ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நட்புக்கு மரியாதை தரும் குஷ்பு

1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி மும்பையில் பிறந்தவர் குஷ்பு. அந்தேரி பகுதியில் உள்ள சுவாமி முக்தானந்தா உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

பத்தாவது வயதில் ரவி சோப்ரா இயக்கிய The Burning Train என்கிற இந்திப் படத்தில் "Teri Hai Zameen Tera Aasman" என்கிற பாடலை பாடும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டில் சிறுமியாக நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து ஆறு படங்களில் நடித்தார். இதில் சுனில் தத் நடித்த Dard Ka Rishta படம் அவரை கவனிக்க வைத்தது. அதே போல அனில் கபூர் நடித்த Meri Jung படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.  

1985 ஆம் ஆண்டு ஜாக்கி ஜெராப் ஜோடியாக ஜானோ என்கிற இந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக 1986ல் கலியுக பாண்டவலு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க வந்தார். இந்தப் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ந்து நான்கு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

1988ல் ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் தமிழ் படத்திலும், ரவிச்சந்திரன் நடித்த ரணதீரா கன்னட படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்கள் அவருக்கு அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கமலுடன் வெற்றி விழா, கார்த்திக்குடன் கிழக்கு வாசல், பிரபுவுடன் சின்னத்தம்பி, சத்யராஜூடன் நடிகன், சரத்குமாருடன் நாட்டாமை, அர்ஜுனுடன் சேவகன், முரளியுடன் வீரதாலாட்டு, ஜெயரமுடன் புருஷ லட்சணம், பார்த்திபனுடன் தாலாட்டு பாடவா, பாண்டியாஜானுடன் கோபால கோபாலா, பாக்யராஜூடன் அம்மா வந்தாச்சு, ராஜ்கிரனுடன் பொண்ணு வெளையி பூமி நெப்போலியனுடன் எட்டுபட்டி ராசா என மொத்தம் 97 தமிழ் படங்களிலும் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், ஜெயராம், குன்சக்க போபன் போன்ற நடிகர்களுடன் 14 மலையாள படங்களும்,  ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன், அம்பரிஸ் போன்றவர்களுடன் 18 கன்னட படங்களிலும், 13 இந்திப் படங்களிலும் என மொத்தம் 142 படங்களில் நடித்திருக்கிறார் குஷ்பு.

தமிழில் சத்யராஜீடன் `நடிகன்தொடங்கி `பெரியார்வரை 13 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரபுவுடன் 10 படங்களிலும்,  பி.வாசுவின் இயக்கத்தில் ஒன்பது படங்களிலும் நடித்திருக்கிறார். அமிதப்பச்சனுடன் மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தவர் இவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்.
குஷ்புவின் ஒரிஜினல் பெயர் நக்கத்கான். சினிமாவில் `நக்கத்என்று உரிமையோடு அழைக்கும் ஒரே ஒருவர் கமல், சுந்தர்.சி. அவரை குட்டிம்மா என்றும் வைஃபி என்றும் அழைப்பார். அவரது தோழிகளும் நண்பர்களும், குஷ் என்று செல்லமாக அழைப்பார்கள்.

இவர் நடித்ததில் இவருக்கு பிடித்த படங்கள் `சின்னத்தம்பி’, ஜாதி மல்லி’, `வருஷம் 16’. இவரது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் பிடித்தவை `உள்ளத்தை அள்ளித்தா’, `அன்பே சிவம்’. கணவர் நடித்ததில் பிடித்த படம் `தலைநகரம்’.
இவருக்கு தமிழில் கார்த்திக், அர்விந்தசாமி, பாலிவுட்டில் அமிதாப், அமீர் கான் பிடித்த கதாநாயகர்கள். பாலிவுட் கோவிந்தா இவருடைய சிறந்த நண்பர்.
நடிகர் பார்த்திபனை `மூர்த்திஎன்று இயற்பெயர் சொல்லி அழைப்பார். அதேபோல கார்த்திக்கை முரளி என்று இயற்பெயர் சொல்லி அழைப்பார்.
இன்றைய ஹீரோக்களில் யாருடன் ஜோடியாக நடிக்க விருப்பம் என்று கேட்டால் யோசிக்காமல் வரும் பதில், `தனுஷ்’!

`தர்மத்தின் தலைவன்தொடங்கி இன்று வரை ரஜினியும் குஷ்புவும் சந்தித்தால் மராத்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.

அஞ்சலிதேவி, சாவித்ரி, சரோஜாதேவி, ராதிகா, ரேவதி, ஊர்வசி ஆகிய ஆறு நடிகைகளும் இவருக்குப் பிடித்தவர்கள். இதில் அழுது வடிவதுபோல் வரும் சரோஜாதேவியைப் பிடிக்காதாம். கிளாமராக நடிக்கும் சரோஜாதேவிதான் இவருக்கு பிடிக்குமாம்.

குஷ்புவிக்கு திருச்சிக்கு அருகிலுள்ள கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியது செய்தி. ஆனால், இன்று வரை அந்த ரசிகர் யார் என்றும் தெரியாது, அந்த கோயிலையும் நான் பார்த்ததில்லை என்கிறார் குஷ்பு.

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர் அனு, நடிகை மதுபாலா, நடிகர் பஞ்சு சுப்பு, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகிய ஐவர்தான் குஷ்புவின் மிக நெருங்கிய நண்பர்கள். நட்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பார் இவர்.

`முறை மாமன்படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துகொண்டு இருந்த சமயம் `பம்பாய்படம் பார்க்கப் சென்று திரும்பிய போது சுந்தரின் மீது காதல் பூத்ததாம் இவருக்கு. குஷ்பு சுந்தர்.சி தம்பதியினருக்கு  அவந்திகா, அநந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.

மழலைப் பேச்சு, கிறுக்கல் கையெழுத்து, பிறந்த நாள் உடைகள், வீசியெறிந்த சாக்லேட் பேப்பர்கள், புகைப்படங்கள் என்று தன் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்கிறார் இவர்.
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் ஸ்பெஷல், மற்ற வார நாட்களில் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். மகள்கள் படிக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பெற்றோர்கள் சங்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுப்பார்.

அவ்னி சினிமாக்ஸ்என்ற படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு பொன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது அரண்மனை படத்தை தயரித்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி புகழ் பெற்றது. சில தொடர்களில் நடித்திருக்கிறார்.


2010ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக