புதன், 2 மார்ச், 2022

நடிகை எம்.என்.ராஜம் வாழ்க்கை வரலாறு

வில்லி, கதாநாயகி, நகைச்சுவை வேடம் என எந்த வேடம் கிடைத்தாலும் அந்த வேடத்தில் சிறப்பாக நடித்து அந்த வேடத்திற்கு பெருமை சேர்த்தவர் என்கிற பெயரை பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். மதுரையில் 1940 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர், எம்.என்.ராஜம். அவருடைய தந்தை நரசிம்மன் ஆங்கிலேயர் ஆட்சியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர். திடீர் என உடல்நிலை சரியில்லாமல் போய், அவருடைய கண் ஊனமாகிவிட்டது. இதனால் அவருக்கு வேலை போனது.

வருமானம் இல்லாமல் எப்படி குடும்பத்தையும் மூன்று குழந்தைகளையும் காப்பற்ற முடியும். விஷயத்தை கேள்விப்பட்ட கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் அவருக்கு நம்பிக்கை தந்தார்கள். எங்களுடைய நாடகக் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்.

சப் இன்ஸ்பெக்டராக நெஞ்சை நிமிர்த்தி நடந்த நரசிம்மன், மேடையில் பபூனாக கூனி குறுகி நடித்தார். காரணம் குடும்பத்தின் சூழ்நிலை. காலம் மதுரையை தொடர்ந்து திருச்சி, சென்னை என்று அழைத்து வந்தது.

சென்னையில் எம்.கே.ராதாவை சந்தித்த போது அவர் மூலமாக பெண்ணை நடிக்க வைக்கலாமே என்று அவர் கடிதம் எழுதி கொடுக்க, அவருடைய சிபாரிசு கடிதம் மூலமாக மதுரை மங்கள கான சபாவில் எம்.என்.ராஜம் ஏழு வயதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடத்திய கம்பெனி அது. அங்கு அவரைப் போலவே நிறைய பெண்கள் இருந்துள்ளனர். ராமாயணம் நாடகத்தில் குரங்குக் குட்டி, கிருஷண லீலா நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தோழன் என சின்ன சின்ன வேஷங்கள் எம்.என்.ராஜத்துக்கு நடிக்க கிடைத்தது. அதே நேரத்தில் பாட்டு பாட, நடனம் ஆட, வசனம் பேச என்று நாடகத்திற்கு தேவையான எல்லா பயிற்சிகளும் அங்கு அவருக்கு கிடைத்தன. அது ஒரு குருகுலம் மாதிரி. காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள். பாடம் தொடர்ந்து நடக்கும். ஒழுங்காக நடனம் வரவில்லை என்றால் அடிதான்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக்குழுவை தொடர்ந்து டி.கே.சண்முகம் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார், எம்.என்.ராஜம். அதில் கல்கி எழுதிய ‘கள்வனின் காதலி’ நாடகத்தில் கதாநாயகனின் தங்கை அபிராமியாக ஆடி பாடி நடித்திருக்கிறார். ஒரு முறை அந்த நாடகத்தை பார்க்க வந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.என்.ராஜத்தின் நடிப்பையும், பாட்டின் போது உள்ள குரல் இனிமையையும் பாராட்டி பேசி இருக்கிறார். இது எம்.என்.ராஜத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

எம்.என்.ராஜத்தின் நடிப்பும், குரலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் பிடிக்கும். அவருடைய நாடகத்தில் மட்டுமல்லாது அவர் தயாரிப்பில் அறிஞர் அண்ணா எழுதிய ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் வழங்கினார். அந்தப் படத்தில் டி.ஏ.மதுரத்துடன் இணைந்து “எட்டு எழு ஆறு” என்கிற பாடலை சி.ஆர்.சுப்பராமன் இசையில் பாடி எம்.என்.ராஜத்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அதன் பிறகு நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவிலும் தொடர்ந்து நடித்தார். அவர் நடித்த இரண்டாவது படம் ‘மங்கையர்கரசி’. பி.யூ.சின்னபா  நாயகனாக நடித்த அந்தப் படத்தில் பரலோக கன்னியாக நடித்தார். அடுத்து எம்.ஜி.ஆர். நடித்த ‘என் தங்கை’ படத்தில் அழகியாக சிறிய வேடம் ஒன்றில் நடித்தவர், சிவாஜி நடித்த ‘பராசக்தி’ படத்தில் பண்டரிபாய் நடித்த வேடத்தில் நடிக்க அழைத்து, கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனங்களை பேச வைத்து பார்த்தார்கள். எம்.என்.ராஜம் பேசும் வசனங்கள் ஏற்ற இறக்கத்துடன் அருமையாக இருந்தது. ஆனால், சிறுமியாக இருக்கிறாரே என்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதன் பிறகு சிவாஜியுடன் ‘மனிதனும் மிருகமும்’ படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்த எம்.என்.ராஜம், டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் டி.ஆர்.ராமசந்திரன் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் நர்சாக நடித்தார். டி.கே.சண்முகம் நடித்த ‘பெண்மனம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவரை, ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் நாயகியாக நடிக்க அழைத்த போது, கொஞ்சம் அதிர்ந்தே தான் போனாராம்.

எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் திரைப்படமாக எடுக்க முடிவான போது, அதில் காந்தாவாக நடிக்க பிரபலமாக இருந்த பல நடிகைகளை கேட்டனர். அந்த வேடம் வில்லி வேடம், விலை மாது வேடம், அதுவும் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்க பயம் என்று பலர் ஒதுங்கினர்.

இந்த தகவலை என்.எஸ்.கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்த இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இருவரிடமும், பேசாமல் புதுமுகத்தை நடிக்க வையுங்கள். அல்லது நம்ம ராஜத்தை நடிக்க வையுங்கள் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஆலோசனை கூறி இருக்கிறார்.

ஏற்கனவே ‘பராசக்தி’ படத்திற்கு அழைத்து பார்த்து வசனம் பேச வைத்து பார்த்த போது “உருவம் தெரியவில்லை. சத்தம் மட்டும் தான் கேட்கிறது. ஒல்லியாக இருக்கிறாரே” என்று ஒதுக்கிய எம்.என்.ராஜம் நினைவுக்கு வர, என்.எஸ்.கிருஷ்ணன் ஆலோசனை சரியாகத்தான் இருக்கும் என்று எம்.என்.ராஜத்தை அழைத்து பேசினார்கள்.

அப்போது எம்.என்.ராஜத்துக்கு பதினான்கு வயது. முதலில் நடிக்கப் போகும் பெரிய வாய்ப்பு என்பதால் உடனே ஒப்புக் கொண்டார். முதல் நாள் சந்திரபாபுவுடன் “ஆளை ஆளைப் பார்க்கிறார்” என்கிற பாடலுக்கு வாயசைத்து ஆடிப்பாட வேண்டும். இருவருக்கும் தண்டபாணி பிள்ளை நடனம் ஆட சொல்லிக் கொடுத்துள்ளார்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது எம்.ஆர்.ராதா “நீ இப்படி பேசு, அப்படி நடி” என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். “நீ சரியாக நடிக்கவில்லை என்றால் நான் மட்டும் நடித்து பிரயோசனம் இல்லை” என்று ஒவ்வொரு காட்சியிலும் நடிக்க உதவி செய்து உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

எம்.ஆர்.ராதாவை படிக்கட்டில் எட்டி உதைக்கும் காட்சியில் ஒரு உயர்ந்த மனிதர், சீனியர் நடிகர். அவரை எட்டி உதைப்பதா என்று அந்த காட்சியில் நடிக்க மறுத்த ராஜத்திடம், நீங்கள் அப்படி நடிக்கவில்லை என்றால் அவரும் நடிக்க மாட்டேன் என்பார். பிறகு உனது காட்சிகளை நீக்கிவிட்டு வேறு நடிகையை வைத்து மீண்டும் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார், இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு. சரி என்று அரை மனதுடன் சம்மதித்த ராஜம், டைரக்டர் டேக் என்றதும் ஓங்கி எட்டி உதைத்து... அவரே விழுந்துவிட்டார். ஆனால், விழ வேண்டிய எம்.ஆர்.ராதா அப்படியே நிற்கிறார்.

“என்னாம்மா இது. நீ உதைத்து நான் விழா வேண்டாமா? நீ போய் விழறே” என்று கேள்வி எழுப்பிய எம்.ஆர்.ராதா, பிறகு “நீ ஓங்கி உதைக்கிற உதையில் நான் விழனும். அடிபடனும். அப்பத்தான் ரசிகர்கள் இந்த காட்சியை ஏத்துக்குவாங்க” என்று கூறியதும், “உங்களை உதைக்க எனக்கு பயமா இருக்கு அண்ணே... கை கால் நடுங்குது அண்ணே” என்று எம்.என்.ராஜம் பதில் கூறி இருக்கிறார்.

“இங்கே நான் மோகனசுந்தரம். நீ காந்தா. அவ்வளவுதான். நீ உதைக்கிற... நான் விழுறேன்... அந்த கேரக்டர் ரெண்டுக்கும் நாம உயிர் கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு எம்.ஆர்.ராதா ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டார்.

இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு டேக் என்றதும், எம்.என்.ராஜம், ஓங்கி உதைக்க, மாடி படியில் விழுந்து உருண்டு புரண்டு கீழே விழுந்து தலையில் அடிபட்டு வசனம் பேசி நடித்திருக்கிறார், எம்.ஆர்.ராதா.

எம்.ஆர்.ராதா விழுந்ததும் தலையில் ரத்தம் வருவதைக் கண்டு நடுங்கி போய்விட்டாராம் எம்.என்.ராஜம். டேக் ஒகே என்றதும், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார், எம்.என்.ராஜம். “ஐயோ அப்படி சொல்லாதே... நீ நல்ல ஆக்ட் பண்ணினாய்... நீ அப்படி பண்ணா தான் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்...  நீ நல்லா இருப்ப...” என்று வாழ்த்தி இருக்கிறார், எம்.ஆர்.ராதா.

‘ரத்தக்கண்ணீர்’ படத்திற்கு பிறகு மாடர்ன் தியேட்டர் சுந்தரம் தயாரிக்கும் மூன்று படத்திற்கு ஒப்பந்தமானார் எம்.என்.ராஜம். அதில் முதல் படம் கே.ராம்நாத் இயக்கத்தில் பத்மினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த ‘கதாநாயகி’ படம். இரண்டாவது சாவித்திரி, ஜெமினி கணேசன், தங்கவேலு நடித்த ‘மகேஸ்வரி’. ‘மகேஸ்வரி’ படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது படத்தில் நாயகி வேடம் கிடைக்கும் என்று எதிர்ப் பார்த்தார், எம்.என்.ராஜம்.

ஆனால், கே.சாரங்கபாணி, எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க நடிகை கிடைக்கவில்லை என்று அந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சொல்லிவிட்டார், தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம்.

இதை கேள்விப்பட்டதும், முதலில் மேனேஜர் சுலைமானிடம் நகைச்சுவை வேடத்தில் நடிக்க மறுத்த எம்.என்.ராஜம், பிறகு டி.ஆர்.சுந்தரம் அழைத்து பேசி “அடுத்து உனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருகிறேன். இந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடி” என்று கூறியாதும் சம்மதித்திருக்கிறார்.  “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் புல்புல் என்கிற நகைச்சுவை வேடத்தில் முதல் முறையாக நடித்தார், எம்.என்.ராஜம்.

‘மங்கையர் திலகம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். “பெண்ணின் பெருமை” திரைப்படத்திலும் கிட்டத்தட்ட சிவாஜிக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான்.

‘ரங்கோன் ராதா’ படத்தில் கேட்கவே வேண்டாம். பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ‘பாக்கியவதி’ படத்திலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் சிவாஜியை மயக்கும் மோகினி பாத்திரம். அத்தனை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் எம்.என்.ராஜம். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்ணாலே வெட்டாதே” பாடலின் போது, “நடன இயக்குநர் இல்லையா” என்று சிவாஜி கேட்க, “என்னுடைய நாயகனும் நாயகியும் நடனம் ஆடுபவர்கள் கிடையாது. அவர்கள் எப்படி ஆடி பாட வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்” என்று இயக்குநர் எல்.வி.பிரசாத்,  நடித்துக் காட்டி அதைப் போலவே சிவாஜி, ராஜம் நடனம் ஆடி நடிக்க படமாக்கியிருக்கிறார்.

‘மக்களை பெற்ற மகராசி’ படத்தில் சிவாஜிக்கு தங்கையாக கல்லூரியில் படிக்கும் நம்பியாரை காதலிக்கும் வேடம். இருவரும் தனி தனியாக “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” என்று வயல்வெளியில் பாடிக் கொண்டே கடைசியில் ஒன்று சேர்வார்கள். அவர்களைப் பார்க்கும் அண்ணன் சிவாஜி, தங்கையை பளார் என்று அறைவார். பரணி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட அந்த காட்சின் போது உண்மையிலேயே அறைந்துவிட்டார், நடிகர் திலகம் சிவாஜி.

ராஜமும் உண்மையிலேயே அழுதுவிட்டாராம். அதன் பிறகு சிவாஜி பேசும் வசனங்கள் அவர் காதில் விழவே இல்லையாம். கவுண்டமணி சொல்வது போல “காதில் சொய்ங்” என்கிற சப்தம் மட்டுமே கேட்டதாம். அவரிடம் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்று சொன்னால், சிவாஜி அறைந்ததும், காது கேட்காமல் அப்படி ஒரு சத்தம் வந்து மட்டுமே நினைவுக்கு வருமாம்.

‘பதிபக்தி’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதுவும் “கொக்கரக் கொக்கரக்கோ சேவலே” பாடலில் சிவாஜியுடன், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். இந்தப் பாடல் காட்சிகளை இரண்டு நாட்கள் செயற்கை மழையில் நனையவைத்து எடுத்தார்களாம். இரண்டு நாட்களும் காலை முதல் மாலை வரை மழையில் நின்று நடித்ததால் சிவாஜி, ராஜம் இருவருக்குமே ஜுரம் வந்துவிட்டதாம்.

சிவாஜியுடன் நடித்த ‘தெய்வபிறவி’ படத்தில் “காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு” பாடலில் நடித்திருந்தார் ராஜம். அந்தப் பாடலை முதலில் குளிப்பது போல் எடுக்க வேண்டும்மென்று நினைத்தார்கள். பிறகு குளித்துவிட்டு வந்த பிறகு பாடுவது போல எடுத்தார்கள். படம் வெளியான போது ராஜத்தை பார்ப்பவர்கள், காளை  வயசு வருகிறது என்று அவரை கிண்டல் செய்தார்களாம்.

‘பாவை விளக்கு’ திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் சிவாஜியின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான “காவியமா… நெஞ்சின் ஓவியமா” பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் சிவாஜியும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை மறக்கவெ முடியாது. அந்தப் படப்பிடிப்புக்காக அவர்கள் ஆக்ரா, குதுப்மினார் சென்ற அனுபவங்களை சொன்னால் ஒரு நாள் போதாது. அவ்வளவு சுவராஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.  

‘பாசமலர்’ படத்திலும் ராஜம் அவர்கள் சிவாஜிக்கு ஜோடியாக அருமையான பாத்திரத்தில் நடித்து பரிதாபப்பட வைப்பார். இந்தப் படத்தில் இடம்பெற்ற “பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்” பாடலை எடுக்கும் முன் எதற்காக இந்த பாடல் எடுக்கிறீர்கள் என்று இயக்குநர் பீம்சிங்கிடம் ராஜம் கேட்டிருக்கிறார்.

“உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். அப்போது நீ பாடி ஆட வேண்டும்” என்று இயக்குநர் பீம்சிங் கூறியதும், “நான் பாடி நடிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய வேடம் டாக்டர் என்று சொல்கிறீர்கள். ஒரு டாக்டர்... பெண் பார்க்க வரும் போது ஆடி பாடுகிற மாதிரி அமைந்தால் சரியாக இருக்குமா” என்று தனது கேள்வியை இயக்குநர் பீம்சிங்கிடம் கேட்டிருக்கிறார்.

அமைதியாக கேட்ட இயக்குநர் பீம்சிங், ஈகோ எதுவும் பார்க்காமல் ராஜம் கேட்பதிலும் நியாம் இருக்கிறது என்று சிந்தித்தவர், உடனே “ராஜத்துக்கு ஒரு குளோஸ் வைங்கப்பா. அவர் திங் பண்ணும் போது அப்படியே சாங் கிரியேட் ஆகுற மாதிரி வச்சுக்கலாம்” என்று கூறி படமாக்கி இருக்கிறார். 

நிறையப் படங்களில் சிவாஜியுடன் ராஜம் நடித்திருக்கிறார். ‘புதையல்’, ‘காத்தவராயன்’ படங்களில் நகைச்சுவை வேடம் என்றால், விடிவெள்ளி போன்ற படங்களில் வேறு மாதிரி.

எம்.ஜி.ஆருடன் ‘என் தங்கை’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்திற்கு பிறகு ‘நாடோடி மன்னன்’, ‘பாக்தாத் திருடன்’, ‘திருடாதே’, ‘ராணி சம்யுக்தா’ ஆகிய படங்களில் நடித்திருப்பார். அப்போது ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

காலையில் ஒரு படத்தில் நடித்துவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். நடித்த ‘திருடாதே’ படத்தின் பாடல் காட்சியில் நடிக்க சென்ற போது, முகத்தில் களைப்பு காட்டாமல் சிரித்த முகத்துடன் “ஓ மிஸ்டர் பாலு” என்ற பாடலை பாடி கொண்டே மாடிப் படிகளில் இருந்து இறங்கி ஒடி வந்து சோபாவில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை பார்த்து நடிக்க வேண்டும்.

அப்போது ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று இயக்குநர் நீலகண்டன் கேட்க, பதிமூன்று டேக் வரை பொறுமையாக நடித்தவர், பதினான்காவது ஒன்ஸ்மோர் கேட்ட போது, ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி தன்னுடைய காரில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் வந்து இறங்கிய போது எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு. “உனக்கு என்ன துணிச்சல் இருக்கும். செட்ல நான் இருக்கேன். என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல், நீ பட்டுக்கும் புறப்பட்டு போயிட்ட. எனக்கு என்ன நீ மரியாதை கொடுத்த...” என்று எம்.ஜி.ஆர். ராஜத்தை திட்டி இருக்கிறார்.

“அண்ணே நான் உங்களுக்காக தான் பதிமூன்று டேக் வரை ஒன்றும் சொல்லாமல் நடித்தேன். நான் என்ன தப்பு பண்ணுகிறேன். என்ன வேணும் என்று காரணம் சொன்னால் திருத்திக் கொண்டு நடிப்பேன். இப்படி எதுவுமே சொல்லாமல் ஒன்ஸ் மோர் ஒன்ஸ்மோர்ன்னு சொன்னால் நான் எப்படி புரிஞ்சுக்கிட்டு நடிக்க முடியும். இனிமேல் அவர் டைரக்ட் பண்ணினால் நான் நடிக்க மாட்டேன்” என்று எம்.ஜி.ஆரிடம் பதில் கூறி இருக்கிறார், எம்.என்.ராஜம்.

“அது மாதிரி எல்லாம் பேசாம போனை வை. நாளைக்கு படப்பிடிப்புக்கு வா” என்று கூறி போனை வைத்த எம்.ஜி.ஆர்., மறுநாள் ராஜம் படப்பிடிப்புக்கு சென்ற போது அந்த பாடல் காட்சியை எம்.ஜி.ஆரே இயக்கி நடித்திருக்கிறார்.

கால ஓட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ஒருநாள் ஒரு திருமனத்துக்கு சென்ற எம்.என்.ராஜத்தை பார்த்து நலம் விசாரித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.

“ஒன்னும் இல்லாமல் சும்மாதான் இருக்கேன் அண்ணா” என்று ராஜம் சொன்னதும், “நீ சும்மா இருக்கலாம். ஆனா நீ பேசுற தமிழ் சும்மா இருக்கக்கூடாது” என்று கூறியவர், செய்தித்துறையில் சொல்லி அவருக்கு  தமிழக அரசின் செய்திப் படங்களில் வாய்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவர் வாய்ஸ் கொடுத்ததில் இந்திராகாந்தி இறந்த போது வாய்ஸ் கொடுத்த செய்தி படத்திற்கு பெரிய பெயர் கிடைத்ததாம்.

டி.ஆர்.சுந்தரம் தயாரித்த படங்களில் மேனேஜராக வேலை செய்த எம்.ஏ.வேணு, படத் தயாரிப்பில் இறங்கி ‘டவுன்பஸ்’ என்கிற படத்தை தயாரித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு சிறிய வேடத்தில் நடித்த ராஜத்தை, இரண்டு ஆண்டுகள் கழித்து எம்.ஏ.வேணு தயாரித்த ‘முதலாளி’ படத்தில் நாயகியாக நடிக்க அழைத்த போது, அவரால் மொத்தமாக இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால், அந்தப் படத்தில் கதாநாயகியாக தேவிகாவை அறிமுகம் செய்தார்கள். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது நீங்கள் நடிக்க வேண்டும் என்று செண்டிமெண்டாக கேட்க, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து வில்லியாக நடித்திருக்கிறார்.

கே.பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது. அதன் பிறகு அம்மா, அக்கா என்று குணச்சித்திர வேடங்களிலும், பாட்டி வேடங்களிலும் நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். 

சினிமா, நாடகம் இரண்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவரது இருபதாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தார்களாம். ராஜம் நாடகங்களில் நடிக்கும் போது அந்த நாடகங்களில் பாடகராக இருந்திருக்கிறார், ஏ.எல்.ராகவன். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்த ராகவன், கிருஷ்ண விஜயம் படத்தில் தொடங்கி வளையாபதி, அம்பிகாபதி என பத்து ஆண்டுகளில் ஐம்பது படங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருந்தார்.

தஞ்சாவூர் அருகே உள்ள அய்யம்பேட்டை லட்சுமண பாகவதர் குடும்பத்து இளைஞரான ஏ.எல்.ராகவனையும், அவரது பாடல்களையும் ராஜத்தின் அம்மாவுக்கு பிடித்திருந்தது. அவரது பெற்றோரிடம் பேசி 1960 ஆம் ஆண்டு மே 2-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு ஏ.எல்.ராகவன் பாடிய ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் அவருக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகும் தொடர்ந்து ஏராளமான படங்களில் பாடிக் கொண்டிருந்தார், ஏ.எல்.ராகவன்.

டி.எம்.சௌந்தர்ராஜன் இசையில் நிறைய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஏ.எல்.ராகவனுக்கு ஒரு கட்டத்தில் நடிக்க ஆசை பிறக்க, டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து ‘கல்லும் கனியாகும்’ என்கிற படத்தை தயாரித்து, இருவரும் நடித்தனர். கே.சங்கர் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக எம்.என்.ராஜத்தை நடிக்க கேட்ட போது, நான் சீனியர் நடிகை. புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்ரீயை கதாநாயகியாக நடிக்க வைத்தார்களாம்.

நடிகை ஏ.எல்.ராகவனை திருமணம் செய்துகொண்ட எம்.என்.ராஜத்துக்கு பிரம்மலக்ஷ்மன் என்கிற மகனும், நளினா மீனாட்சி என்கிற மகளும் உள்ளனர்.

நகைச்சுவை வேடத்தில் நடிக்க மறுத்த போது உனக்கு கண்டிப்பாக கதாநாயகி வாய்ப்பு தருகிறேன் என்று கூறிய மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரம், சொன்னது போலவே ‘பாசவலை’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்பை தந்தார். அந்தப் படத்தில் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.

ஏழு வயதில் நாடகத்தில் நடிக்க எம்.என்.ராஜத்துக்கு கடிதம் கொடுத்து வாய்ப்பு ஏற்பற்றுத்திக் கொடுத்த எம்.கே.ராதாவுடன் பாசவலை படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜம், அவருடைய பேரன் சரவணனுக்கு தனது மகள் நளினா மீனாட்சியை திருமணம் செய்து கொடுத்தார்.  

எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். சிவாஜி, என்.டி.ஆர்., பிரேம்நசீர், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.பாலாஜி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.சஹஸ்ரநாமம் என அன்றைய எல்லா கதாநாயகர் நடிகர்களுடன் நடித்த எம்.என்.ராஜம், தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 1995 க்கு பிறகு சின்னத்திரையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

இவரது கணவர்  பாடகர் ஏ.எல்.ராகவன், சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகும் கூட இசைக் கச்சேரிகள் நடத்திக்கொண்டிருந்தார். இசைக் கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இசை நிகழ்ச்சிகள் பல செய்தவர்.

1933 ஆம் ஆண்டு பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தனது 86வது வயதில் காலமானார்.

அவருடனான அறுபதாண்டுக் கால வாழ்க்கையை பயணத்தை மறக்க முடியாத ஏராளமான நினைவுகளோடு அதை ஞாபகப்படுத்திப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.என்.ராஜம், ஏழு வயதில் நடிக்க ஆரம்பித்து இப்போது தனது எழுபத்தி ஐந்தாவது நடிப்பு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவரை வாழ்த்தி வணங்குவோம்....

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக