சனி, 1 ஆகஸ்ட், 2015

நடிகர் முத்துராமன் வாழ்க்கை வரலாறு

முத்துராமன்.... முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தாலும் ஏனோ அவர் மற்ற கதாநாயகர்களைப் போல புகழின் உச்சிக்கு செல்ல இயலவில்லை. குணசித்திர நடிகராக மட்டுமல்ல கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்று பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்தவர் அவர்.

ரசிகர்களால் நவரச திலகம் என்று கொண்டாடப்பட்ட முத்துராமன் 1960—ல்  தொடங்கி 1970-ம் ஆண்டு இறுதிவரை கதாநாயகனாக நடித்தார். இயல்பான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் தனித்துவமான குரல் வளத்தால் இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்றைய கதாநாயகர்களைப் போல ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார் முத்துராமன். பள்ளியில் படிக்கும் போதே, நாடகத்தின் மீது ஆர்வம். அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது. தனது நடிப்பால், குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார்  பாராட்டிக் கொண்டே இருந்தார். அவர் நடத்திய  , ஏழைப் பெண், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை, புயலுக்குப் பின், எதிர்பார்த்தது, அன்னை  உட்பட பல நாடங்களில் நடித்து வந்தார், முத்துராமன்.

அதன் பிறகு, ராமனாதன், குலதெய்வம்ராஜகோபால் போன்ற நடிகர்களுடன் இணைந்து  வைரம் நாடக சபா என்ற பெயரில் சில காலம், நீதிபதி, சந்திப்பு, கடமை, சாந்தி, கட்ட பொம்மன் என  பல நாடகங்களை அரங்கேற்றினர்.

பிறகு, குலதெய்வம் ராஜகோபால், வைரம் கிருஷ்ணமூர்த்தி, மணிநாதன் ஆகியோருடன் இணைந்து 'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தினார். இதில் மனோரமா உட்பட பலர் நடித்தனர். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களிலும் அன்றைய நாட்களில் அவர் நடித்திருக்கிறார்.

மேடை நாடகத்தில் நடித்த காலத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். மணிமகுடம், முத்து மண்டபம் போன்ற நாடகங்கள் அந்நாட்களில் புகழ்பெற்றவை. மேலும் மகாகவி பாரதியாரின் கவிதைவரி நாடகத்தில் பங்கேற்று தனித்துவமான கவனம் பெற்றார்.

அதன் பின்னர் கே.எஸ்.பி.எஸ். கணபதி மூலமாகத் தமிழ் திரை உலகினுள் நுழைத்தார் முத்துராமன். அறிஞர் அண்ணா கதை எழுத, கலைஞர் வசனம் தீட்டிய ரங்கூன் ராதா படத்தில் வக்கீல் கதாபாத்திரம் கிடைத்தது. . 1956-ம் ஆண்டு வெளியான ரங்கூன் ராதா படமே அவரது முதல் வாய்ப்பு. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முத்துராமன், அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் நடித்த அரசிளங்குமரி என்ற திரைப்படத்தில் ‘ஏற்றமுன்னா ஏற்றம்..’ என்ற பாடலில் வருவார். இந்தப் படம் மூலம் வெகுஜன ரசிகர்களிடம் சென்றார், முத்துராமன்.

அதன் பின் பல திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென தனி முத்திரை பதிக்கத் தொடங்கினார் முத்துராமன், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசேதான் கடவுளடா, எதிர் நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் என பல படங்கள் அவரது நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு சென்றன.

குணசித்திர வேடத்தில் அறிமுகமாகி கதாநாயகனாக தொடர்ந்து சில படங்களில் இரண்டாம் நாயகனாக, துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் அனைத்துப் படங்களிலும் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவே இருந்தது. .

வாணி ராணி திரைபடத்தில் வாணிஸ்ரீயுடன் நகைச்சுவை நடிப்பில் அசத்தியிருப்பார். மூன்று தெய்வங்கள் என்ற படத்தில் திருடனாக நடித்திருப்பார். எதிர் நீச்சல் படத்தில் பாலக்காட்டு மலையாளம் பேசியும் அசத்தி இருப்பார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் புற்றுநோயாளியாக பலவீனமான ஒருவராக காட்சியளிக்கும்படி வெகு இயல்பாக நடித்திருப்பார். ஜெயலலிதாவுடன் அவர் நடித்த சூரியகாந்தி எனும் திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.

சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கே.ஆர்.விஜயாவை ஒரு தலையாக விரும்புவது தெரியாமல் நண்பனுக்கும் காதலிக்கும் இடையில் சிக்கியவராக நடித்திருப்பார். காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்துள்ளதால் முத்துராமனின் பிம்பம் என்பது திரை ரசிகர்களால் என்றென்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவருடைய வேடத்திற்கு தகுந்தாற்போல மிதமான நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதியச் செய்து விடுவார், முத்துராமன்.

கே.ஆர்.விஜயாவுடன்தான் அதிக படங்களில் நடித்துள்ளார் முத்துராமன்.  தேவிகா, ஜெயலலிதா, காஞ்சனா என முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் அவர். கடைசி வரை எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் நடிகைகளிடம் ‘ஜென்டில்மேன்’ என்று பெயரெடுத்தார், முத்துராமன்.

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ‘முரட்டுக் காளை’ படத்தில்  வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம் என்ற யோசனையை ஏவி.எம்.சரவணனுக்கு தெரிவித்தார், கதையாசிரியர், பஞ்சு அருணாச்சலம்.

“நல்ல யோசனை”  “முத்துராமனைப்  பார்த்து பேசி அவரை ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார், ஏவி.எம்.சரவணன்.

முத்துராமனை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த முத்துராமன், பிறகு ‘பஞ்சு, நீங்க வீடு தேடி வந்து என்னைக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஆனா, சினிமா, நாடகம் என்று இத்தனை வருஷம் தொடர்ந்து நடித்துவிட்டேன். இப்ப  வசதி வாய்ப்போடு செட்டிலாகி நிம்மதியா  ரெஸ்ட் எடுத்துட்டிருக்கேன். இவ்வளவு நாள் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிச்சிட்டு  இப்ப கடைசியில் வில்லனா நடிச்சு ஹீரோகிட்ட எதுக்கு அடி வாங்கணும்னுதான் நான் யோசிக்கிறேன்…” என்றார் முத்துராமன்.

“நீங்க ஏன்  வில்லன்னா அப்படி  நினைக்கறீங்க. நெகட்டிவாக  இருந்தாலும் அது ஒரு நல்ல  கேரக்டர். அதனால்  யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன்  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார்  பஞ்சு அருணாசலம். அந்தப் படத்திலும் கலந்து கொண்டு நடித்தார்.

நடிகர் முத்துராமன் தன்னுடன் நடித்த நாடக நடிகையான சுலோச்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டவர். இயக்குனர்கள் தேவராஜ் மோகன் இருவரில் மோகன் என்பவரது சகோதரிதான் சுலோசனா. இவர்களுக்கு கணேஷ், முரளி கார்த்திகேயன் என இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் முரளி கார்த்திகேயன் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த போது, அவரது பெயரில் எம்.ஏ.காஜா இயக்கத்தில் பணம் பெண் பாசம் என்கிற படத்தை தயாரித்திருக்கிறா, முத்துராமன்.

தான் தயாரித்த மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாரதிராஜாவை சொந்த வீடு என்கிற படத்தில் இயக்குனராக  அறிமுகப்படுத்தினார், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி..

அந்தப் படத்தில் முத்துராமன் நாயகனாக நடிக்க நாயகியாக ஜெயலலிதா நடிக்க இருந்தார்கள். பாரதிராஜாவின் முதல் படமாக உருவாக இருந்த அந்தப் படம் ஜெயலலிதாவின் கால்ஷீட் தள்ளிப் போனதால் படமும் தள்ளிப் போனது. அதனால், பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து புதுமுகங்கள் நடிப்பில் படங்களை இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது புதுமுகங்கள் நடிப்பில் அலைகள் ஓய்வதில்லை படத்தை இயக்க இருந்தவர், எக்மோரில் உள்ள ‘டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து கதாநாயகனையும், அவருக்கு உதவும் நான்கு நண்பர்களையும் தேர்வு செய்து வைத்திருந்த பாரதிராஜா, ஒரு வேலையாக முத்துராமன் வீடு வழியாக காரில் சென்ற போது, வீட்டு வாசலில் கார்த்திக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார்.

பிறகு காரை நிறுத்தச் சொல்லி சிறிது நேரம் கார்த்திக் விளையாடுவதை காரில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் கார்த்திக்கை கதாநாயகனாக நடிக்க வைக்கலாமே என்று நினைத்திருக்கிறார்.

பிறகு கார்த்திக்கை அழைத்திருக்கிறார். கார்த்திக் அருகே சென்று ‘என்ன அங்கிள்’ என்று கேட்க, ‘அப்பா இருக்காரா?’ என்று பாரதிராஜா கூறி இருக்கிறார்.

“அப்பா ’ஃபுட்பால் மேட்ச் பார்க்கப் போயிருக்கார் அங்கிள்’” என்று சொன்ன கார்த்திக், “வாங்க அங்கிள்” என்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார். 

வீட்டுக்குள் சென்றதும், ‘நீ நடிக்கிறியா என்று பாரதிராஜா கேட்க, ‘ஐ டோ நோ அங்கிள்.... டாடிகிட்ட கேக்கணும்’ என்று கார்த்திக் பதில் சொல்லி இருக்கிறார்.

உனக்கு இன்ரஸ்ட் இருக்கா என்று கேட்டவர், பதில் எதுவும் சொல்லாமல் நின்ற கார்த்திக்கை பார்த்து, பிறகு போட்டோ எதுவும் வச்சிருக்கியா என்று கேட்டிருக்கிறார்.

மாங்கனியை கடிப்பது போன்ற ஒரு போட்டோவை கொண்டு வந்து கார்த்திக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை பார்த்த பாரதிராஜா, இது தவிர வேற போட்டோ எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்.

கார்த்திக் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் பதில் சொல்லமுடியாமல் திகைத்து நின்றிருக்கிறார். பிறகு, அப்பா வந்ததும் பாரதிராஜா வந்தேன். விசாரித்தேன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், பாரதிராஜா.

பாரதிராஜா வந்து சென்ற தகவலும், நடிக்கிறாயா என்று கேட்ட தகவலும் தெரிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்த முத்துராமன், உடனே பாரதிராஜாவை தொடர்பு கொண்டார்.

என்ன பாரதி... என்னால நம்பவே முடியல.... உங்க புது படத்துக்கு பையன் வேணும்னா...  தாராளமா கூட்டிட்டு போங்க... அது உங்க புள்ள... என்று கூறியவர், கார்த்திக்கின் பலம், பலவீனம் என எல்லாவற்றையும் தெரிவித்திருக்கிறார்.

நாகர்கோயில் அருகே உள்ள ஒரு கோவிலில் பூஜை போட்டு கார்த்திக், ராதா இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து ஒரு ஷாட் எடுத்தார் பாரதிராஜா.

அதன் பிறகு ஜேப்பியார் பிறந்த ஊரான முட்டம் பகுதியில் முதல் நாள் படப்பிடிப்பு. புழுதி மண்ணும், நீல வானமும், கடலும் மேகக் கூட்டங்களும் பாறைகளை மோதிச்செல்லும் கடல் அலைகளும் உள்ள அழகான அந்த அந்த இடத்தில் ‘’புத்தம் புது காலை’ என்கிற அற்புதமான பாடலை கண்ணன் ஒளிப்பதிவில் படமாக்கினார், இயக்குநர் பாரதிராஜா.

நிழல்கள் படத்தின் தோல்வியால் பாரதிராஜா அவ்வளவுதான் என்று பேசிய வாய்களுக்கு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்று சொல்லும் விதமாக இளையராஜாவின் இசையில் அவரது அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில் மணிவண்ணன் கதையில் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது.

விச்சு என்கிற கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருந்தார், கார்த்திக். முதல் வாய்ப்பு, முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரிடம் இயக்குநர் பாரதிராஜா வேலை வாங்கி இருப்பார். ரசிகர்கள் அவரை பாராட்டினார்கள். தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவித்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருது பெற்று மகிழ்ந்தார் கார்த்திக்.

அலைகள் ஓய்வதில்லை படம் தெலுங்கு மொழியிலும் உருவானது. பாரதிராஜா இயக்கிய அந்தப் படத்திலும் கார்த்திக் கதாநாயகனாக தெலுங்கு மொழியில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக அருணா நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருதும், மத்திய அரசி சிறந்த மாநில மொழி படத்திற்கான தேசிய விருதும் வழங்கி கௌரவித்தது.

அடுத்து ராமநாராயணன் இயக்கத்தில் ராதாவுடன் இளஞ்ஜோடிகள்,  அதன் பிறகு நேரம் வந்தாச்சு படத்தில் ராதாவுடன் என தொடர்ந்து படங்கள் குவிந்தன.

எம்ஜிஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி, கமல் - ஸ்ரீதேவி ஜோடி போல, கார்த்திக் - ராதா ஜோடி கொண்டாடப்பட்டது.

ஆனாலும் கார்த்திக் - ரேவதி, கார்த்திக் - அம்பிகா, கார்த்திக் - பானுப்ரியா, கார்த்திக் - ஜீஜீ, கார்த்திக் - குஷ்பு, கார்த்திக் - சுஹாசினி, கார்த்திக் - சசிகலா, கார்த்திக் - ரம்பா, கார்த்திக் - நக்மா, கார்த்திக் - நிரோஷா, கார்த்திக் - ஜீவிதா... என எல்லா ஜோடியும் பேசப்பட்டது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போவார் கார்த்திக். எந்த கதாநாயகியாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்த இயக்குநர் மணிரத்னம்.

தேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ மோகன். படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் கார்த்திக் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார்.

படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.

‘ஊமைவிழிகள்’ படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ‘மாமரத்துப்பூவெடுத்து’ பாடலையும் கார்த்திக்கையும் அப்படி ரசித்தார்கள். ‘கோபுர வாசலிலே’ படத்தில் காதலுக்கு தவிக்கும் கதாபாத்திரத்தையும் நண்பர்களின் துரோகத்தால் புழுங்கி தவிப்பதையும் அட்டகாசமாக செய்திருப்பார், கார்த்திக்.

திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார்.

ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலுக்கு கார்த்திக்கின் துள்ளான் நடனம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்க்க வைத்தது.

கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்த படம் 'வருசம் 16'. பாசில் இயக்கிய அந்தப் படத்தில் குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக்.

சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.

'கிழக்கு வாசல்' படத்தில் கார்த்திக் ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தை மற்ற முடியுமா? இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக தமிழ அரசு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்து கௌரவித்தது.

காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' படம் பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப் பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக். இந்தப் படத்தில் 'வெத்தல போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக்.

சில படங்களில் தோல்விகளுக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம் அது. கார்த்திக், கவுண்டமணி கூட்டணி தொடர்ந்து 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக', என்று வெற்றிப்படங்களைத் தந்தன.

இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’ கார்த்திக்கின் வேற லெவல் நடிப்பு. விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ அநாயச நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அள்ளிக்கொண்டார்.

கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்‌ஷன்... இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.

பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்.

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்த கார்த்திக், அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

1988ஆம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவர்களுக்கு கவுதம் கார்த்திக், கயன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இதில் கெளதம் கார்த்திக் மனிரத்ணம் இயக்கிய கடல் படத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவுடன் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முத்துராமனின் மூன்றாவது வாரிசான கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், மகன் கார்த்திக் நடித்த முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தை தந்தை முத்துராமன் பார்க்கமல் போனது வேதனையின் உச்சம்.

அன்னக்கிளி தந்த தேவராஜ் இயக்கத்தில் ஆயிரம் முத்தங்கள் படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தார், முத்துராமன். காலையில் படப்பிடிப்புக்கு செல்லும் முன் நடைபயிற்சிக்கு சென்ற அவர், திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட கீழே விழுந்திருக்கிறார். கேள்விப்பட்ட இன்னொரு நாயகன் சிவக்குமார் உட்பட படக்குழு ஒடி சென்று அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர், அவர் இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது ஓடியதால் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். இந்த தகவலை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்த சிவக்குமார், அரசு ஒத்துழைப்புடன் மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு அவரது உடலை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

சிவாஜியுடன் திரையுலகமே திரண்டு அந்த அதிகாலையில் காத்திருக்க, சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், முத்துராமனின் மனைவி சுலோசனா மயங்கிச் சரிந்திருக்கிறார்.

நட்பு, பழகும் தன்மை இவற்றைப் பொருத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்று எம்.ஜி.ஆர் தமது இரங்கலை முத்துராமனின் மறைவின் போது கூறி இருக்கிறார்.

1929-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறந்த மன்னார்குடி அருகே உள்ள ஒக்கநாடு கிராமத்தில் வசித்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ரத்னாவதி தம்பதிக்கு பிறந்த முத்துராமன், 1981-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மறைந்தார். நவரச திலகம் என்று மக்கள் கொண்டாடிய முத்துராமன் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக