புதன், 5 ஜனவரி, 2022

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு வாழ்க்கை வரலாறு

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அருணாசலம் – கருமாம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு ஆறுவயது ஆனா போது தாய் கருமாம்மாள் காலமனாதால், தந்தை அருணாசலம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூர் சென்றுவிட, சித்தியிடம் வாழ பிடிக்காமல் திருமலைராயன் பட்டினம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்தார், தங்கவேலு. அங்கும் அன்பும் மரியாதையும் கிடைக்காமல் தவித்தவர், நாடகங்கள் பார்த்து மனதை தேற்றினார்.

பிறகு நாடகத்தில் நடித்து தன் வாழ்க்கை பயணத்தை தொடர்வது என்று முடிவு செய்தவர், ஆரம்பத்தில் ராஜாம்பாள் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சிறிய சிறிய வேடங்களில் நடித்து கவனிக்க வைத்தவர், அதன் பிறகு ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கந்தசாமி முதலியாரின் நாடக்குழுவிலும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தவர், கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம் ‘சதி லீலாவதி’ என்கிற படமாக உருவான போது அதில் ஒரு சிறிய வேடத்தில் தங்கவேலுவும் நடித்தார்.

பத்து வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த தங்கவேலு, இருபது வயதில் திரைபாடத்தில் நடித்து 1936ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருடன் எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன் என பலரும் அறிமுகமாகி இருந்தனர்.

‘சதி லீலாவதி’ படத்திற்கு பிறகு படவாய்ப்பு எதுவும் தங்கவேலுவுக்கு கிடைக்கவில்லை. தங்கவேலுவும் என்.எஸ்.கிருஷ்ணனும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். அதனால் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவில் தன்னை அழைத்த போது, மறுப்பேதும் சொல்லமால் அவருடன் சேர்ந்து கொண்டார்.

நாடகங்கள் நடத்திக் கொண்டே திரையுலகிலும் புகழ்பெற்று விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன், 1951 ஆம் ஆண்டு மணமகள் என்கிற படத்தை தயாரித்து இயக்கிய போது அந்தப் படத்தில் பத்மினியின் உதவியாளராக தங்கவேலுவை நடிக்க வைத்தார்.

அந்தப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ‘சிங்காரி’ என்ற படத்திலும் நடித்தார் தங்கவேலு. இந்த ‘சிங்காரி’ படத்தின் கதை ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் தான் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் ஏற்றார் தங்கவேலு.

‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயருக்கு முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.

‘சிங்காரி’ படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘பணம்’.

தங்கவேலுவின் நண்பர் என்.எஸ்.கிருஷ்ணன், இரண்டாவதாக இயக்கிய அந்தப் படத்தில் அவருக்கு ஆடியபாதம் என்கிற பாத்திரம் கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இரண்டாவது படமாக வெளியான அந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் தங்கவேலு. அதன் பிறகு, சிவாஜிகணேசனுடன் மட்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரது திரைப்பயணம் தொடர்ந்தது.

“என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி… தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்தான்” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு.

அதன் பிறகு எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கால்ஷீட்டுக்காக சில கதாநாயகர்களின் படங்கள் காத்திருந்தது உண்டு. சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டர்களில் மூன்று படங்கள் வெளியானால், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு காதாநாயகர்கள் நடித்திருப்பார்கள். ஆனால், தங்கவேலு அந்த மூன்று படங்களிலும் நடித்திருப்பார்.

காமெடி நடிகர்களால்  கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று   நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் இன்று நிரூபித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.

சாதாரணமாக பெரிய, பெரிய கதாநாயகர்களே  ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு   பயப்பட்ட பானுமதியுடன் ‘ரம்பையின் காதல்’ படத்தில் நாயகனாக நடித்தார் தங்கவேலு.

தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஜோடியான எம்.சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத  படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘கல்யாணப் பரிசு.’

நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம்.

வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம் ரொம்ப பிரபலம்.

“தங்கவேலு, சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி கலகலப்பு!

‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’ என்பதும், ‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்”, என்பதும், “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம் எல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்!

வடிவேலுவின் வசனங்களையும், கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் கொண்டாட்டமாக இருப்பது போல, அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.

சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான்.

தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன். சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’ படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி. பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம்.

கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார். பாகவதரின் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கவனித்து வந்தவர் தங்கவேலு. 

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.

1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 1994ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.

தமிழ்த் திரையுலகில் சரித்திர கால பாத்திரங்கள், புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி,  எஸ்.எஸ்.ராஜேந்திரன் என மிகச் சிலரே. இந்த கதாநாயகர்களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த  ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு.

நேரிலே பேசும்போதும், சரி படங்களில் நடிக்கும்போதும், அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு. அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்.

தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்தார் அவர்.

தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.

சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.

1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைவாணர் விருது பெற்றுள்ள தங்கவேலு, தனது நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கும் வடபழனியில் இடம் வாங்கி வீடு கட்டி கொடுத்துள்ளார்.

1953 ஆம் ஆண்டு தி.நகர் ராஜபாதர் தெருவில் தனக்கு வீடு கட்டிய தங்கவேலு, அங்கு தனது இரண்டு மனைவிகளுடன் கடைசி காலம் வரை வசித்து வந்தார். முதல் மனைவி ராஜாமணிக்கு குழந்தை செல்வம் கிடைக்க வெகுநாட்கள் ஆகின. அதன் பிறகு விஜயா, வளர்மதி என இரண்டு மகள்கள் பிறந்தனர். கல்யாண பரிசு படத்தின் நூறாவது நாளில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடிகை சரோஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுமதி என்கிற மகள் இருக்கிறார்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக, கலைவாணர் மறைந்த பிறகு, அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தர் தங்கவேலு, 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு தனது 77 வது வயதில் காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் வாழ்க்கை வரலாறு

1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நிலச்சுவான்தார் ராமகிருஷ்ணனின் மூன்றாவது மனைவி லட்சுமிக்கு பிறந்தவர்தான், மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.

சிறுவயதில் வேதபாட சாலைக்கு அனுப்பப்பட்ட மகாலிங்கத்துக்கு, பாடம் மனதில் பதியவே இல்லை. மனசு முழுக்க பாட்டுதான் பரவிக்கிடந்தது. திண்ணை பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரை ஒருவழியாய் நகர்ந்தபின், செல்லூர் சேஷ அய்யங்கார் கோஷ்டியுடன் பாட்டோடு இணைந்த மகாலிங்கம், பஜனை மடங்களிலும், கோயில்களிலும் தன் உரத்த குரலால் பாடி, உள்ளூர்வாசிகளை ஆனந்தம் அடையச் செய்தார்.

வீட்டில் பள்ளிக் கூடம் அனுப்ப எவ்வளவோ ஆசைப்பட்டார்கள். மகாலிங்கத்துக்கோ பாட்டு பாடவும் நடிக்கவுமே ஆசையாக இருந்தது. பள்ளிக்கு போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் மகாலிங்கம் சேர்ந்தார். பத்து வயதில் பலர் பாராட்டும் படி அவரது நடிப்பு அமைந்தது.

அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அந்த காலத்துப் பாடகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, எஸ்.சி.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், என பலர் தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. மகாலிங்கமும் உரத்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி. கிட்டப்பா என்றால் உயிர். எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே காலமானதால், கிட்டப்பாவின் பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.

12 வயதில், ஒரு நாடகத்தில் பாடி நடித்தபோது, மகாலிங்கத்தின் பாட்டில் மனம் லயித்த, அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்யமூர்த்தி, மகாலிங்கத்திற்கு தங்க மோதிரம் பரிசளித்தார். 13 வயதில் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போனார் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அந்த நேரத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன் மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது.

மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்து சென்று நந்தகுமார் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த 'யுக தர்ம முறையே' என்ற பாடலைப் பாடியபடியே மக்களிடம் திரையில் அறிமுகமானார் மகாலிங்கம்.

மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’ 1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். தமிழ், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட நந்தகுமார் படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.

திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.

 

மீண்டும் ஏவி.எம்.மெய்யப்ப செட்டியாரின் ‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.

அடுத்து ஏவிஎம் தயாரிப்பில் நடித்த நாம் இருவர் படமும் அவருக்கு பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.

1948–ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாக வந்த ‘‘ஆதித்தன் கனவு’’, 1949–ம் ஆண்டில் ‘‘பவளக்கொடி’’, ‘‘மாயாவதி’’ மற்றும் ‘‘இன்பவல்லி’’ போன்ற படங்கள் மகாலிங்கத்துக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடித்தரவில்லை.

தவிர மகாலிங்கம் நடித்துக் கொண்டிருந்த சிலபடங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நின்றன. மகாலிங்கமும், பி.பானுமதியும் நடித்த ‘‘புலேந்திரன்’’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு விளம் பரங்கள் வெளியிடப்பட்டு, பின் கைவிடப்பட்டது.

‘‘ஆதித்தன் கனவு’’ திரைப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக நடித்தவர் அஞ்சலிதேவி. அவரை மகாலிங்கத்தின் ஜோடியாகக் கொண்டு ‘‘தூக்குத்தூக்கி’’ என்ற படமும் ‘‘மங்கையர்க் கரசி’’ என்ற படமும் தயாரிக்கப்பட்டு பின் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டன.

இந்த சூழ்நிலையில்தான் மகாலிங்கத்தின் மனதில்  சொந்த படம் எடுப்பது என்கிற எண்ணம் தோன்றியது.

‘‘நாம் இருவர்’’ திரைப்படத்தில் மகாலிங்கம் ஏற்ற பாத்திரத்தின் பெயர் ‘சுகுமார்’. அதுவே தனக்கு அதிர்ஷ்டம் தந்த பெயர் என்று கருதி மகாலிங்கம் தனது மகனுக்கும் சுகுமார் என்று பெயரிட்டிருந்தார். தனது திரைப்பட நிறுவனத்திற்கும் ‘ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ்’ என்று பெயரிட்டார்.

இந்தா நிறுவனத்தின் சார்பாக ‘மச்சரேகை’ என்ற திரைப்படம் 1950–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் மகாலிங்கம் சர்வாதிகாரியாகவும், மச்சராஜனாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார்.  கதாநாயகி எஸ்.வரலட்சுமி நடித்தார். சி.ஆர்.சுப்பாராமன் இசையமைக்க பி.புல்லையா இயக்கிய அந்த படம் தோல்வியடைந்தது.

மகாலிங்கம் நடித்த பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘‘லைலா–மஜ்னு’’ வெளிவந்து தோல்வி எண்ணிக்கையைக் கூட்டியது. எனினும் சிட்டாடலின் ‘‘இதயகீதம்’’ ஓரளவு ஓடி மகாலிங்கத்திற்கு ஆறுதல் தந்தது.

எனினும் தன் சொந்தப்பட முயற்சியை கைவிடாத மகாலிங்கம் 1951–ம் ஆண்டில் ‘‘மோகனசுந்தரம்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார்.  அடுத்து எடுத்த படம் ‘‘சின்னதுரை’’. 1952–ம் ஆண்டில் வெளிவந்தது. இந்தப் படத்தை மகாலிங்கமே இயக்கியிருந்தார். இந்தப் படங்களில் ஜோடியாக நடித்தவர் எஸ்.வரலட்சுமி. அதே ஆண்டில் ஸ்ரீவள்ளி புரடக்ஷன்ஸ் மகாலிங்கம், மாதுரிதேவி மற்றும் வரலட்சுமியைக் கொண்டு பி.வி.கிருஷ்ணன் இயக்கத்தில் ‘‘வேலைக்காரன்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டது. இப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

எப்படியும் வெற்றித் தயாரிப்பாளராக வேண்டும் என்ற உணர்வு மகாலிங்கத்துக்கு இருந்து கொண்டேயிருந்தது. 1954–ம் ஆண்டில் ‘‘விளையாட்டு பொம்மை’’ என்ற திரைப்படம் தயாரித்தார். இந்த படத்தில் முந்தைய அவரது படங்களின் தயாரிப்பிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டன. குறிப்பாக இப்படத்தில் மகாலிங்கத்தின் ஜோடியாக குமாரி கமலா நடித்தார். இயக்கம் டி.ஆர்.ரகுநாத். வழக்கம்போல் படத்தில் மகாலிங்கம் பாடிய, ‘தீர்த்தக் கரையினிலே’, ‘மோகத்தைக் கொன்றுவிடு’, ‘விதிக்கு மனிதன் விளையாட்டு பொம்மை’ போன்ற சிறப்பான பாடல்களை மகாலிங்கம் பாடியிருந்தும் படம் தோல்வியுற்றது.

அடுத்து ‘‘தெருப்பாடகன்’’ என்ற படத்தை தயாரித்தார். படம் முடிக்கமுடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த ஒரு பெரிய நடிகர் கால்ஷீட் ஒழுங்காக கொடுக்காததால் வெறுப்படைந்த மகாலிங்கம் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு  கம்பெனியை மூடிய மகாலிங்கம் தனது மயிலாப்பூர் மாளிகையையும் இழக்க வேண்டிவந்தது.

1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் இழந்தது மகாலிங்கம் என்ற தயாரிப்பாளர்தான்.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

ஊருக்கு சென்றாலும் நாடகங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை. மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை மென்மையான குரலில் 'நானன்றி யார் வருவார்?' பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கிக் காட்டினார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதில் 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.

1958-ல் வெளியான 'மாலையிட்ட மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம் அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் மகாலிங்கம். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர் கண்ணதாசன்.

1959-ம் ஆண்டு அமுதவல்லியில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான இசையில் பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை ரசிக்காதவர்கள் யார்?

1960-ம் ஆண்டு 'ஆடவந்த தெய்வம்' படத்தில் 'மழை கொட்டு கொட்டு கொட்டுது பாரு இங்கே' என்கிற பாடலில் சாதாரண மக்களுக்கும், சங்கீதம் பரிமாறியிருப்பார். 'ரத்தினபுரி இளவரசி'யில், காதலுக்கு நாலு கண்கள், கவலையில்லாத மனிதனில், நான் தெய்வமா? இல்லை நீ தெய்வமா? என மகாலிங்கத்தின் பாடல்கள் புகழ் பரப்பின  

1965-ல் A.P. நாகராஜனின் 'திருவிளையாடல்' டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத் திரும்பிய திசையெல்லாம் மீண்டும் ஒலிக்கச் செய்தது. ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ பாடல்...

மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில் நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு சென்றுவிட்டார்.

நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.

டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும் நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில் பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால், இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் மனைவி பெயர் கோமதியம்மாள். இவர்களுக்கு சுகுமாரன் என்கிற மகனும், சாவித்திரி, மகலாட்சுமி என இரு மகளும் பிறந்தனர்.

சுமார் நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள மகாலிங்கம், சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞன். வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சியாவர். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

ஐந்து கட்டையில், ஆயிரம் ஆயிரம் மேடையில் முழங்கிய இந்த தென்கரையின் பாட்டுப்பறவை, மரணம் என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டது.

சுமார் 45 ஆண்டுகள் கலை உலகைத் தனது கம்பீரக் குரலால் கட்டுப்படுத்தி வைத்திருந்த இந்த கானப்பறவை, 54-வது வயதில் மரணத்தைத் தழுவியது.

வாழ்க்கை எவ்வளவு நிஜமோ?. மரணம் அவ்வளவு நிஜம். ஆனால், மரணத்தைப் பொய்யாக்கி விடுகிறது, மகாலிங்கத்தின் ஒவ்வொரு பாடலும்

தொகுப்பு : ஜி.பாலன்