செவ்வாய், 21 ஏப்ரல், 2015

ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த ஸ்ரீதேவி

1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்த ஸ்ரீதேவி

தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப்  பெற்றுத் தந்தது.

அதைத்  தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம் ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.

இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய  வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமையவே  இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார். முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் அவர் இருந்தார். பாரதிராஜாவின் பதினாரு வாயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின் மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது.

இந்தியிலும் வாய்ப்பு வர இந்திக்கும் சென்றார். முதல் படம் சோல்வா சாவன்தோல்வியை தழுவினாலும், இரண்டாவது வெளியான ஹிம்மத்வாலாமாபெரும் வெற்றியை தேடித் தந்தது. இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்த படம்.

அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் சத்மாஎன்கிற பெயரில் உருவான போது அதிலும் நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி, இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறதுஅதன் பிறகு தொடர்ந்து இந்தியில் இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தென்னிந்திய மொழியில் உச்சத்தில் இருந்த போது தந்தையை இழந்த ஸ்ரீதேவி, இந்தியில் உச்சத்தில் இருந்த போது தாயை பறி கொடுத்தார். அப்போது ஸ்ரீதேவிக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் ஸ்ரீதேவி என்று ஊடகங்கள் எழுதி வந்தன.

மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி சம்மதிக்கவில்லை என்பதால், போனிகபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு பதினான்கு ஆண்டுகள் கழித்து இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்து ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது, விஜய்யுடன் மாகாராணியாக புலி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

தனது நடிப்பிற்காக தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், பல முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ள ஸ்ரீதேவி, கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 2013ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கி கௌரவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக