ஞாயிறு, 12 ஜூலை, 2015

பத்மஸ்ரீ மனோரமா

பத்மஸ்ரீ மனோரமா அவர்களின் இயற்பெயர் கோபிசாந்தா. 1943 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடியில் பிறந்தார். தந்தையார் பெயர் காசி கிளார்க்குடையார். தாயார் பெயர் ராமாமிர்தம்மாள்.

மனோரமாவின் அப்பா காசி கிளார்க்குடையார் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். பல வருடம் ஆகியும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தனது தங்கையை கணவருக்கு இரண்டாவது மனைவியாக்கினார், ராமாமிர்தம் அம்மாள்.

தங்கை தாயாகும் முன்பே தானே தாயானார். ஆனால், புது மனைவியின் மீது கொண்ட மோகத்தால், தன்னை கணவன் இரண்டாம் நிலைக்கு தள்ளியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருவருக்கும் சண்டை நீடித்தது. இருந்தாலும் வயிற்றில் வளரும் குழந்தைக்காக எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டார்.

அம்மாவுடன் மனோரமா 
மனோரமா பிறந்தார். சொத்து பிரச்சினை வந்துவிடும் என்று தங்கையும் தனக்கு எதிராக இருப்பதை அறிந்து மனம் உடைந்த மனோரமாவின் அம்மா,  எத்தனை நாளைக்குத்தான் போராடுவது என்று வீட்டு உத்திரத்தில் கயிற்றை கட்டி தூக்கு போட்டார். 

அம்மா தொட்டில் கட்டுகிறாரோ என்று பார்த்துக் கொண்டிருந்த மனோரமா, அம்மா கால்களை உதைத்து உயிரை போக்கிக் கொள்ள போராடுவதைக் கண்டதும் வீரிட்டு கத்தி அழ ஆரம்பித்தார். தெருவில் சென்ற பெண்மணி ஒருவர், குழந்தையை கத்தவிட்டு இந்த ராமாமிர்தம் என்ன பண்றா என்று அருகே வந்து எட்டிப் பார்க்க, ராமாமிர்தம் தூக்கில் தொங்குவதைக் கண்டு கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்தார்கள். ராமாமிர்தத்தை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி, காப்பாற்றினார்கள். குழந்தையை காட்டி புத்திமதி சொன்னார்கள்.

ராமாமிர்தம் அம்மாளின் மனம் அமைதியாகவில்லை. ஊரைக் கூட்டி தன்னைக் காப்பாற்றிய மகள் மனோரமாவை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார். வாழ்க்கையை வெறுத்து இந்த திடீர் முடிவு எடுக்க காரணமான தனது கணவனையும், தங்கையையும் நினைத்து வேதனைப்பட்ட அவர், இனி இந்த ஊரில் இவர்களுக்கு முன்னாள் இருக்க கூடாது என்று முடிவு செய்தார். கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு அன்று இரவே மன்னார்குடியைவிட்டு வெளியேறினார்.

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் பலகார கடை வைத்து தனது பிழைப்பை தொடங்கினார் ராமாமிர்தம் அம்மாள். மனோரமாவையும் பள்ளிக்கு அனுப்பினார்.

மனோரமாவின் கணவர் ராமநாதன் 
எப்போதாவது அங்குள்ள டெண்ட் சினிமா கொட்டகையில் இரண்டாவது ஆட்டம் எப்போதாவது படத்துக்கு போவாராம், ராமாமிர்தம். அப்போது மனோரமாவும் கொட்ட விழித்திருந்து படம் பார்ப்பாராம். படத்தில் வரும் பாடல்களை பாடல்களை மறுநாள் பாடவும் செய்வாராம், மனோரமா.

மனோரமாவை அங்குள்ளவர்கள் பாப்பா என்று அழைப்பார்களாம். நேத்து என்ன படம் பார்த்தே. இந்தப் படத்தில் என்ன பாடல் என்று அவரை பாப்பா பாடு, பாடு என்று பாடச் சொல்லி கேட்பார்களாம். இப்படி அவர் மற்றவர்களுக்காகவும் பாடி பாடி அது பயிற்சியாக அமைந்து விட, பிறகு ஊரில் யார் வீட்டில் என்ன விசேஷ நிகழ்ச்சி நடந்தாலும், அங்கே அவரை அழைத்து சென்று பாட வைப்பார்களாம். பள்ளி விழாக்களிலும் பாடி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார், மனோரமா.

பலகார கடையில் அடுப்பு அனலில் நேரம் காலம் பார்க்காமல் பலகாரம் சுட்டு வெந்து நொந்த ராமாமிர்தம் அம்மாள், ஒழுங்காக வயிற்றுக்கு சாப்பிடுவது கிடையாது. இதனால் குடல் புண்ணும், ரத்தப்போக்கும் ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவ மனையில் கிடந்தார். அம்மாவுக்கு உதவியாக மனோரமாவும் மருத்துவமனையிலேயே இருந்தார். இதனால், அவரது பள்ளி படிப்பு பாலானது.

மறுபடியும் அடுப்பில் வேகக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியதால், அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார், மனோரமா. அங்கு அவர்கள் நடத்தும் விதம் மனோரமாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அம்மாவுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டார். ஒரு சின்ன தவறுக்காக மகளை அடிப்பதை நேரில் பார்த்துவிட்ட அம்மா, இனி இங்கு நீ வேலைப் பார்க்க வேண்டாம் என்று வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

மகன், மருமகள், பேரனுடன் ஆச்சி  
அருகே உள்ள கோட்டையூரில் நடந்த 'ஏகாதசி' நாள் விழாவில் அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'அந்தமான் காதலி' என்ற நாடகத்தை நடத்தினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை என, அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள். அப்போது "யாரோ" மனோரமாவை பற்றி சொல்ல, அவர்கள் வந்து அழைத்து சென்று நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அந்த நாடகத்தில் அவரது பாடலையும் குரல் இனிமையையும் நடனத்தையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்ட, அதில் பணியாற்றிய இயக்குனர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசன் என்பவரும் அவரை பாராட்டி ஆசி கூறியதுடன், கோபிசாந்தா என்கிற அவரது பெயரை மனோரமா என்று வைத்துகொள்ளும் படி ஆலோசனை தெரிவித்தனர்

அந்த நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்த பால்ராஜ், புதுக்கோட்டையில் நடந்த 'வீதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இதையடுத்து 'யார் மகன்?' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த நாடகத்தை எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ். பிறகு தொடர்ந்து நாடக வாய்ப்புகள் வரத் தொடங்கின.

தனது பன்னிரெண்டாவது வயதில் நாடக துறைக்குள் "பள்ளத்தூர் பாப்பா" மனோரமா என்று நுழைந்த மனோரமா, பல நாடகங்களில் நடிக்கத் தொடத்து ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

அதன் பிறகு முத்துராமனுடன் 'புயலுக்குப்பின்', நடகத்தில் பொள்ளாச்சியில் நடித்தவர், மணிமகுடம் என்கிற நாடகத்தில் நடிக்க சென்னை வந்திருக்கிறார். சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார்.  இன்ப வாழ்வு படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

குடும்பத்தினருடன்.... 
அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார், மனோரமா. நாடகத்தில் பெரிய பெயர், புகழ் பெற்றுவிட்டோம். சினிமாவில் நாயகியாக நடிக்க முடியவில்லையே என்று கலங்கினார்.

நாடகத்தில் நடிக்க மதுரை பக்கமே சென்றுவிடலாம் என்று முடிவு செய்த போது, மறுபடியும் கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து அழைப்பு வந்தது. 'மாலையிட்ட மங்கை' படத்தை தொடங்குகிறேன். அதில் நீ நடிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக இல்லை. நகைச்சுவை நடிகையாக என்று கூறி இருக்கிறார்.

முதலில் கதாநாயகி வேடம் இல்லை என்றதும் வருத்தப்பட்டவர், பிறகு கிடைக்கிற வாய்ப்பில் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்று அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார். டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மைனாவதி உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை ஜி.ஆர். நாதன் இயக்கினார். இதில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கவிஞர் கண்ணதாசன் பதினைந்துக்கும் பாடல்கள் எழுதி தயாரித்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெறவே தொடர்ந்து  பல படங்களில் நடித்து வந்த மனோரமா, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". இந்த திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது.

அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முக்கிய திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.  அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

முன்னாள் முதல் ஜெயலலிதாவுடன் 
சுமார் 50 அண்டு காலம், 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப் படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், மனோரமா. மிகச்சிறந்த நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்திறமைகள் அவரை சுமார் அரை நூற்றாண்டுகாலம் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக வைத்திருந்தது.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதொரு துறையாக வர்ணிக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறையில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் மனோரமா.

ஆச்சி மனோரமாவுடன் ஜி.பாலன் 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார் மனோரமா. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதே போல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடன் திரைப் படங்களில் நடித்திருக்கிறார். என். டி. ராமராவ் நடித்த படங்களிலும் நடித்திருக்கிறார். ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர். 

கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ விருது’ தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் என்பவர், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர். அவர் இறந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக