வியாழன், 13 அக்டோபர், 2022

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சினிமா பார்ப்பதே பாவம் என்ற நம்பிக்கை இருந்தது. சினிமாவைப் பார்ப்பதே பாவம் என்ற நிலை இருந்தபோது சினிமாவில் நடிப்பது பற்றி கேட்கவா வேண்டும். சினிமாவில் நடிக்க வருவதற்கு ஆண்கள் தயங்கினார்கள். அதிலும் பெண்கள் அஞ்சி நடுங்கினர். விலைமாதுக்கள் கூட சினிமாவில் நடிக்க பந்தார்கள். 'அது தருகிறேன்.. இது தருகிறேன்..' என்று கெஞ்சி கூத்தாடித்தான் ஆண்களை நடிக்க வைத்தனர். கெஞ்சிக்கூத்தாடியும் பெண்கள் நடிக்க வராததால், ஆண்களையே பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார்கள்.

பின்னாளில், சினிமா ஒரு கலை என்பதையும், அது ஒரு தொழில் என்பதையும் உணர்ந்து ஹாலிவுட்டில் பெண்கள் நடிக்க வந்தார்கள். இந்தியாவைப் பொறுத்தவையிலும் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் முதலில் நடிக்க சம்மதித்தனர்.

இந்தியாவின் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.  தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் நடிக்க வந்த முதல் நடிகை டி.பி.ராஜலட்சுமி. இவர், தமிழ் சினிமாவின் முதல் நடிகை என்பதோடு அல்லாமல் முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர், முதல் பெண் பாடலாசிரியர், நாவலாசிரியர் என்ற பெருமைக்கும் உடையவர்.

ராஜலட்சுமியின் பூர்வீகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைந்த சாலியமங்கலம். அக்கிராமத்தின் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள். இவரது குடும்பத்தினர் திருவையாறில் வாழ்ந்து வந்தனர். திருவையாறில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தவர், டி.பி.ராஜலட்சுமி. திருவையாறு பஞ்சாபகேசன் என்பதன் சுருக்கமே டி.பி. என்று அவரது பெயருக்கு முன்னாள் போடும் இன்ஷியல். ஐந்து வயதிலேயே காதால் கேட்டதை அப்படியே பாடுவதும் கண்ணால் பார்ப்பதை அப்படியே ஆடிக் காட்டுவதுமாக இருந்தார் ராஜலட்சுமி.

அவருக்கு அந்த கால வழக்கப்படி ஏழு வயதில் திருமணம் நடந்தது. 8 வயதில் வரதட்சனை விவகாரத்தினால் வாழாவெட்டி ஆனார். வறுமையினாலும் மகளின் நிலைமையினாலும் மனங்கலங்கி படுத்த படுக்கையாகக் கிடந்து பஞ்சாபகேச அய்யர் மறைந்தார். இதையடுத்து, பிழைப்புதேடி தாயாருடன் டி.பி.ராஜலட்சுமி திருச்சிக்கு குடிபெயர்ந்தார்.

ராஜலட்சுமியின் அம்மா மீனாட்சி நன்கு பாடக்கூடியவர், அவரிடம் படித்து நன்கு பாடக் கற்றுக்கொண்டார் ராஜலட்சுமி. நாடகங்களைப் பார்த்து நடிப்பின் மீது மிகுந்த ஆவல் கொண்ட ராஜலட்சுமிக்கு, தானும் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

நாடகத்தில் நடிப்பது என்றாலே கூத்தாடி பிழைப்பு, கேவலம் என்று அவரது உறவினர்கள் கருதிய காலம் அது. இதனால் தன் மகளை நடிக்க அனுப்புவதற்கு தயங்கினார், மீனாட்சி அம்மாள். ஆனால், வறுமையின் கொடுமையை சமாளிக்க ராஜலட்சுமி நடிக்க செல்வதில் பிடிவாதமாக இருந்ததால், அவரால் மகளை தடுக்க முடியவில்லை. பிறகு சம்மதித்தார்.

மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர வாய்ப்பு கேட்டு தேடி சென்ற போது, ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பு. பெண்களுக்கு இல்லை என்று மறுத்தனர். ஆனால், அங்கு வந்திருந்த நாடக மேதை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவரை சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்திருக்கிறார்.

மாத சம்பளம் 50 ரூபாய் பேசப்பட்டு வாய்ப்பை வழங்கியது சாமண்ணா நாடகக்குழு. தனது 11வது வயதில் ராஜலட்சுமி நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் பவளக்கொடி. இந்த நாடகத்தில் புலேந்திரன்  வேடத்தில் நடித்தார் ராஜலட்சுமி.

அதன் பிறகு படிப்படியான முன்னேற்றம். கே.எஸ்.செல்லப்பாவின் நாடகக் கம்பனியில் 75 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே.பி.மொய்தீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்த நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள்.

பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் 'ராமா பட்டாபிஷேகம்', எம்.கே.தியாகராஜ பாகவதருடன் 'பவளக்கொடி', 'கோவலன்' ஆகிய சில நாடகங்களில் நடித்தார்.

நாடகங்களில் வெறுமனே நடித்து ஆடிப்பாடுவது என்றில்லாமல், தேசபக்திப் பாடல்களைப் பாடி சுதந்திர தாகத்தை தூண்டிவந்தார் ராஜலட்சுமி. 'ராட்டினமாம் காந்தி கைபாணமாம்', 'இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை' ஆகிய தேசபக்தி பாடல்கள் மிகப்பிரபலம். இவரது பாடல்களுக்காகவே நாடகங்கள் பார்க்க ரசிகர்கள் கூடினர். தேசபக்தி பாடல்களை பாடியது குற்றமென்று ஆங்கிலேய அரசினரால் பலமுறை கைது செய்யப்பட்டார், ராஜலட்சுமி.

மேடைகளில் பாடி நடித்து புகழ் பெற்ற ராஜலட்சுமியின் திறமையை கண்ட சிவகங்கை ஏ.நாராயணன், தனது தயாரிப்பில் ஆர்.பிரகாசம் இயக்கிய ‘கோவலன்’ மௌனப் படத்தில் மாதவியாக நடிக்க வைத்து பேசப்பட வைத்தார். 1929ஆம் ஆண்டு கோவலன் மௌனப் படம் மூலம்  அறிமுகமான  ராஜலட்சுமி, அடுத்து ராஜா சாண்டோ இயக்கிய உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, ஆகிய இரண்டு மௌனப் படங்களிலும் நடித்தார். அப்போது அவருக்கு அந்தப் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சுப்பிரமணியம் அவளின் நட்புக் கிடைத்தது.

ஏற்கனவே ராஜலட்சுமியின் குரலில் பாடல் ஒலி தட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தமிழின் முதல் ஒலிப் பாடல் படத்திளும் நடிக்க ராஜலட்சுமிக்கு  அழைப்பு வந்தது. அதற்கு சிபாரிசு செய்தவர், கே.சுப்பிமணியம்.

மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரிப்பில் 1931ல் "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற நான்கு ரீல் கொண்ட ஒலிப்படத்தில் நடித்தார், ராஜலட்சுகி. தமிழ் சினிமாவின் முதல் ஒலியமைப்புக் கொண்ட குறும்படம் அது. அதன் பிறகு பேசும் படத்திலும் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. 

உதவி இயக்குநராக இருந்த அதே ஆர்.சுப்பிரமணியன் அழைத்து உங்கள் திறமைக்கும் குரலுக்கும் பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பம்பாய்க்கு போகலாம் வாருங்கள் என்றார்.

தெரிந்த பாடலை பாடச்சொன்னார்கள். தெரிந்த நடனத்தை ஆடச்சொன்னார்கள். நடிக்க வைத்து பார்த்தார்கள். அந்த சோதனையில் எல்லாம் டி.பி.ராஜலட்சுமி வெற்றிபெறவே காளிதாஸ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

ஆமாம்... தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார், ராஜலட்சுமி. இந்தியில் முதல் பேசும் படத்தை தயாரித்த அர்தேஷிர் இரானி தயாரிப்பில், அவரது உதவியாளர் எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் காளிதாஸ் படம் உருவானது. அந்தப் படத்தில் கதாநாயகன் தெலுங்கு என்பதால் அவர் தெலுங்கில் பேசி நடித்திருப்பார். கதாநாயகி ராஜலட்சுமி தமிழர் என்பதால் அவர் தமிழில் பேசி நடித்திருப்பார். துணை நடிகர்கள் அனைவரும் ஹிந்திக்காரர்கள் என்பதால் அவர்கள் ஹிந்தியில் பேசி நடித்தார்கள்.

இப்படி பல மொழிகள் பேசி தயாரான காளிதாஸ் படம் 31.10.1931ல் திரைக்கு வந்தது. சென்னையில் 'கினிமா செண்ட்ரல்' தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

காளிதாஸ் படத்திற்கு, 'மிஸ் டி.பி.ராஜலஷ்மி நடிக்கும் காளிதாஸ். முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்'' என்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

டி.பி.ராஜலட்சுமியின் பாடல்களால் காளிதாஸ் படம் பெரும் வெற்றி அடைந்தது. காளிதாஸ் படத்தின் வெற்றி ராஜலட்சுமிக்கு இன்னும் அதிக புகழையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

1932ல் காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து 'ராமாயணம்' படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் மூலம் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமையும் ராஜலட்சுமியையே சேரும். இந்தக் காலகட்டத்தில் இவருக்கு 'சினிமா ராணி' என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.

1933 இல் வள்ளி திருமணம் என்கிற பெயரில் இரண்டு படங்கள் வெளியானது. அதில் டி.பி.ராஜலட்சுமி நடித்து வெளிவந்த ‘வள்ளி திருமணம்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏன் தமிழின் முதல் வெற்றிப்படம் என்றே சொல்லாம்.

'வள்ளித் திருமணம்' படத்தில் நடித்த போது, நாரதர் வேடத்தில் நடித்த டி.வி.சுந்தரத்துடன் காதல் உண்டாகி, அவரை மறுமணம் செய்து கொண்டார், ராஜலட்சுமி. விடுதலை போராட்டத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ராஜலட்சுமி. அவரைப் போலவே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ்காரர் நடிகர் டி.வி.சுந்தரம்.

திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்புக்காக இருவரும் கல்கத்தாவுக்கு சென்றவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள். அங்கு திரௌபதி, அரிச்சந்திரா, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள். சுந்தரம், ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1936ல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கமலா என்ற பெயரிட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி, தனது பெயரில் 'ஸ்ரீராஜம் டாக்கீஸ்' என்ற கம்பனியைத் தொடங்கி, தன் மகள் பெயரில் 'மிஸ் கமலா' என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்து அந்தப் படத்திற்கு தானே கதை, வசனம் எழுதி கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கினார்.

1936ஆம் ஆண்டு வெளிவந்த  'மிஸ் கமலா' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இதன் மூலம் தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குநர் என்கிற பெருமையை பெற்றார்.

மிஸ்.கமலா படத்தைத் தொடர்ந்து 'மதுரை வீரன்' என்கிற படத்தை இயக்கி 1938ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் இயக்கிய திரைப்படங்கள் இரண்டுக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பெனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார்.

நாடகம், சினிமாவோடு நின்றுவிடாமல் இலக்கியத்துறையில் கால்பதித்து நாவல்கள் எழுதினார். கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், விமலா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் என்று ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி வந்தார்.

இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று நாடகங்கள் நடத்தி வந்தார் ராஜலட்சுமி. 1935ல் பர்மாவில் நாடகம் நடத்தினார். பர்மாவின் ரங்கூன் நகரில் இவரது நாடகம் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தது. 1936ல் இலங்கையில் நாடகம் நடத்தினார். இவரது நாடகத்தை கண்டுகளித்த இலங்கை ரசிகர்கள் இவருக்கு 'இலங்கை திலகம்' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

காளிதாஸ், ராமாயணம், வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, திரௌபதி வஸ்திராப ஹரணம், கோவலன், பக்தகுசேலா, குலேபகாவலி, பூர்ணசந்திரா, சம்பூர்ண அரிச்சந்திரா, பாமா பரிணயம், மிஸ்கமலா, வீர அபிமன்யு, சீமந்தனி, கௌசல்யா பரிணயம், நந்தகுமார், அநாதைப் பெண் சுகுண சரஸா, தமிழ் தியாகி, மதுரைவீரன், குமார குலோத்துங்கன், பக்த குமணன் (அல்லது) ராஜயோகி, மாத்ருதர்மம், உத்தமி, பரஞ்சோதி, ஜீவஜோதி, இதயகீதம் என்று ராஜலட்சுமி 27 படங்களில் நடித்துள்ளார்.

விதவை மறுமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து புரட்சியை ஏற்படுத்திய ராஜலட்சுமி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும், சிசுக் கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். பெண் சிசுக்கொலைக்கு குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சிசு கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்தெடுத்து, அக்குழந்தைக்கு 'மல்லிகா' என பெயர் சூட்டி வளர்த்து, அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து புரட்சி செய்தார் ராஜலட்சுமி.

சினிமாவில் பணம், புகழ் சேர்ந்தாலும் ராஜலட்சுமி தன் சுயமரியாயை விட்டுக்கொடுக்காதவர். இதனால், நந்தகுமார் படத்தில் நடித்தபோது, சர்ச்சை உண்டானது. அப்படத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதா வேடத்தில் நடித்தார். புராண காலத்தின்படி யசோதை கச்சை கட்டித்தான் நடிக்க வேண்டும். ஆனால், ராஜலட்சுமியோ கச்சை அணிய மாட்டேன். ரவிக்கைதான் அணிவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கும் நடிகை கச்சை அணிந்துதான் நடிக்கிறார் என்று ஏ.வி.எம்.செட்டியார் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்தார். ரவிக்கைதான் என்று ராஜலட்சுமி பிடிவாதமாக இருந்தார்.

வற்புறுத்தினால் படத்தில் நடிக்காமல் விலகிவிடுவேன் என்று கூறிவிட்டதால், செட்டியார் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை. கடைசியில் 'நந்தகுமார்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் ரவிக்கை அணிந்துதான் வந்தார் யசோதா.

நாற்பதுகளில் சினிமாவின் முகம் மாறியது. தமிழ் சினிமாவின் வடிவம் மாறியதோடு மட்டுமல்லாமல் புதியவர்கள் வருகையும் அதிகரித்தது. சினிமாவுக்கு வர தயங்கியிருந்தது எல்லாம் ஒரு காலம் என்றாகி, சினிமாவுக்கு ஆர்வத்துடனும், தைரியத்துடனும் நடிக்க வந்து கொண்டிருந்தனர். எதிலும் விட்டுக்கொடுத்து போகாத ராஜலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வயது மூப்பின் காரணமாக படங்களே இல்லாத நிலை ஏற்பட்டது.

19 ஆண்டுகாலம் திரையுலகில் வலம் வந்த ராஜலட்சுமி கடைசிக்காலத்தில் 'ஜீவஜோதி', 'இதயகீதம்' படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தார். 1950-ல் வெளிவந்த 'இதயகீதம்' என்ற படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசிப் படம்.

சுதந்திரப்போராட்டத்தை மையமாக வைத்து 'இந்தியத்தாய்' என்ற பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கி, தயாரித்தார். சென்சார் கெடுபிடிகளுக்கு சிக்கி மீள முடியாததால், பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனாலும், ''இந்திய விடுதலை போராட்டத்திற்கு நான் அளித்த சிறு காணிக்கை இது'' என்று கூறிவிட்டார்.

அவர் அப்படி கூறினாலும், அதற்கு பின்னால் இருந்த அவரின் வலியை உணரமுடிந்தது. அந்தப் படத்தினால் ஏற்பட்ட கடன் சுமையினால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார். இதனால் ராஜலட்சுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி, அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார்.

கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு 10 சொந்த வீடுகள் இருந்தன. கடைசிக்காலத்தில் எல்லாம் விற்றுத்தீர்ந்த பின்னர், ஒரே ஒரு வீடு மட்டும் மிச்சம் இருந்தது. அந்த வீட்டையும் தன் மகள் கமலாவிற்கு கொடுத்துவிட்டு, வாடகை வீட்டில் வசித்தார். சென்னை கீழப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் அவரின் கடைசிக்காலங்கள் கழிந்தன.

காலத்தின் கோலத்தை நினைத்து நினைத்து மனம் உடைந்துபோன ராஜலட்சுமி நினைவிழந்தும் போனார். இனி இழப்பதற்கு உயிரைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலையில் நாட்கள் நகர்ந்தபோது, 1964ல் அவர் அதையும் இழந்தார்.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்தவர் டி.பி.ராஜலட்சுமி. ரசிகர்களால் 'சினிமா ராணி' என்று கொண்டாடப்பட்ட அவர், இன்று தனது படங்களின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக