சனி, 26 மார்ச், 2022

முதல் பேசும் படத்தை இயக்கிய எச்.எம்.ரெட்டி.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முதல் பேசும் படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. 1892 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி பெங்களூரில் பிறந்த எச்.எம்.ரெட்டியின் இயற்பெயர் ஹனுமப்பா முனியப்ப ரெட்டி. பெங்களூரில் படித்து வளர்ந்த எச்.எம்.ரெட்டி சிலகாலம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி உள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடியாளாக இருக்கின்ற வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை. அதனால், வேலையை விட்டு விலகி மனதுக்கு பிடித்த நாடகம், சினிமா போன்ற பொழுதுபோக்கு துறையில் சேர கவனம் செலுத்தினார். அப்போது தனக்கு வேண்டிய நண்பர்கள் சிலர் பம்பாய்க்கு சென்று சினிமாவில் சேர ஆர்வம் கொண்டிருந்தனர். அதனால், அவரும் சினிமாவில் பணிபுரிய பம்பாய்க்கு சென்றார்.

பம்பாயில் ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் உதவியாளாராக சேர்ந்த எச்.எம்.ரெட்டி, அங்கு சினிமாவின் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள போராடினார்.

மௌனப்பட உலகில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் விளங்கிய ஆர்தேஷிர் எம்.இரானியிடம் உதவியாளராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் சேர்ந்து சில படங்களில் பணியாற்றிய எச்.எம்.ரெட்டி, 1930 ஆம் ஆண்டில் ‘பிரின்ஸ் விஜயகுமார்’ என்கிற மௌனப் படத்தை இயக்கினார். ‘‘பீ தாரி தல்வார்’, ‘சினிமா கேர்ள்’, ‘ஷேர்-இ-அரப்’ போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பிரிதிவிராஜ் கபூர் நாயகனாக நடித்தார்.

மீண்டும் பிருத்விராஜ் கபூர் நடித்த ‘பார் கே போபார்’ என்கிற மௌனப் படத்தை இயக்கிய எச்.எம்.ரெட்டி, குருநாதர் ஆர்தேஷிர் எம்.இரானி இயக்கிய முதல் இந்தி பேசும் படமான ‘ஆலம் ஆரா’ படத்தின் வேலைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ‘ஆலம் ஆரா’ படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதும், ‘ஆலம் ஆரா’ உருவான அரங்கிலேயே தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தை தயாரிக்க ஆர்தேஷிர் எம்.இரானி முடிவு செய்த போது அந்தப் படத்துக்கு எச்.எம்.ரெட்டியை இயக்குனராக நியமித்தார். 

டி.பி.ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்க, அவருடன் பி.ஜி.வெங்கடேசன், எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா தேவி, எம்.எஸ். சந்தானலட்சுமி உட்பட பலர் நடிக்க, ஆர்தேஷிர் எம்.இரானி ஒளிப்பதிவுடன் ‘காளிதாஸ்’ படத்தை இயக்கி 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியிட்டார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதினர். “மன்மத பாணமடா... மாரினிலே பாயுதடா” என்கிற பாடல் சிறந்த காதல் பாடலாகவும், "ராட்டினமாம் காந்தி கை பாணமாம்" என்ற பாடல் சிறந்த தேசபக்தி பாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.

அதன் பிறகு எச்.எம்.ரெட்டி இயக்கிய படம் ‘பக்த பிரலாதா’. தெலுங்கு நாடகக் குழுவான சுரபி நாடக குழுவை பாம்பாய்க்கு அழைத்துச் சென்று முதல் தெலுங்கு பேசும் படத்தை இயக்கினார். இதில் சிந்தூரி கிருஷ்ணராவ் பிரகலாதாவாக நடிக்க, அவருடன் முனிபுள்ளே சுப்பையா, ‘சுரபி’ கமலாபாய் முக்கிய வேடத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகராக எல்.வி.பிரசாத் நடித்தார். இந்தப் படத்தை ஆர்தேஷிர் எம்.இரானி தனது இம்பீரியல் பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்து, ஒளிப்பதிவு செய்தார். எச்.ஆர்.பத்மநாப சேஷாத்ரி இசையமைத்த இந்தப் படம் 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளியானது.

அதன் பிறகு எச்.எம்.ரெட்டி இயக்கிய ‘ஜாஸ் ஆஃப் லைஃப்’, ‘சீதா ஸ்வயம்வர்’ ஆகிய இரு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை தரவில்லை. இதனால் சொந்தமாக படம் தயாரிக்கும் எண்ணம் உருவானது.

‘சென்னாபுரி ஆந்திர மகா சபா’ சார்பில் நடத்தப்பட்ட பல தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த பி.என்.ரெட்டியின் நட்பு கிடைக்க, அவருடன் சேர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்து ரோகினி பிக்சர்ஸ் என்கிற படநிறுவனத்தை, எச்.எம்.ரெட்டி தொடங்கினார்.

நாடகங்களில் நடித்து வந்த சித்தூர் வி.நாகையா என்பவரை நாயகனாக்கி அவருடன் பி.கண்ணாம்பா, காஞ்சன மாலா உட்பட பலர் நடிக்க ‘கிரஹலட்சுமி’ என்கிற தெலுங்கு படத்தை இயக்கி 1938-ஆம் ஆண்டு வெளியிட்டார். "ரங்கூன் ரவுடி" நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்து.

அடுத்து டி.எஸ்.சந்தானம், பி.யூ.செல்லப்பா. ஏ.கே.ராஜலட்சுமி நடிப்பில், பாபநாசம் சிவன் இசையில் ‘மாதுருபூமி’ என்கிற தமிழ்ப் படத்தை இயக்கினார். சந்திரகுப்தர் குறித்த பெங்காலி நாடகம் ஒன்றை மையமாக கொண்ட கதை இது.

அதன் பிறகு எல்.வி.பிரசாத், பானுமதி ராமகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்த தெலுங்கு நகைச்சுவை படமான ‘சடுவுக்குன்னா பர்யா’ படத்தை இயக்கினார். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷனால் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் படம் 1940 ஆம் ஆண்டு வெளியானது. மறுபடியும் எல்.வி.பிரசாத் நடிப்பில் ‘பொண்டாம் பெல்லி’ என்கிற தெலுங்கு படத்தை எச்.எம்.ரெட்டி இயக்கினார். இதில் நாயகியாக ஜி.வரலட்சுமி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் எல்.வி.பிரசாத் நடித்திருந்தார்.

மீண்டும் ஜி.வரலட்சுமி, எல்.வி.பிரசாத் கூட்டணியில் ‘பாரிஸ்டர் பார்வதீசம்’ என்கிற தெலுங்கு நகைச்சுவை படத்தை இயக்கினார். முக்கிய வேடத்தில் லங்கா சத்யம் நடித்த இந்தப் படம் 1940 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கிரஹலட்சுமி

'கிரஹலட்சுமி’ படத்திற்கு பிறகு மீண்டும் தங்களுடைய ரோகினி பிக்சர்ஸ் படநிறுவனம் தயாரிப்பில் ‘தெனாலி ராமகிருஷ்ணா’ என்கிற தெலுங்கு படத்தை 1941 ஆம் ஆண்டு இயக்கினார். இந்தப் படத்தில் எஸ்.பி.லட்சுமண சுவாமி, எல்.வி.பிரசாத், பி.கோடேஸ்வர ராவ், திலகம், புவ்வுலா அனசூயா உட்பட பலர் நடித்திருன்தனர்.

மறுபடியும் தனது ஆஸ்தான நகைச்சுவை நாயகன் எல்.வி.பிரசாத் நடிப்பில் 'கஜ தொங்கா' என்கிற படத்தை இயக்கிய எச்.எம்.ரெட்டி, ‘சதி சீதா’ என்கிற இந்திப் படத்தை இயக்கினார். 1951 ஆம் ஆண்டில் எச்.எம்.ரெட்டி இயக்கிய ‘நிர்தோஷி’ தெலுங்கு படம் வெளியானது. இதில் அஞ்சலி தேவி, முக்காமல கிருஷ்ணமூர்த்தி, ஜி.வரலட்சுமி, லட்சுமிகாந்தம் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ரோகினி பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது மகன் ஒய்.ஆர்.சாமி இயக்கத்தில் உருவான ‘வஞ்சம்’ தமிழ்ப் படத்துக்கு கதை எழுதிய எச்.எம்.ரெட்டி, அதன் பிறகு மகன் ஒய்.ஆர்.சாமி இயக்கத்தில் ‘பிரதிக்யா’ என்கிற தெலுங்கு படத்தை தயாரித்தார். நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்திருந்த அந்தப் படத்திற்கு பிறகு, மீண்டும் தனது மகன் ஒய்.ஆர்.சாமி இயக்கத்தில் ‘வட்டந்தே டப்பு’ என்கிற தெலுங்கு படத்தையும் தயாரித்தார். என்.டி.ராமாராவ், சௌகார் ஜானகி, ஜமுனா நடித்த அந்தப் படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது.

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி எச்.எம்.ரெட்டி மறைந்தார். அவரது மகன் ஒய்.ஆர்.சாமி 35க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களை இயக்கி உள்ளார்.  

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக