேவன்.

1962 ஆம் ஆண்டு ‘மான்சி மனசுலு’ படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி அதில் இடம் பெற்ற "மாமா மாமா மாமா" பாடல் மூலம் புகழ் பெற்றார். அதன் விளைவாக, தெலுங்கு திரையுலகம் அவரை அன்புடன் "மாமா" என்று அழைக்கத் தொடங்கியது. சில ரிதங்களுக்கு ‘மாமா ரிதம்’ என்றே சில இசையமைப்பாளர்கள் அழைக்கின்றனர். அனதலவுக்கு அவரதி ரிதம் புகழ்பெற்றது.

தெலுங்கு மொழிளில் அதிகப் படங்களுக்கு இசை அமைத்திருக்கும் கே.வி.மகாதேவன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் அறுநூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஐந்து படங்களில் ஒன்பது பாடல்களை பாடி இருக்கும் கே.வி.மகாதேவன், திரையிசை என்பது மனதைச் சுகமாக வருடும் தென்றல் போன்ற உணர்வை தருவது என்று சொன்னவர். .

இசை அமைப்பாளர்களுக்கான தேசிய விருது முதன்முதலாக 1967ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபோது முதல் வருடமே கந்தன் கருணை படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். பின்னர் ‘சங்கராபரணம்’ படத்துக்காக இரண்டாம் முறை தேசியவிருது பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள கே.வி.மகாதேவன், தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை அடிமைப் பெண் படத்திற்காக பெற்றார். ஆந்திர அரசின் நந்தி விருதினை, மூன்ருமுடை பெற்றுள்ள கே.விமகாதேவன், திரை இசைத் திலகம்’, ‘இசைச் சக்கரவர்த்தி’, ”ஸ்வரப் பிரம்மம்’ போன்ற பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

கே.வி.மகாதேவன் இசை அமைத்த பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் “தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ”அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே” என்ற பாடல்.

கே.வி.மகாதேவனிடம் உதவியாளராக இருந்த டி.கே.புகழேந்தி என்பவர் ‘குரு தட்சணை’ உட்பட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.வி.மகாதேவனுக்கு மனைவியும், மூன்று மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். இதில் கண்ணன் என்கிற மகன் மாசிலாமணி படத்தில் நீதிபதியாக நடித்தவர்.

வாத நோயால் தாக்கப்பட்ட கே.வி.மகாதேவன் 1992-க்குப் பின்னர் இசையமைக்கவில்லை. திரையுலகினரால் “மாமா” என்றழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன் 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி தனது 83-ஆவது வயதில் மறைந்தார்.

 தொகுப்பு : ஜி.பாலன்