சனி, 26 ஜூலை, 2014

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. 1935 ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை இராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்துராமனுக்கு செல்வமணி, சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு.

எஸ்.பி.முத்துராமனின் தந்தை இராம.சுப்பையா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். இதனால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதியுடன் கைதாகி சிறை சென்றவர். அவர் செட்டிநாட்டில் திராவிட இயக்கம் வளரக் காரணமாக இருந்தவர் என்று கருணாநிதியே கூறி உள்ளார்.

இராம.சுப்பையா 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். இராம.சுப்பையா மனைவி விசாலாட்சியும் அந்த காலத்திலேயே மேடைகளில் ஏறி சுயமரியாதை இயக்க கருத்துக்களை பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.முத்துராமன் அவர்களுடன் பாலன்
தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும் போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார். அவரது கலை ஆர்வத்திற்கு பாதிரியார் மச்சோடோ ஊக்கமளித்தார்.

காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

1952-ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜிகணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்துராமன், "இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்'' என்று முடிவு செய்தார். அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் சென்னை புறப்பட்டார், முத்துராமன். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்துவிட்டார். பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.
இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக்கொடுத்தனர். மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார்.

தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் - சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது.
 
ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, நெற்றிக்கண், கழுகு, ராணுவ வீரன், போக்கிரிராஜா, பாயும்புலி, புதுக்கவிதை, அடுத்த வாரிசு, நல்லவனுக்கு நல்லாவன், ஸ்ரீ ராகவேந்தர், மிஸ்டர் பாரத், மனிதன், வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் என ரஜினி நடித்த 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

அதே போல கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானவர் கமல் நடித்த மோகம் முப்பது வருஷம் படத்தை இயக்கினார். அதன் பிறகு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நடித்த சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை

விஜயகாந்த் நடித்த தர்ம தேவதை, நல்லவன், சத்யராஜ் நடித்த உலகம் பிறந்தது எனக்காக, விக்ரம் நடித்த காவல் கீதம் என 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

1977 ஆம் ஆண்டு ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, 1978 ஆம் ஆண்டு  புவனா ஒரு கேள்விக்குறி படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருதுகள் பெற்றார். 1980 ஆம் ஆண்டு  ஆறிலிருந்து அறுபது வரை படத்துக்கு தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார்.

தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜனிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. .



இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் மனைவி பெயர் கமலா. இவர்களுக்கு சுப்பைய்யா என்கிற மகனும, மீனா நாச்சியப்பன், விசாலாட்சி முத்தையா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக