செவ்வாய், 15 மார்ச், 2022

நடிகை அம்பிகா வாழ்க்கை வரலாறு

கேரள மாநிலம், திருவனந்தபுரம், கிளிமானூர் அருகிலுள்ள கல்லற என்னுமிடத்தில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி குஞ்சன் நாயர், சரசம்மா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர், அம்பிகா. இவருக்கு ராதா, மல்லிகா என்கிற இரு சகோதரிகளும், அர்ஜுன், சுரேஷ் என இரு சகோதர்களும் உள்ளனர்.

சிறுவயது முதல் நடிப்பு நடனம் என்றால் அம்பிகாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும்போது படிப்பில் நாட்டமில்லாமல் நடனத்தில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அடிக்கடி சினிமாவுக்கு போக அம்மாவை வற்புறுத்தி இருக்கிறார்.

ஊரில் சோட்டனிக்கர அம்மா படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு அங்கு வேடிக்கைப் பார்க்க செல்ல வேண்டும் என்று அழுது அடம் பிடித்து அம்மாவை அழைத்து போக வைத்த அம்பிகா, அங்கு படத்தில் சிறு வாய்ப்பு கிடைத்ததும், அதில் நடிக்கவும் தயங்கவில்லை. அன்று காய்ச்சல் இருந்திருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

1976 ஆம் ஆண்டு வெளியான சோட்டனிக்கர அம்மா என்கிற அந்தப் படமே அம்பிகா சிறுமியாக நடித்த முதல் படம். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தாரா,  உனக்கு நல்ல முகம் இருக்கு. எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவாய் என வாழ்த்தி இருக்கிறார். அடுத்த ஆண்டில் மூன்று படங்களில் சிறுமியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படங்களிலும் நடித்தார், அம்பிகா.

பள்ளி விழாக்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக வருவார்கள். அப்படி ஒருமுறை வந்திருந்த நடிகர் மதுவிடம் பரிசு பெற்ற அம்பிகா, அவரிடம் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு இரண்டு, மூன்று முறை அவரிடம் அம்பிகா தெரிவித்திருக்கிறார்.

இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்ட நடிகர் மது, சரி வா என்று கூறி, அவர் நடித்து இயக்கிய  ‘தீரசமீரே யமுனா தீரே’ என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அடுத்து அவர் தயாரித்து நடித்த ‘அஸ்தமயம்’ படத்திலும் அவருக்கு ஒரு சிறிய வாய்ப்பு கொடுத்து உற்சாகப்படுத்தி இருக்கிறார். மதுவுடன் படங்களில் நடிக்கின்ற போது இனி நம் எதிர்காலம் சினிமா என்று முடிவு செய்திருக்கிறார், அம்பிகா.

அவர் நினைத்தது போல தொடர்ந்து சிறிய சிறிய வாய்ப்புகள் கிடைத்தது. பனிரெண்டு வயதில் நடிக்க தொடங்கியவர் பதினான்கு வயதை நெருங்கிய போது ‘சீதா’ படத்தில் கதாநாயகி ஆனார். பி.கோவிந்தன் இயக்கிய இந்தப் படத்தில் சுகுமாரி, திக்குறிச்சி சுகுமாரன் நாயர், நாகவள்ளி ஆர்.எஸ்.குருப், ஆகியோருடன் அம்பிகா நடித்தார். எம்.கே. அர்ஜுனன் இசையமைத்த அந்தப் படம் தமாதமாகத்தான் வெள்ளியானது.

கதாநாயகியாக கமிட்டான பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘நீலத்தாமரை’, ‘சமயமாயில்லா போலும்’ ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்து புகழ் சேர்த்தன. இதனால், தொடர்ந்து கதாநாயகியாக நிறைய மலையாளப் படங்களில் நடித்தார்.

சிறுவயதில் மலையாள படங்களில் உச்ச நட்சத்திரமாக இருந்த பிரேம்நசீரின் படங்களைப் பார்த்துவிட்டு அவருடைய படங்களில் நடித்து டூயட் பாடுவது போன்று நினைப்பாராம், அம்பிகா. அவருடைய படங்கள் மீது அப்படி ஒரு மயக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், காலம் அவருடன் டூயட் பாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நவோதயா அப்பச்சன் இயக்கத்தில் பிரேம் நசீர் நடித்த மாமாங்கம் என்கிற படத்தில் அந்த ஆசையும் அவருக்கு நிறைவேறியிருக்கிறது.

பிற்காலத்தில் அவருடன் மட்டுமல்லாது, அவருடைய மகன் ஷாநவாஸ் கூடவும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார் அம்பிகா.

மலையாளத்திலும் பல படங்களில் நடிப்பதை பார்த்து மற்ற மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழில் ஒரே நேரத்தில் சக்களத்தி, தரையில் வாழும் மீன்கள், கடல் மீன்கள் என்று மூன்று படங்கள் ஒப்பந்தமாகின. அதில் கமலுடன் நடித்த கடல் மீன்கள் படம் மட்டுமே வெளினாது. அந்தப் படத்தைப் பார்த்து கே.பாக்யராஜ், தனது ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த ஏழு நாட்கள் படம் வெளியாகி பெரிய வெற்றி படமாக அமைந்து அம்பிகாவுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவருடைய வசந்தி என்கிற வலிமையான அந்த கேரக்டரும், படத்தின் வெற்றியும் அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போது கன்னடத்திலிருந்து அழைப்பு வர, ஸ்ரீநாத்துடன் கருடரேகை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் கன்னடத்தில் வெற்றிப் படமாக அமைய கன்னடத்திலும் பிஸியான நடிகையானார், அம்பிகா. மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான அம்பிகா, மூன்று மொழிகளிலும், முன்னணி நடிகர்கள் எல்லோருடைய படங்களிலும் நடிக்க கால்ஷீட் கொடுத்து நடித்தார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட், நான்கு கால்ஷீட் என்று தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

அம்பிகா கிளாமராக நடித்த ‘சகலகலா வல்லவன்’ படமும், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்த ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதனால், குடும்பபாங்கான வேடம், கிளாமர் வேடம் எந்த வேடமாக இருந்தாலும் நடித்தார், அம்பிகா. தொடர்ந்து மூன்று மொழிகளும் பல வெற்றி படங்கள் வரிசையா வந்து கொண்டே இருந்தது.

ரஜினிகாந்த், கமலஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். கருடா சவுக்கியமா படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர், பிறகு ‘வாழ்க்கை’ படத்தில் அவருக்கு ஜோடியாக வயதான வேடத்தில் நடித்தார். இருபது வயது கூட ஆகாத நிலையில் சிவாஜிக்கு ஜோடியாக 55 வயது வேடத்தில் நடித்தார், அம்பிகா. தொடர்ந்து அம்மா வேடங்கள் வந்து விடுமோ என்று பயந்து தான் அந்த படத்தில் நடித்தார். ஆனாலும், சிவாஜி சாருடன் நடிக்கின்ற ஆர்வத்திலும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார்.

தொடர்ந்து படம் ஹிட்டானதால், தொடர்ந்து கதாநாயகி வாய்ப்பு வருவதும் குறையவில்லை. பிறகு சிவாஜியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் அம்பிகாவுக்கு எம்.ஜி.ஆருடன் கோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற எண்ணம் இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ரசிகையான அவருக்கு அவருடன் நடிக்க ஆசை இருக்காதா என்ன? ஒரு முறை, விமானத்தில் செல்லும் போது, அந்த விமானத்தில் எம்.ஜி.ஆர். இருப்பதை கண்ட அம்பிகா, பாதுகாவலர் கெடுபிடிகளையும் மீறி எம்.ஜி.ஆரை பார்க்க பக்கத்தில் சென்றிருக்கிறார்.

உங்க கூட நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. நீங்க ஏன் சார் சினிமாவை விட்டு போனீங்க என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்.

அம்பிகாவின் ஆசையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவரை தட்டிக் கொடுத்து, “சரியான நேரத்துக்கு சூட்டிங் போய் விடனும், பெரிய நடிகையாக இருக்கணும்” என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

எம்ஜிஆர் சொன்னது போலவே ஒவ்வொரு படத்தின் படிப்புக்கும் சரியான நேரத்திற்கு சென்று விடுவார் அம்பிகா. அதனாலேயே இயக்குனர்களிடம் பொறுப்பான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கிறார்.

ரஜினியுடன் எங்கேயோ கேட்ட குரல், நான் சிகப்பு மனிதன், படிக்காதவன், மிஸ்டர் பாரத், மாவீரன், அன்புள்ள ரஜினிகாந்த், ஸ்ரீராகவேந்திரர், கமலஹாசனுடன் சகலகலா வல்லவன், காக்கி சட்டை, காதல் பரிசு, விக்ரம், நானும் ஒரு தொழிலாளி என பல படங்களில் நடித்துள்ள அம்பிகா, சிவக்குமார், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, ராஜ்குமார், ஸ்ரீநாத், அம்பரீஷ், விஷ்ணுவர்தன், மது, மமூட்டி, மோகன்லால், என்று அப்போதய தென்னிந்திய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நடித்த எங்கேயோ கேட்ட குரல், கமலுடன் காதல் பரிசு ஆகிய படங்களில் அவரது தங்கை ராதாவுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சிவாஜியுடன் நடித்த வாழ்க்கை பட சூட்டிங் நேரத்தில் இரண்டு இந்திப் படங்களில் நடிக்க அழைத்திருக்கிறார், அமிதாப்பச்சன். தமிழ் படங்களில் பிசியாக இருந்ததால் இந்திப் பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார், அம்பிகா.

ராஜாதிராஜா, மெல்லத்திறந்தது கதவு, சிறை உட்பட அம்பிகா நடிக்க முடியாமல் போன படங்களின் லிஸ்ட் கொஞ்சம் பெரியது. கால்ஷீட் உள்ளிட்ட பல காரணங்களால் நிறைய வெற்றி பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார். அதற்காக கிடைக்காத வாய்ப்புகளுக்காக ஒருபோதும் மன வருத்தப்பட்டதே இல்லையாம்.

ஆரம்பகால சினிமாவில் பல அவமானங்களை கடந்து தான் வந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அம்பிகா, வாய்ப்பு வந்த போது தூக்கம், சாப்பாடு போன்ற இழப்புகளை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இதுவரைக்கும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அம்பிகா அதில் 200 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிக்க வந்ததால் படிப்பு நின்றுவிடுமோ என்று முதலில் அஞ்சிய அவர், நடிப்புக்கு நடுவே படிப்பு என்று அஞ்சல் வழி கல்வியில் படித்து டிகிரி முடித்திருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு  பிரபுவுடன் இவர்கள் வருங்கால தூண்கள் படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். 1988-இல் பிரேம்குமார் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகாவுக்கு 1989 ஆம் ஆண்டு ராம் கேசவ், 1991 ஆம் ஆண்டு ரிஷி கேசவ் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

எல்லோரையும் போல உண்மையான அன்பான வாழ்க்கைதான் அம்பிகாவின் வாழ்க்கையிலும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்யாக அமையவே 1996 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கிக் கொண்டார்.  

ரஜினி நடித்த தர்மதுரை படத்தில் ஜோடியாக நடிக்க அழைத்த போது திருமணத்தை காரணம் சொல்லி அமெரிக்காவுக்கு சென்றவர், பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு அம்மாவாக சுந்தர்சி இயக்கிய அருணாசலம் படத்தில் நடிக்க வந்தார்.

அதன் பிறகு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ரோஜாவின் அம்மா, அமர்க்களம் படத்தில் ஷாலினியின் அம்மா, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ஷாலினியின் அம்மா, வல்லரசு படத்தில் தேவயானியின் அம்மா, அல்லிஅர்ஜுனா படத்தில் ரிச்சாவின் அம்மா, மழை படத்தில் சதாவின் அம்மா, ஒற்றன் படத்தில் சிம்ரனின் அம்மா, ஜிகிர்தண்டா படத்தில் லட்சுமி மேனனின் அம்மா, இது என்ன மாயம் படத்தில் விக்ரம்பிரபுவின் அம்மா, அவன் இவன் படத்தில் விஷாலின் அம்மா என நாயகன், நாயகிகளின் அம்மா வேடங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். நிழல் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார்.

இதுவரை தமிழில் 120, மலையாளத்தில் 140, கன்னடத்தில் 40, தெலுங்கு மொழியில் 20 என 320 படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா,  சின்னைத்திரையில் 17 தொடர்களில் நடித்தவர், 20 நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

சின்னத்திரையில் நடிக்கும் போது சின்னத்திரையில் அவருடன் நடித்த ரவிகாந்த் என்பவரை 2000 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அம்பிகா, அவரிடம் இருந்தும் 2002 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள அம்பிகா, நிழல் என்கிற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் ஏ.ஆர்.எஸ்.கார்டன் என்கிற சினிமா ஸ்டுடியோவை பல ஆண்டுகள் நடத்திய அம்பிகா, தனது மகன் ராம்கேசவை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் கொடியேற்றிய நடிகைகள் பலர் உண்டு. அதில் அம்பிகா-ராதாவுக்கு தனி இடம் உண்டு.

தொகுப்பு : ஜி.பாலன்


இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வாழ்க்கை வரலாறு

1980 கால கட்டங்களில் பட்டையை கிளப்பிய பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். இவர்களில் கணேஷ் எப்போதும் கழுத்தில் செயின்னும், கையில் மோதிரம் என நகை கடை அண்ணாச்சி போல காட்சி தருவார். அந்த இசை நாயகன் கணேஷ் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி பிறந்தவர். இவருடைய அப்பாவுக்கு சொந்த ஊர் திண்டிவனம். அம்மாவுக்குச் சொந்த ஊர் மேல்மருவத்தூர் அருகில் உள்ள சோத்துப்பாக்கம்.

கணேஷ் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆயிரம்விளக்கு மக்கீஸ் கார்டன். தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில் படித்தார். பள்ளியில் மதியம் 3:30 மணிக்கு விளையாட்டு பீரீயட் நடக்கும். ஆனால், இவருக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கு பாட்டுப் பாட கிளாஸ் நடக்கும். அன்று அவர் நினைக்கவில்லை. தான் பல நூறு படங்களுக்கு இசைக்கப் போகிறோம். அதற்கான தொடக்கம்தான் இது என்று.

படிக்கிற காலத்திலிருந்தே கணேஷுக்கு இசைக்குள் ஈடுபாடு அதிகமாக இருந்தது. இசையைப் பற்றிய ஞானம் அதிகமாக இல்லாவிட்டாலும், நல்ல சங்கீதத்தை, சாகித்யத்தை உணர்ந்து ரசிக்கிற அளவுக்கு இவருக்கு ஞானம் இருந்துள்ளது. வானொலிப்பெட்டியைத் திருப்பிவிட்டு திருப்பிவிட்டு  மணிக்கணக்காக பக்கத்தில் உட்கார்ந்திருந்து கவனமாக கூர்ந்து கேட்பார். அது கர்நாடக இசையானாலும், இந்துஸ்தானி இசையானாலும், மெல்லிசையானாலும் எதுவாகயிருந்தாலும் ரசிப்பார்.  

அப்போது மனதிற்குள் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டார். என்றைக்காவது ஒரு நாள் ஒரு நல்ல இசைக்கலைஞனாக வரவேண்டுமென்று மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டார். திரைபடங்களை பார்ப்பதும், பாடல் பாடுவதும், அந்த பாடலின் மெட்டுக்கு வேறு வார்த்தைகள் போட்டு பாடுவது என்றும் தனது திறமையை வெளிப்படுத்தினார். மகனின் ஆர்வத்தை கண்ட கணேஷின் அப்பாவுக்கு பெரிய மகிழ்ச்சி. மகன் இசை உலகில் சாதனைப் படைப்பான் என்று அவருக்கு தோன்றி இருக்கிறது.

`தெனாலிராமன்', `நிச்சயத் தாம்பூலம்' படங்களின் கேமராமேனும் இயக்குநருமான வி.எஸ்.ரங்காவிடம் டிரைவராக இருந்தார் கணேஷின் அப்பா. அவரிடம் தனது மகனின் ஆர்வத்தை தெரிவித்து, வி.எஸ்.ரங்கா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.

சின்ன வயசுலயே கணேஷ் துறுதுறு வென்று சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்து கம்போஸிங் இன்சார்ஜ் பணியை அவரிடமே ஒப்படைத்தார், எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தச் சின்ன வயதில் அத்தனை பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததுள்ளது.

முதலில் சங்கரும், கணேஷும் இணைந்தே வாய்ப்பு தேடினார்கள். அப்பா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கணேஷ் சேர்ந்தது போல, பல முயற்சிகளுக்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம், சங்கர் சேர்ந்தார்.  1964 ஆம் ஆண்டு தனி தனியாக வேலைக்கு சேர்ந்தவர்கள், 1965 ஆண்டு முதல் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சேர்ந்தே வேலை செய்தார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பணியாற்றும் போது கவியரசு கண்ணதாசனிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் பெற்றவர்கள், கவியரசு கண்ணதாசன் `நகரத்தில் திருடர்கள்' என்ற படத்தைத் தயாரிக்க தொடங்கிய போது அதில் இசையமைப்பாளர்களாக இருவரையும் அறிமுகம் செய்தார். ஆனால், அந்தப் அடம் பாதியிலே நின்றது.

அதன் பிறகு இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை கவிஞர் கண்ணதாசன் பெற்று தந்தார். அந்தப் படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர்களின் திறமை மீது நம்பிக்கை கொண்ட கவியரசு கண்ணதாசன், அவர்களை தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

கவியரசு கண்ணதாசன் திறமை உள்ளவர்களை மட்டுமே அடையாளம் காட்டுவார். அப்படி திறமையோடு இவர்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் அப்போது தான் தயாரித்த மகாராசி படத்தில் அவர்களை இசையமைக்க வைத்தார், சின்னப்பா தேவர்.  எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிய வேகத்திலேயே நின்றது. அதற்கு காரணம், ரவிச்சந்திரன் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தார்.

அதன் பிறகு அவர் குணமாகி நடித்துக் கொடுக்கும் வரை சங்கர் கணேஷ் பெரிய வேண்டுதல்களுடனே இருந்திருக்கிறார்கள். மகராசி படம் 1967 ஆம் ஆண்டு வெளியானது. ‘மகராசி’ படத்தில் இடம்பெற்ற ’வாழ்வில் புது மணம் மணம்’, ’பேசிப் பேசியே பொழுதும் போனது’ போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது. இவர்களுக்கு ஒரு திருப்பமாக அமைந்தது

அதன் பிறகு ஜெய்சங்கர் நடித்த நான் யார் தெரியுமா, சிரித்த முகம், அக்காள் தங்கை, மாணவன், காலம் வெல்லும், கண்ணன் வருவான், கெட்டிக்காரன் என ஜெய்சங்கர் நடிக்கும் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.

தெய்வம் பேசுமா, தேன் கிண்ணம், கங்கா, தாய்க்கு ஒரு பிள்ளை என்று பிசியாக இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் இவர்களுக்கு ஒரு பெரிய வெற்றியையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு, `நான் ஏன் பிறந்தேன்' படத்தில் இவர்களுக்கு கிடைத்தது. அதற்குக் காரணம், எம்.ஜி.ஆர்.

`பதிபக்தி’, `பாலும் பழமும்’, `பாகப்பிரிவினை’, `பாத காணிக்கை’, `பஞ்சவர்ணக்கிளி’, `குடியிருந்த கோயில்’, `நாணல்’, `நான் ஏன் பிறந்தேன்?’ போன்ற படங்களைத் தயாரித்தவர், ஜி.என்.வேலுமணி. அவருடைய மகனும், கணேஷும் நல்ல நண்பர்கள். அதனால், ஜி.என்.வேலுமணியின் வீட்டுக்குப் சென்று வரும் போது வேலுமணியின் மகள் சந்திரிக்காவை பார்க்கும் வாய்ப்பும் கணேஷுக்கு கிடைத்தது.

காலம் அவருக்குள் காதலை விதைத்தது. பூ மலர்ந்த மாதிரி உருவான அந்த காதலை அப்படியே திருமணம் வரை கொண்டு போக வேண்டுமே? பெரிய தயாரிப்பாளரிடம் சென்று பெண் கேட்டால் கொடுப்பாரா? காலம் இசையமைப்பாளர் என்கிற அங்கீகாரத்தை கொடுத்தாலும், டிரைவர் மகன் என்பதை அவர் மறப்பாரா என்ன?

ஆரம்பத்தில் எதிர்ப்பு. அடியாள் மூலம் அடி என மிரட்டல் வந்தாலும் காதலில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். அதன் பிறகு இவர்களின் வைராக்கியத்தைப் பார்த்து மனம் இறங்கினார், வேலுமணி. அதற்கு எம்.ஜி.ஆரும் காரணமாக இருந்தார்.

தயாரிப்பாளர் வேலுமணியிடம் மாப்பிள்ளை கணேஷின் சார்பாக பெண் கேட்டு எம்.ஜி.ஆரின் சகோதரர் சாரங்கபாணி கார் சென்றது. சிவாஜியின் கார் சென்றது. சாண்டோ சின்னப்பா தேவர் கார் சென்றது. இப்படி திரைத்துறையில் மிகவும் முக்கியமானவர்கள் கார்கள் எல்லாம் வேலுமணியின் வீட்டு வாசலுக்கு சென்று நின்றது. சாண்டோ சின்னப்பா தேவரும், மதுக்கூர் ஜமீன்தாரும் கணேஷ் சார்பாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாக இருந்து தட்டை மாற்றி நிச்சயம் செய்தார்கள். பிறகு திருமணம் நடந்தாது.

திருமணம் முடிந்ததும் மணமகள் சந்திரகாவிடம், ஜி.என்.வேலுமணி என்கிற பணக்கார பெண் என்கிற மமதை இன்றி கட்டிய கணவன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார், எம்.ஜி.ஆர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருவரும் புதுமண தம்பதிக்கு விருந்து கொடுத்தார்கள். ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டில் சாப்பிடும் போது, `என் வீட்டுல போய் இருந்துகொள்’ என்று நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டின் சாவியை கொடுத்திருக்கிறார், எம்.ஜி.ஆர்.

‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திற்கு இசைஅமைக்க எம்.ஜி.ஆர். அவர்களை அணுகியபோது, விவரம் அறிந்த கணேஷின் மாமனார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான் அவரது படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினார்.

இதனால் படப்பிடிப்பு வேலைகள் தாமதம் ஆகின. எம்.ஜி.ஆரின் ஆதரவினால் ஒருவழியாக என் ஜி.என்.வேலுமணி ஒத்துக்கொண்டார். பாடல்கள் பதிவாகின. சித்திர சோலைகளே எனும் பாரதிதாசன் பாடல் படத்தின் சிறந்த பாடல்களில் ஒன்று. அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்ததில் எம்.ஜி.ஆருக்கு பெருமகிழ்ச்சி.

இதயவீண படத்திற்கு, இசைஅமைக்க வாய்ப்பு கேட்டபோது இசைந்த எம்.ஜி.ஆர்., யாருமே எதிர்பார்க்காத வகையில் அன்றைய காலகட்டத்தில் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கி கொடுத்துள்ளார்.  

பொன்னந்தி மாலை பொழுது பாடல் கம்போசிங் செய்தபோது பல ட்யூன்கள் போட்டும் சரிவராமல் திணறியபோது, பாடல் கம்போசிங் தாமதம் குறித்து விவரம் அறிந்த எம்.ஜி.ஆர்., கணேஷை அழைத்து எல்லா ட்யூன்களையும் போட்டு காட்ட செய்து, தன்னுடைய நுட்பமான இசை ஞானத்தால் பாடல் உருவாக பெரும் உதவி செய்து, பிரச்சியை தீர்த்து வைத்திருக்கிறார்.

ஒருநாள் பாடல் கம்போஷிங்காக மகாலிங்கபுரம் வீட்டில் இருந்து ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு கணேஷ் புறப்பட்டுக் கொண்டிருந்த போது இயக்குநர் ஏ.எஸ்.பிரகாசம், தயாரிப்பாளர்கள் ஜூடோ ரத்னம், ரகு ஆகியோர் அவரை சந்தித்தனர்.

அடுத்து ‘ஒத்தையடி பாதையிலே’ என்கிற படத்தை எடுக்க இருக்கிறோம். அதில் நீங்கள்தான் கதானாயகனாக நடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதும், அதிர்ந்து போனார், கணேஷ்.

என்னை மேலிருந்து கீழே வரைக்கும் ஒரு முறை பாருங்கள். கத்தரிக்காய்க்கு கால்முளைத்த மாதிரி இருக்கிறேன். என்ன போய் ஹீரோ என்று நினைக்கிறீர்களே என்று கேட்டவர், படத்துக்கு வேண்டுமானால் இசையமைக்கிறேன். வேறு ஹீரோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அவர்கள் விடவில்லை. பிடிவாதமாக இருந்தார்கள். நேரம் ஆனதால் தான் ஏவி.எம். செல்வதாக கூறிவிட்டு கணேஷ் சென்றுவிட்டார். அவர்களும் அவர் கார் பின்னால் தொடர்ந்து ஏவி.எம்.ஸ்டுடியோ சென்று காத்திருந்தார்கள். அங்கிருந்த இசையமைபாளார் சங்கரிடமும் சொல்லி பேச வைத்தனர்.

சினிமாவில் நடிக்க நிறைய பேர் முயற்சி செய்கிறார்கள். வாய்ப்பு கேட்டு அலைகிறார்கள். உன்னை தேடி வாய்ப்பு வருகிறது. நீ ஏன் உன்னை தேடி வரும் வாய்ப்பை மறுக்கிறாய். போய் நடி. நீயும் டூயட் பாடு என்று இசையமைப்பாளர் சங்கரும், கணேஷை உசுப்பேற்றினார். ஒரு வழியாக கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார், கணேஷ்.

முதல்நாள் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் ஆரம்பமானது. ஓடிச்சென்று கதாநாயகி கட்டி பிடித்து தூக்கி மூன்று ரவுண்டு சுற்ற வேண்டும். நடன இயக்குநர் சுந்தரம், காட்சியை விளக்கிவிட்டு ஷாட் எடுக்கக் ஆயத்தமானார். புதுமுகநாயகியை தூக்கி சுற்றி வெயிட் தாங்க முடியாமல் அவருடன் சாய்ந்துவிட்டாராம், கணேஷ்.  

இப்படி முதல்நாள் முதல் படத்தில் நடிக்கத் தொடங்கிய கணேஷ், புகுந்த வீடு, நீ ஒரு மகாராணி, தேவியின் திருவிளையாடல், நீதியின் மறுபக்கம், நான் பாடும் பாடல், நெஞ்சமெல்லாம் நீயே என ஏழு படங்களில் நடித்தார். மனைவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க படங்களில் நடிப்பதை நிறுத்தி, இசையமைப்பதில் மட்டுமே பிறகு கவனம் செலுத்தி இருக்கிறார்.

கவியரசு கண்ணதாசன் அடையாளம் காட்ட தேவரின் உதவியால் சினிமா உலகில் பெரும் புகழ் பெற்ற காரணத்தால், அந்த நன்றியை எப்போதும் நினைவு கூறும் விதமாக திரைப்படங்களில் தங்கள் பெயர் டைட்டிலில் வரும் போது ‘கவிஞர் வழங்கிய தேவரின்’ சங்கர் கணேஷ் என்றே போட வைத்தனர்.

ஒவ்வோர் இசையமைப்பாளர்க்கும் தனித்த பெண்குரல் ஒன்று அமைந்தது. விசுவநாதனுக்குச் சுசீலாவும், இளையராஜாவுக்கு ஜானகியும் அமைந்தாற்போல் சங்கர்-கணேஷுக்கு வாணி ஜெயராம் அமைந்தார். 'மேகமே மேகமே... பால் நிலா தேயுதே....' என்னும் பாடலை வேறு குரலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அப்படியொரு கனத்த துயரம் வழிகின்ற குரல்.

சசிரேகா, கிருஷ்ணமூர்த்தி போன்ற பாடகர்கள் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். பல பாடகர்களை, பாடகிகளை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களின் கால்ஷீட் கிடைக்கப்பெறாத தயாரிப்பாளர்களுக்கெல்லாம் தோள் கொடுத்தார்கள்.

கணேஷ் சினிமா உலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் ஒருவரிடம் “இந்த செயின் என்ன விலை” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “நீ எல்லாம் இந்த செயினை தொட்டு பார்க்க கூட தகுதி இல்லாதவர். அதை வாங்க நினைக்கக் கூட உன்னால் முடியாது’ என்று கூறி இருக்கிறார். அந்த வார்த்தை அவருடைய மனதை மிகவும் துன்புறுத்தியது.

எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி அவர்களிடத்தில் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உழைத்த கணேஷ், சம்பாதிக்க தொடங்கிய பிறகு நிறைய தங்க நகைகளை வாங்கினார். அதை எல்லாம் எங்கு போனாலும் போட்டுக் கொண்டு செல்வாராம்.

1980களில் கணேஷ் புகழின் உச்சியில் இருந்தா நேரம். அப்போது ஒரு நாள் அவருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அஅதை அவர் பிரித்த போது, பலத்த சத்தத்துடன் வெடித்தது. சுற்றிலும் ஒரே புகை. அவருக்கு கண்னெல்லாம் எரிச்சல், பார்சலைப் பிடித்திருந்த கைகளில் காயம். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். கைகளில் ஏற்பட்ட காயம் ஆறியது. ஆனால், தழும்புகளை மறைக்க இன்று வரை தொடர்ந்து கையுறை அணிந்து வருகிறார்.

அந்த விபத்து காரணமாக அவரது பார்வை மங்கலானது. அவரால் எதையும் தெளிவாக பார்க்க இயலவில்லை. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளானார். சமீபத்தில் நவீன சிகிச்சைப் பற்றிக் கேள்விப்பட்டு பார்வையை திரும்ப பெற்றிருக்கிறார்.

விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை அமைப்பாளர்களுக்கு பிறகு சங்கர் - கணேஷ் எனும் இரட்டையர்களை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் இசை இயக்குனர், பாடகர் என பல துறைகளில் இருவரும் சேர்ந்து பணியாற்றி உள்ளார்கள். இவர்களுடைய பாடல் எல்லாம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிறமொழி மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 16 வருடங்களில் 193 படங்களில் இசையமைத்தனர். தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள்.

நீண்டநாள்கள் இணைந்து இசையமைத்த இவ்விருவரும் சில ஆண்டுகளுக்கு பின்னர் பிரிந்து இசையமைக்கத் தொடங்கினர். ஆனால் தனியாக இசையமைக்கத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே சங்கர் மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு கணேஷ் தனியாக இசையமைத்து வந்தார்.

சங்கரின் மகன் பாலசுப்ரமணியம், சின்னி ஜெயந்தின் உனக்காக மட்டும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கணேஷின் மகன் ஸ்ரீகுமார் நடிகரானார். இப்போதும் வெள்ளித்திரை மற்றும் சின்னித்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வெளியான நாய்சேகர் படத்தில் காமெடி வில்லனாக நடித்து மீண்டும் நடிப்பு பணியை தொடங்கி இருக்கிறார், கணேஷ். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரவமாக இருக்கிறார்.

சங்கர்-கணேஷ் இசைக்கோத்த பாடல்கள் மக்களை மகிழ்வித்தன. தயாரிப்பாளர்களை வாழவைத்தன. இன்றும் கேட்கப்படுகின்றன. அப்பாடல்கள் காற்றுள்ளவரை என்றைக்கும் உலவிக்கொண்டிருக்கும்

தொகுப்பு : ஜி.பாலன் 

 

நடிகர் மோகன் வாழ்க்கை வரலாறு

வெள்ளிவிழா நாயகன் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் நடிகர் மோகன். கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் 1956 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி பிறந்த மோகன், படித்து முடித்ததும் பி.வி.காரந்த் என்பவரால் நாடக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

உணவகத்தில் சாப்பிட போனவருக்கு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பு மூலம் தனது திறமையை வெளிப்படுத்த பல இடங்களில் நிறைய பாராட்டுகளும், ஊக்கப்படுத்தும் விமர்சனங்களும் கிடைக்க பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

மலையாளத்தில் இருபது படம், தெலுங்கு மொழியில் மூன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா, கன்னடத்தில் ஷோபா நாயகியாக நடிக்கும் கோகிலா என்கிற படத்தை கதை எழுதி இயக்கினார். அந்தப் படத்தில் கமலஹாசனுக்கு நண்பனாக நடிக்க பலரை அழைத்துப் பார்த்த பாலு மகேந்திரா, பெங்களூர் வங்கி ஒன்றில் மோகனைப் பார்த்து இவர்தான் அந்த நண்பன் என்று முடிவு செய்தார்.

1977 ஆம் ஆண்டு வெளியான கோகிலா படம் கன்னடத்தில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தத்துடன், சென்னையிலும் நூறுநாள் ஓடிய முதல் கன்னடப் படம் என்கிற பெயரையும் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஊமக்குயில் என்ற பெயரிலும், இந்தியில் அவுர் ஏக் பிரேம் கஹானி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது, சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில விருதை பாலு மகேந்திரா பெற்றார்.

இந்தப் படத்தின் வெற்றியால் படத்தில் நடித்த அனைவரும் பெரிய புகழ் பெற்றனர். இந்தப் படத்திற்கு பிறகு கன்னடத்தில் அபரிச்சிதா, மலையாளத்தில் மடாலசா, தெலுங்கு மொழியில் தூர்ப்பு வெல்லே ரைலு ஆகிய படங்களில் நடித்த மோகனை, கோகிலாவில் கமலின் தோழனாக நடிக்க வைத்த பாலு மகேந்திரா, மூடுபனி படத்தில் பனி விலகிய ஒரு எபிஸோடில் மிகச்சிறிய வேடத்தில் வந்து போக வைத்தார். நாலைந்து க்ளோஸ் அப் மற்றும் அர்த்தமற்ற சில டயலாகுகள். அவர் தோன்றும் காட்சிகளில் ஒரு ஸ்கூட்டருக்குக் கிடைத்ததற்கு அடுத்த மரியாதை தான் அவருக்குக் கிடைத்தது. ஆனாலும், மனசுக்குள் நின்றார்.

அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படம் வெளியாகி அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அந்தப் படம் ஒரு வருடம் ஓடி, தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட மூன்று விருதுகளை வென்றது. தமிழில் துரை இயக்கிய கிளிஞ்சல்கள் படத்தில் நடித்தவர், அப்டியே கன்னடத்திற்கு சென்று மூன்று படங்களை முடித்தவர், மீண்டும் தமிழுக்கு வந்து கோவைதம்பியின் தயாரிப்பில் பயணங்கள் முடிவதில்லை என்கிற படத்தில் நடித்தார். ஆர்.சுந்தராஜன் இயக்குனராக அறிமுகமான அந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இன்று வரை எத்தனையோ பேர், எத்தனையோ விதமான பாடகர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் போல், மோகனுக்கு மைக்கும் பாட்டும் அப்படி பாந்தமாகப் பொருந்திப் போனது. முன்னதாகவே வெற்றியின் ருசி அறிந்த மோகன், இந்த முறை ஆர்.சுந்தர்ராஜனுக்கும் வழங்கினார். அவரின் முதல் வெற்றி. கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துக்கும் கிடைத்த முதல் வெற்றி. படம் வெளியாகி வெள்ளிவிழா படமாக அமைந்தது.

மோகன் சென்னையில் தங்கி வாய்ப்பு தேடி அலையும் பொழுது, ஸ்டில்ஸ் ரவி மோகனை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து அவருக்காக வாய்ப்பு தேடினார். ஸ்டில்ஸ் ரவியும், மனோபாலாவும் நண்பர்கள்.. இருவருடனும் மிகவும் நட்பாக இருந்தார்..

கார்த்திக், சுஹாசினி நடித்த ‘ஆகாய கங்கை’ படத்தை இயக்கி அந்தப் படத்துக்குப் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்தார் இயக்குநர் மனோபாலா. நண்பன் மனோபாலா வாய்ப்பு இல்லாமல் இருப்பதை அறிந்த மோகன், தயாரிப்பாளர்களிடம் மனோபாலாவிற்கு இயக்குனர் வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால் உடனே கால்ஷீட் தருகிறேன் என்றார்.. அப்போது மோகன் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.. மனோபாலாவிற்காக இரவு நேரங்களில் தனது கால்ஷீட் கொடுத்தார்.. முதலில் பத்து நாட்கள் பிறகு ஏழு நாட்கள் பிறகு மூன்று நாட்கள் என்று தன் நண்பன் ஜெயிக்க வேண்டும் என்று நடித்துக் கொடுத்தார் மோகன்.. அந்தப் படம் தான் பிள்ளை நிலா..  ராதிகா, ஜெய்சங்கர், பேபி ஷாலினி நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது அந்தப் படம்..

இயக்குநர் மணிவண்ணனின் முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ அதிரிபுதிரி ஹிட்டாகியது. கே.ரங்கராஜின் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ நாயகனும் இவர்தான். ‘உதயகீதம்’ படத்தில் மைக் பிடித்தாலும் ‘நூறாவது நாள்’ படத்தில் கத்தியும் துப்பாக்கியும் பிடித்தார். வில்லனிக் ஹீரோவாகவும் மோகன் ரசிக்கவைத்தார். மோகனை ரசித்தார்கள். பாட்டுக்குப் பெயர் போன ‘நான் பாடும் பாடல்’ படத்தில், பாடகி அம்பிகாவின் காதலன் ப்ளஸ் கணவன் மோகன். மருத்துவராக நடித்தார்.

தொழிலதிபராக நடித்தாலும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வேலை தேடி அலையும் ‘குங்குமச்சிமிழ்’ மவுத் ஆர்கன் நாயகனையும் ஏற்றுக்கொண்டார்கள். ரேவதியால் குத்துப்படுவதையும் ரசித்தார்கள். ரேவதியைக் கொல்ல முனையும் ‘டிசம்பர் பூக்கள்’ படத்தையும் ஓடவைத்தார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யையும் ரசித்தார்கள். ரெண்டுபொண்டாட்டி ‘ரெட்டைவால் குருவி’ நாயகனையும் சிரித்து ஏற்றார்கள். மனைவி கேட்கும் விவாகரத்தை வழங்கும் ‘மெளனராகம்’ கணவனையும் மதித்துப் போற்றினார்கள்.

77-ம் ஆண்டு தொடங்கிய திரைப் பயணத்தில், 84-ம் ஆண்டு மோகனுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.

84-ம் ஆண்டில் மட்டும், மோகன் நடித்த படங்கள் 15-க்கும் மேலே வெளிவந்தன. வருடத்துக்கு 12 மாதங்கள். மாதம் ஒன்று என்று வந்தால், 12 படங்கள்தானே வந்திருக்கவேண்டும். ஆனால் 15 மோகன் படங்கள் வெளியாகின.

ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜி தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், மோகன் நடித்து ‘விதி’ வெளியானது. மோகன், பூர்ணிமா, ஜெய்சங்கர், சுஜாதா நடித்த ‘விதி’ வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் முதலாக, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் சாதாரணமானதல்ல. காதல் காட்சிகளாகட்டும், கோர்ட் காட்சிகளாகட்டும் மோகன் தன் நடிப்பால், இன்னும் மெருகூட்டியிருப்பார். மோகன் படங்களில் மறக்க முடியாத படங்களின் வரிசையில் ‘விதி’ படமும் ஒன்று.

அடுத்து, பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியானது ‘நூறாவது நாள்’. இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், மோகன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஏற்படுத்திய பரபரப்பும் பதட்டமும் இன்றைய தலைமுறையினருக்கும் மறக்காது.

ஜெயப்பிரகாஷ் செய்த கொலையும் அதன் பின்னர் அவர் விடுத்த ஸ்டேட்மெண்ட்டும் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டுடன் ஓடிக்கொண்டிருந்த படத்தை இன்னும் இன்னுமாக ஓடச் செய்தன. மோகன், நளினி, விஜயகாந்த், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். பாடல்களும் ஹிட்டாகி, படமும் ஹிட்டாகி, முக்கியமான படமாக இன்றைக்கும் இருக்கிறது ‘நூறாவது நாள்’. கெட்ட ஹீரோவாக பின்னிப்பெடலெடுத்திருப்பார் மோகன்.

இதன் பின்னர், ஏப்ரல் மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. மீண்டும் கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், ‘நிரபராதி’ எனும் திரைப்படம், ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. மோகனுடன் மாதவி நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களால் பேசப்பட்டது.

அடுத்து, இந்தப் படம் வெளியான நான்காம் நாள், அதாவது ஏப்ரல் 14-ம் தேதி, கோவைத்தம்பியின் ‘நான் பாடும் பாடல்’ வெளியானது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். மோகன் நடித்த இந்தப் படத்தில் சிவகுமார், அம்பிகா, பாண்டியன், இளவரசி முதலானோர் நடித்தனர். இந்தப் படத்தின் பாடல்கள் சக்கைப்போடு போட்டன. மோகனின் கச்சிதமான நடிப்பு, எல்லோரையும் ஈர்த்தது.

மே 4-ம் தேதி ‘நெஞ்சத்தை அள்ளித் தா’ படம் வெளியானது. மோகனுடன் சாதனா நடித்தார். அதே மே மாதத்தில், 12-ம் தேதி, மோகன், ஊர்வசி நடித்த ‘அன்பே ஓடி வா’ வெளியானது. ரஞ்சித்குமார் எனும் இயக்குநர் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் நடிகர், இயக்குநர் நடிகர், கதைகளின் நடிகர் என்பது போல், நடிகைகளின் நடிகர் என்றும் மோகன் பேசப்பட்டார். மோகனுடன் யார் நடித்தாலும் அது சூப்பர் ஜோடி என்று பேரெடுத்தது. மோகன் - ஊர்வசி ஜோடியும் அப்படி ஹிட்டடித்த ஜோடி.

ஜூலை மாதம் 19-ம் தேதி இதே மோகன் - ஊர்வசி நடித்த ‘சாந்தி முகூர்த்தம்’ வெளியானது. இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசை. பாடல்கள் எல்லாமே ஹிட். படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். கலகலவெனச் செல்லும் இந்தப் படத்தை எப்போதும் பார்க்கலாம்.

ஜூலை மாதம் 27-ம் தேதி மோகன் நடித்த ‘மகுடி’ வெளியானது. நளினி ஜோடியாக நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. இந்தப் படத்தில், மோகனின் தனித்துவமான நடிப்பைக் காணலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி, மோகன் நடித்த ‘ருசி’ வெளியானது. கங்கை அமரன் இசையில் பாடல்கள் அமைந்தன.

அந்த வருடத்தில், மோகன் - ஊர்வசி ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ‘வாய்ப்பந்தல்’ வெளியானது. ராம.நாராயணன் இயக்கினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார். படம் காமெடிப்படமாக கலகலவென இருந்ததை, ரொம்பவே ரசித்தார்கள் ரசிகர்கள்.

அக்டோபர் மாதம் 22-ம் தேதி, இயக்குநர் ஏ.ஜெகநாதன் இயக்கத்தில், மோகன், ஊர்வசி நடித்த ‘ஓ மானே மானே’ படம் வெளியானது. இளையராஜா இசை. மறுநாள் 23-ம் தேதி, கே.விஜயன் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில், ‘ஓசை’ வெளியானது. இதில் நளினி, மோகனுடன் நடித்திருந்தார். இந்தப்படத்திலும் மோகன், மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

இதே அக்டோபர் 23-ம் தேதி, இன்னொரு படமும் வெளியானது. கோவைத்தம்பியின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்தில், சிவகுமார், சுஜாதா, மோகன், ரேவதி முதலானோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில், எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஆக, ‘ஓ மானே மானே’, ‘ஓசை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’ என மூன்று படங்கள் வெளியாகி, மூன்றுமே வெற்றியைப் பெற்றன.

மைக்' மோகன் என்று இவருக்கு பெயர் வர காரணம், இவர் நடித்த படங்களில் மைக் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளில் பாடுவார். பெரும்பாலும் பாடகராகத்தான் நடித்தார். அது ஒரு சென்டிமெண்ட்டாகக் கூட கருதப்பட்டது. இவர் நடித்த முக்கால்வாசிப் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.

இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர். இவர் தேர்ந்தெடுக்கும் கதையெல்லாம் காதல் மற்றும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். 1986ஆம் ஆண்டு ஒன்பது படங்களில் மோகன் நடித்தார். அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'மௌன ராகம்'. இன்னொன்று, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான 'மெல்லத்திறந்தது கதவு' திரைப்படம். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்துக்கு இளையராஜா, எம்.எஸ்.வி என்று இரு இசை ஜாம்பவான்களும் இசையமைத்தனர்.

தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு மோகன் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென்றும், ஆண்கள், மோகன் போன்ற தோற்றத்தையும் அவரது உடை பாணியையும் பின்பற்ற முயன்று வந்தனர். தனது படங்களிலெல்லாம் பாடகராகவே தோன்றிய மோகனுக்கு, படங்களில் வெளிப்பட்ட குரல் அவரது குரல் இல்லை. இவருக்கு அனைத்து படங்களுக்கும் நடிகர் விஜயின் மாமாவும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தர் குரல்கொடுத்துள்ளார், பெரும்பாலான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வந்தன.

மோகன், 'பாசப்பறவைகள்' படத்தில் தனது குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் என்று ஐவர் உள்ளனர். ரஜினிகாந்த், மோகன், முரளி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன். இதில் ரஜினிக்கு பிறகு மோகனுக்குதான் அடுத்த இடமளிக்கலாம். அந்த அளவிற்கு வெற்றியை 80களில் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை. சரியான படங்கள் அமையவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு 'அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை.

இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மோகன். அவர் திரையில் வரவில்லை என்றாலும் அவரின் 'நிலாவே வா', 'வா வெண்ணிலா', 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்கள் இன்றளவும் இரவில் பலருக்கு தாலாட்டாக உள்ளது.

‘இவரை வைத்துப் படமெடுத்தால், முதலுக்கு மோசமில்லை’ என்று எம்ஜிஆர் படங்களைச் சொல்லுவார்கள். அதேபோல் ரஜினியைச் சொல்லுவார்கள். விஜயகாந்தை வைத்துப் படமெடுத்து நஷ்டம் அடைந்தவர்கள் என எவருமில்லை. இதேபோல், மோகனையும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கொண்டாடினார்கள். தியேட்டர்களுக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் வந்தார்கள். குடும்பம் குடும்பமாக மோகன் படங்களுக்கு வந்தார்கள்.

‘மோகன் ராசியான நடிகர் மட்டுமில்லை. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கெடுபிடிகள் எதுவும் செய்யமாட்டார்’ என்று தயாரிப்பாளர்  கோவைத்தம்பி மோகனைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

‘கதை கேட்டு அவருக்குப் பிடிச்சிருந்துச்சுன்னா, ஓகே சொல்லிருவார். அதுக்குப் பிறகு கதைக்குள்ளேயே வரமாட்டார். இதை மாத்துங்க, அதை மாத்துங்கன்னு சொல்லமாட்டார்.  அவரோட கேரக்டரை எந்த அளவுக்கு சிறப்பாச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு நடிச்சுக் கொடுத்துட்டுப் போவார்’ என்கிறார்கள் இயக்குநர்கள்.

‘மோகன் படம் போரடிக்காது. நடிப்பு யதார்த்தமா இருக்கும். பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும். குடும்பத்துல இருக்கற எல்லாரும் சேர்ந்து பாக்கலாம்’ என்கிறார்கள் ரசிகர்கள்.

1980-களில் இயக்குநர்களின் ஹீரோவாக இருந்த நடிகர் ‘மைக்’ மோகன் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அவர் கடைசியாக நடித்த ‘சுட்ட பழம்’ திரைப்படம் 2008-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்பு அவர் தமிழில் நடிக்கவே இல்லை.

“மோகன் ஏன் நடிக்கவில்லை..?” என்று கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியபடியே உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் அவரிடத்தில் கேட்டபோது, “நான் நடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே.. எனக்குப் பொருத்தமான.. நல்ல கேரக்டர் வந்தால் நிச்சயமாக நடிப்பேன். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார்கூட கேட்டாங்க. ஆனால் அந்தக் கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கலை. அதனால் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான கேரக்டர் கிடைக்கட்டும். நிச்சயமாக நடிப்பேன்..” என்றுதெரிவித்திருந்த நடிகர் மோகன், இப்போது ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் விஜயஸ்ரீ இயக்கும் ‘ஹரா’ என்ற படத்தில்தான் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐ.பி.சி. சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாம்.

தயாரிப்பாளர்களின் நடிகராக, இயக்குநர்களின் நடிகராக, கதைகளின் நடிகராக, ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகராக வலம் வந்த மோகன் 1987 இல் கௌரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகன் 1989 இல் பிறந்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்