சனி, 26 ஜூலை, 2014

நடிகர் கவுண்டமணி

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம் எனும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி  பிறந்தவர் க்வுண்டமணி. இவரது இயர் பெயர் சுப்பிரமணி. தந்தை பெயர் கருப்பையா. தாயார் பெயர் அன்னாம்மாள் என்கிற் காளியம்மாள். இவக்கு மயிலாத்தாள் என்கிற சகோதரி உள்ளார்.

வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். அவரை அவரது தந்தை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடம் போகாமல் நாடகம் பார்க்கவே ஆசைப் படுவாராம். அதனால் அவரது விருப்பப் படியே விட்டுவிட்டாராம் தந்தை.

இப்போது சினிமாவில் இத்தனை வாய் பேசும் கவுண்டமணி, சிறு வயதில் அதிர்ந்து பேச மாட்டாராம். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவாராம். ஒரு முறை அக்ரஹாரத்தில் நடந்த ஒரு நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடித்தாராம் கவுண்டமணி. நாடகம் முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்று பாராடினாராம். அன்றிலிருந்துதான் ‘கவுண்டமணி’யானார் இவர்.

15 வயதில் ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் அவரது சகோதரி அவரை சென்னைக்கு அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டாராம். பிறகு எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்து, பாரதி ராஜா இயக்கிய 16 வயதினில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து பெரும் வெற்றி கண்டார். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, முறை மாமன், சூரியன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் என பல படங்களில் அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’போன்ற சில படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்

கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.  இவர் மட்டும் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்மை மற்றும் 49ஓ படங்களில் நடித்து வருகிறார். கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.

திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற இவர், நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

கவுண்டமணிக்கு புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு கூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர். 

ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் பார்த்து விடுவார். படத்தைப் பற்றி நண்பர்களுடன் பேசுவார். ஆனால், தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார். அதே போல பேட்டி என்றால் அட போங்கப்பா என்று நாம என்ன செய்துவிட்டோம் என்று அன்பாக மறுத்து விடுவார்.

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக