ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனின் இயற்பெயரைத் தமிழ் ரசிகர்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை இவரது இயற் பெயர் சீனிவாச சார்ஜா. இவரது இன்னொரு பெயர் அசோக்பாபு.

1962 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மைசூரில் பிறந்த சக்தி பிரசாத், லட்சுமி தேவி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் அர்ஜுன். அர்ஜுனின் அம்மா லட்சுமிதேவி ஆசிரியராக இருந்தார். அப்பா சக்தி பிரசாத் கன்னடப் படங்களில் வில்லன் மற்றும் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 

பள்ளியில் படிக்கும் போது போலீசில் சேர வேண்டும் என்பது அர்ஜுனின் ஆசையாக இருந்துள்ளது. புரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் படம் பார்த்ததில் இருந்து கராத்தே மீது இவருக்கு ஆர்வம் பிறக்க தனது  பதினாராவது வயதில் கராத்தே பயிற்சி பெற்ற அர்ஜுன் அதில் கருப்பு பெல்ட்டும்  பெற்றார்.

இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு கன்னடத்தில் ‘சிம்மதா மரி சைன்யா'  என்கிற படத்தை தொடங்கினார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவான அந்தக் கதையில் துடிப்பும் வேகமும் உள்ள ஒரு சிறுவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க தேவைப்பட்டான்.

அவரது தேடலில் கிடைத்தவர்தான் அர்ஜுன். பையன் படிக்கட்டும். நடிப்பு வேண்டாமே என்று அர்ஜுன் தந்தை தயங்கி இருக்கிறார். இது குழந்தைகள் படம் என்று அவரை சமாதனப் படுத்தி சீனிவாச சர்ஜா என்கிற அர்ஜுன் பெயரை அர்ஜுன் என்று மாற்றி அந்தப் படத்தில் மாஸ்டர் அர்ஜுனாக நடிக்க வைத்தார், ராஜேந்திர சிங் பாபு.

அம்ரிஷ் பூரி வில்லனாக நடித்த அந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காட்டில் நடந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஐநூறு அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி அர்ஜுன் சென்ற காட்சி பரபரப்பானது. 1981 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது.

அதன் பிறகு அர்ஜுனுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அவரது தந்தை ஒரு நடிகராக இருந்த போதிலும் அர்ஜுன் சினிமா துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. அதனால், இளம் வயதில் அவருக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார் அவர்.

அதற்கு காரணம், அர்ஜுனின் தந்தை இருநூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். வில்லன், துணை கதாப்பாத்திரங்கள் என்று நடித்தாலும் வாழ்க்கை வெற்றிகரமானதாக மையவில்லை. தன்னைப் போல மகன் போராட்டமான வாழ்க்கை வாழ வேண்டாம். இங்கு கஷ்டம் அதிகம். சினிமாவுக்கு வருகிற எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடிவதில்லை. சினிமாவுக்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய பேர் போராடுகிறர்கள். அந்த நிலை உனக்கு வர வேண்டாம் என்று தடுத்தார்.

ஆனால், அம்பரிஷ் விடவில்லை. அவர் நடித்த ‘ஆஷா’ படத்தில் அர்ஜுன்  நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அம்பரிஷ் வார்த்தையை  நிராகரிக்க முடியவில்லை. ஏ.டி.ரகு என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக இந்திரா நடித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அந்த ஒரு படம் கொடுத்த வெற்றி ஐந்து கன்னடப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார், அர்ஜுன். அதில் அவர் நடித்த ‘பூஜா பலா’ என்கிற படத்தில் அவருடன் நடித்தவர், ஏவி.எம்.ராஜனின் மகள் மகாலட்சுமி. அவர், அர்ஜுனின் திறமையைப் பார்த்து அசந்து போனவர், அதே ஆண்டில் அவரது அப்பா ஏவி.எம்.ராஜன் தயாரிப்பில் ராமநாராயணனின் இயக்கத்தில் உருவாக இருந்த ‘நன்றி’ படத்தில் அர்ஜுன் நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார்.

ஏவி.எம்.ராஜனும், மகாலட்சுமியும் அர்ஜுனின் திறமையைப் பற்றி சொல்லியதை கேட்டு அர்ஜுனை நேரில் அழைத்துப் பார்த்த இயக்குநர் ராம நாராயாணன், கார்த்திக் கதாநாயகனாக நடிப்பில் உருவான ‘நன்றி’ படத்தில் இன்னொரு நாயகனாக வாய் பேசாத வேடத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ஏவி.எம்.ராஜனின் மகள் மகாலட்சுமி, சாரதா என்கிற ஸ்கூல் டீச்சராகவும் நடித்திருந்தார்.

இந்த நன்றி திரைப்படம் தமிழில் அர்ஜுனுக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்று தந்தது. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடிக்க காரணமாக அமைந்தது.

தமிழ், கன்னட படங்களில் அர்ஜுனின் திறமையைப் பார்த்த தெலுங்குபட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா, அவர் இயக்கிய மா பல்லிலோ கொபாளுடு படத்தின் மூலம் தெலுங்கு மொழியிலும் அறிமுகமானார் அர்ஜுன்.

தமிழில் ராம நாராயணன், சோழராஜன் ஆகியோரது படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக தொடர்ந்து நடித்து வந்த அர்ஜுனை, கதாநாயகனாக யார் படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் ஆக்சன் கிங் என்று விளம்பரப் படுத்தினார்.

அதன் பிறகு தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தது ஏவி.எம்.நிறுவனம். அவர்கள் தயாரித்த சங்கர் குரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இயக்குநர் எல்.ராஜா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தார் அர்ஜுன்.   

அர்ஜுனின் பல படங்கள் தமிழில் இருந்து தெலுங்கிலும், தெலுங்கில் இருந்து தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகின.

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த போது சேவகன் என்கிற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தது மட்டுமின்றி அந்தப்படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றார்.  அந்தப் படம் இவருக்கு இயக்குனர் நடிகர் என இரு தகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்தது.

சேவகன் படத்தின் வெற்றியைக் கண்டு அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. தோல்வியில் இருந்த போது வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று யாரும் வரவில்லை. நமக்காக வெற்றி படம் கொடுத்ததும் வெற்றியை வைத்து தேடி வருகிறார்கள் என்று ஆத்திரப்பட்ட அர்ஜுன், வந்த வாய்ப்புகளை மறுத்து, இனி தானே சொந்தமாக கதை எழுதி தயாரித்து இயக்கி நடிப்பது என்கிற முடிவில் இருந்தார்.

அப்போது இயக்குநர் ஷங்கர் அணுகி ஜென்டில்மேன் கதையை சொல்ல முயன்ற போது முதலில் கதை கேட்கவே தயங்கியவர், பிறகு, கதையை கேட்டு நடிக்க சம்மதித்தார். 1993-ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றி அர்ஜுனின் திரைவாழ்வில் அவருக்கு மிகப் பெரிய உயரத்தைப் பெற்றுத் தந்தது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விர்தும் பெற்றார்.

அதே ஆண்டு வெளியான 'பிரதாப்', 'கோகுலம்' திரைப்படங்களும் வெற்றிபெற்றன 1994-ல் அவர் இயக்கி நடித்த 'ஜெய் ஹிந்த்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தியத் தேசப்பற்றை முன்னிறுத்திய அந்தப் படம் தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல காவல்துறைப் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.

1995-ல் அர்ஜுன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து இயக்கிய 'கர்ணா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் அனைத்துப் பாடல்களும் புகழ் பெற்றன.

சிறுவயதிலிருந்தே கமலின் ரசிகரான அவருக்கு கமல்ஹாசன் தயாரிபில் நடிக்கும் வாய்ப்பு குருதிப்புனல் படத்தில் கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய அந்தப் படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக 68வது அகடாமி விழாவில் திரையிடப்பட்டது. இதில் அர்ஜுனின் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அடிமை சங்கிலி படத்தில் நடித்தவர், சிவாஜியுடன் இணைந்து மன்னவரு சின்னவரு என்கிற தனது நூறாவது படத்தில் நடித்து பெருமைப்பட்டார்.

அதன் பிறகு ரஜினி மறுத்த முதல்வன் கதையில் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடித்தார், அர்ஜுன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து அவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதிணை பெற்று தந்தது.

வஸந்த் இயக்கத்தில் 2000-ம் ஆண்டில் வெளியான 'ரிதம்' வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அர்ஜுனின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அதன் பிறகு வெளியான வானவில், 'ஏழுமலை', ஒற்றன், 'கிரி', 'மருதமலை' போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தாலும், அதில் 'கிரி', 'மருதமலை' படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்து சிரிக்க வைத்தார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் 'பொம்மலாட்டம்' படத்தில் நானா படேகருக்கு இணையான வேடத்தில் நடித்த அர்ஜுன், 2011-ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் 50-ம் படமான 'மங்காத்தா' படத்தில் எதிர்மறை அம்சங்கள் நிரம்பிய நாயகனை எதிர்க்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியும் அரசுனுடைய கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பும் அவருடைய திரைப்பாதையில் மாற்றத்துக்கு வித்திட்டன.

2013-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் தீமையின் மனித உருவமாக நடித்து அசத்தினார்.

2016-ல் வெளியான மிகப்பெரிய வெற்றிபெற்ற 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அறிவும் மிடுக்கும் நிறைந்த வில்லன் கதாபாத்திரங்களுக்கான மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறார் அர்ஜுன்.

அர்ஜுன் கன்னடத்தில் நடித்த பிரசாத் என்கிற படம் கர்நாடக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று தந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 160 படங்களில் நடித்துள்ள அர்ஜுன், 14 படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார். ஒன்பது படங்களை தயாரித்திருக்கும் அவர், 12 படங்களை இயக்கி இருக்கிறார். 

மற்ற கதாநாயகர்களைப் போலவே பாடகராகவும் அவதாரம் எடுத்த அர்ஜுன் இதுவரை ஏ.ஆர்.ரகுமான், சங்கர் கணேஷ், வித்யாசாகர், தேவா ஆகியோரது இசையமைப்பில் ஐந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்.

இவரது மனைவியின் பெயர் ஆஷாராணி. இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இருமகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா, விஷால் கதாநாயகனாக நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக 2௦12ஆம் ஆண்டு  அறிமுகமானார். அதன் பிறகு அர்ஜுன் இயக்கிய சொல்லிவிடவா படத்தில் தமிழ், மற்றும் கன்னட பதிப்பில் நடித்திருக்கிறார்.

கதாசிரியர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் திரையுலகில் வெற்றிகரமாக பவனி வரும் அர்ஜுன் கடந்த நாற்பது ஆண்டுகளாக நீடித்து இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இவரது நடிப்புத் திறமை மட்டுமல்ல இவரது பழகும் தன்மைக்கும் அதில் முக்கிய பங்குண்டு.   

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

பாடகர் மனோ

பிரபல பின்னணி பாடகர் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் . தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். இதனால் சிறு வயதிலிருந்தே நடிப்பும், பாடும் திறனும் இவருக்கு இயல்பாகவே  அமைந்தது.

பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசையை பயின்ற இவர். 1970 ஆம் ஆண்டில் ரங்கூன் ரவுடி மற்றும் கேது Gadda போன்ற தெலுங்கு படங்களில் துணை பாத்திரங்களில் நடித்தார்  அதைத் தொடர்ந்து நாடகங்களிலும், பதினைந்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும் நடிக்க  இவருக்கு வாய்ப்பு கிடைத்தது .

தந்தையின் உதவியால், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்க, அவரது இசையில்  பாடுவதற்காக சென்னை வந்தார்.இவர்  அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்த இவர்,  1984ஆம் ஆண்டுமுதல்  தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார்.  அவரதி இசையில் உருவான கற்பூரதீபம் என்கிற படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா இசையில் ஒரு பாடலை பாடினர்.

1986ஆம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற  "அண்ணே அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" பாடல்களைப பாடும் வாய்ப்ப்களை இவறுக்குத் தந்தார்  இளையராஜா. இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை தந்தன .  

ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா", "வேலையில்லாதவன்" போன்ற பாடல்கலை பாடினர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா", முத்து படத்தில் "தில்லானா தில்லானா" பாடல்களை பாடினர். சிற்பி இசையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் "அழகிய லைலா", வித்யாசாகர் இசையில் கர்ணா படத்தில் "ஏ ஸபா" போன்ற பாடல்களை பாடினர். இந்தப் பாடல்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடும் வாய்ப்பினைப் பெற்றார் இவர் .

கே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா, ஜானகி ஆகிருடன் இணைந்து ஏராளமான டூயட் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, இந்தி ஆகிய மொழிகளில் 1,200 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இவர்   250 நாடகங்களிலும், 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்

கமல் நடித்த அத்தனை படங்களுக்கும் தெலுங்கு மொழியில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்தார் என்றால்   ரஜினி நடித்த பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவர் இவர் .

அனைத்து இசையமைப்பாளர்களுடனும் அவர் பணியாற்றினாலும், இசைஞானி இளையராஜா இசையில்தான் இவர் அதிகம் பாடியுள்ளார். நாகூர் பாபு என்கிற இவரது பெயரை மனோ என்று மாற்றி வைத்தவரும்  இசைஞானி இளையராஜாதான்  

கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள இவர் இப்போது சின்னத்திரையில்  நடக்கும் இசைப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவராக இருக்கிறார்.

சின்னத் தம்பி படத்தில் பாடிய "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்ற இவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும்  ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற விருதுகளையும் பெற்ருள்ளார்  


இவரது மனைவியின் பெயர்  ஜமீலா.  இவர்களுக்கு  ஷாகீர், ராபி என்கிற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனோவின் பாடல்களில் மட்டுமின்றி பழகும் தன்மையிலும் இனிமை இருக்கும் இவரது வெற்றியின் ரகசியம் அதுதான் என்றால் அது மிகையில்லை  

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

வெண்ணிற ஆடை மூர்த்தி


வெண்ணிற ஆடை மூர்த்தி

நடிகர், வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை  இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர்

இவரது தந்தையான    கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர். தந்தை வழியில் இவரும் வழக்கறிஞருக்கு படித்தார்.

சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய விருப்பம் இல்லாமல், அப்போது சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த "ரெமிங்டன்'' டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சென்றார் இவர்

ஊர் ஊராக சுற்ற வேண்டிய வேலை என்பதால், ஒரு வருடத்திற்கு மேல் அவரால் அந்த வேலையில் நீடிக்க முடியவில்லை. வேறு வேலை தேடிக் கொண்டிருந்த போதுதான்  இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தியின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் அவரை சந்தித்த இவர் சக்ரவர்த்தி  இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றுவது தெரிந்ததும் ஸ்ரீதர் படத்தில் நடிக்க தனக்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று அவரிடம் கேட்டார்.   தான் தங்கியிருந்த ஓய்.எம்.சி.ஏ.வில் மூர்த்தி நடித்த நாடகங்களை சக்ரவர்த்தி பார்த்திருக்கிறார் என்பதால் மறுநாள் சத்ரின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்திக்குமாறு இவரிடம் கூறினார்  அவர்

 இயக்குநர் ஸ்ரீதரை இவர் சந்தித்தபோது நீ ஏன் காமடி ரோலில் நடிக்க வேண்டும் உனக்கு அதற்கான முகம் இல்லையே    பார்ப்பதற்கு லட்சணமாக அழகாக அல்லவா இருக்கிறாய் என்று ஸ்ரீதர் சொல்ல நகைச்சுவை வேடங்களில் பெயர் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று சொன்ன மூர்த்தி ஸ்ரீதரின் அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது முகம் அழகா இருந்தால் அதிஷ்டம் என்று இதுவரை நினைத்திருந்தேன். அது துரதிருஷ்டம் என்று இன்றுதான் தெரிந்தது என்றிருக்கிறார்

அந்த வார்த்தைகள்தான் என்  வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.  இவரை நடிக்க வைத்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீதர் அதற்குப் பிறகு ஐம்பது வருடங்கள் கடந்து விட்டன இன்னும் நான் சினிமா உலகில் இருக்கிறேன் என்றால் அதற்கு வித்திட்டது அந்த வார்த்தைகள்தான் என்கிறார் இவர்

1965ல் வெளியான `வெண்ணிற ஆடை'. சாதாரண மூர்த்தியாக இருந்த இவரை `வெண்ணிற ஆடை' மூர்த்தி என்று அழைக்க வைத்தது. அதன் பிறகு ஆறு மாதம் கழித்து `காதல் படுத்தும்பாடு' படத்தில்  தங்கவேலுவுடன் வரும்  ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்தார் இவர்.

இவரது குடும்பம் மிகவும் ஆச்சாரமான ஒரு குடும்பம் ஆகவே தான் சினிமாவில் நடிப்பதை அவர்களிடம் சொல்லவே முதலில் தைரியம் வரவில்லை இவருக்கு

இவரது தந்தை உடல் நலமில்லாமல் இருந்த போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சான் சினிமாவில நடிப்பது பற்றி இவர் சொன்ன போது இவரது தந்தை சிந்திக்கத் தக்க சில விஷயங்களை சொன்னார்

நீ செய்தது தப்பு என்று சொல்லவோ அல்லது உன்னுடன் வாதம் பண்ணவோ எனக்குத் தெம்பில்லை  ஒரு விஷயம் சொல்றேன் நீ ரொம்ப கொஞ்சமாக சம்பாதித்தால் வாழ்க்கை பிரச்னையாயிடும்  அதே சமயம் அதிகமான சம்பாத்தியம் மிகவும் ஆபத்தானது என்று சொன்னார் அவர்

அவர் ஆசியோ என்னவோ என் வாழ்க்கை அப்படியே அமைந்தது  நான் சினிமாவில் உச்சத்தையும் தொடவில்லை தரையிலும் விழவில்லை என்கிறார் இவர்

இவர் எதிர்பார்த்தபடி தொடர்ந்து  படங்களில் நடிக்க  வாய்ப்பு கிடைக்காததால், `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார் இவர் . இதில் "காசேதான் கடவுளடா'' நாடத்தைப் பார்த்த பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தை படமாக்க விரும்பினார். அதில் இவர் நடித்த வேடத்தில் இவரே நடித்து புகழ் பெற்றார்.

நாடகங்களில் நடித்த அனுபவத்தில் இவரும் "லட்சுமி கல்யாண வைபோகமே'' என்கிற நாடகத்தை உருவாக்கினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.

இவர் சினிமாவுக்காக இரண்டு கதைகள் எழுதினார். அதில் "மாலை சூடவா'' கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது. "ருசி'' என்ற பெயரில் இவர் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி'' இயக்குநர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், இவர்.

தமிழில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவருக்கு  எம் ஜி ஆருடன்  இணைந்து  நடித்து ஒரு படம் கூட வெளிவரவில்லைஎ என்ற ஏக்கம் இன்றுவரை இருக்கிறது . . எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை'' படத்தில் நடிக்க இவருக்கு  வாய்ப்பு வந்தது. ஆனால் கதையுடன் ஒட்டவில்லை என்று இவர் நடித்த காட்சிகள் நீக்கிவிட்டனர். இருப்பினும் மேஜர் சுந்தர்ராஜனின்  நாடகத்தில் நடித்த போது  எம்.ஜி.ஆர். இவரைப் பாராட்டியது மறக்க முடியாத தருணம் என்கிறார்.

நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை நகைச்சுவை நடிகர்களுடனும்  இணைந்து நடித்திருக்கிறார் இவர். இவருக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ்.

வசனம் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைச் செருகலாக புதிய வார்த்தைகள் எதையாவது கோர்த்து விடுவது இவர் வழக்கம் . நாளடைவில் ரசிகர்கள் அதை ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு படத்தில் இவரைப் பார்க்கும் போதும், இந்தப் படத்தில் அதுமாதிரி புதுசாக என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

சினிமாவில் `பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்தார் இவர். தூர்தர்ஷனில் கதை வசனம் எழுதி, 5 சீரியல்களை இயக்கியிருக்கிறார். தனியார் டி.வி.யில் 24 சீரியல்களில் நடித்திருக்கிறார். "மீண்டும் மீண்டும் சிரிப்பு'' என்கிற இவர் நடித்த தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆனது.

1992-ஆம் ஆண்டு தமிழக அரசின் "கலைமாமணி'' விருது பெற்ற இவர் சென்சார் போர்டு உறுப்பினராக 2 ஆண்டுகள், பட்ஜெட் படங்களை தீர்மானிக்கும் குழுவில் 2 ஆண்டுகள் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் 2 ஆண்டுகள் என மத்திய, மாநில அரசுகளின் கவுரவப் பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார்.

நடிப்பில் தன்னை பல கோணங்களில் வெளிப்படுத்திய மூர்த்தி, நாணயங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்திய நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் என  3 ஆயிரத்துக்கு மேல் இவர் கலெக்ஷனில் உள்ளன.

பேசி சிரிக்க வைத்த இவர் எழுதியும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி'' பாகம்-1, பாகம்-2 என்ற பெயரில் 2 புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது. "சூப்பர் மார்க்கெட்'' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

வெளிநாடுகளில் "நட்சத்திர இரவு'' கலை நிகழ்ச்சிகளுக்கு `பிள்ளையார் சுழி' போட்டவரும் இவரே. அன்றைய பிரபலங்களான  மோகன் - அமலா ஆகியோரை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராஜசுலோசனா, சி..டி.சகுந்தலா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் இவர். இதனால், ஜோதிட கலையை கற்று பலருக்கு உதவி இருக்கிறார்.

பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, 1970 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார் இவர். இவர்களுக்கு மனோ என்கிற மகன் இருக்கிறார். அதிகமாக எதற்கும் ஆசைப்படாத குணமுடையவர் இவர், அதனால்தான் இவரது வாழ்க்கை இன்றுவரை ஆனந்தமாக இருக்கிறது