சனி, 29 அக்டோபர், 2022

புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியம்

கும்பகோணம்
அருகே உள்ள பாபநாசம் என்ற ஊரில் 1904ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ந் தேதி சி.எஸ்.கிருஷ்ணசாமி- வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கே.சுப்ரமணியம். படிக்கும் போதே கலைகளில் ஆர்வம் கொண்டவர். சட்டம் படித்தவர், சினிமா மீது ஆர்வம் கொண்டிருப்பதை கண்டு அவரை சைதாப்படையில் இருந்த பத்மநாபனின் அசோசியேட் பிலிம் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டார், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராவ்பகதூர் கே.பி.வெங்கடராம அய்யர். மேலும் அவரது திறமையைப் பார்த்து தனது பேத்தி மீனாட்சியையும் திருமணம் செய்து வைத்தார் என்றால் எவ்வளவு பெரிய மனசு. 

இவரும் சும்மா இருப்பாரா... தமிழ்நாட்டில் இருந்து இந்திக்கு சென்று மிகப்பெரிய நடிகராகவும், இயக்குனராகவும் புகழ்ப் பெற்றிருந்த இயக்குநர் ராஜா சாண்டோவை பாம்பேயிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து அசோசியேட்டட் ஃபிலிம் கம்பெனிக்காவ 'அநாதைப்பெண்' 'பேயும் பெண்ணும்' 'உஷா சுந்தரி' போனார் மௌனப் படங்களை சென்னையில் இயக்க வைத்தார்.

இந்தப் படத்தயாரிப்பின் போது ராஜா சாண்டோவிடம் உதவி டைரக்டராக கே.சுப்பிரமணியம் வேலை செய்து சினிமா தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். மறுபடியும் ராஜா சான்டோவுடன் இராஜேஸ்வரி மாதிரி சில ஊமைப் படங்களில் வேலை செய்திருக்கிறார். ராஜா சாண்டோ இந்தி படங்களை இயக்க சென்ற போது அங்கு சென்று இந்தி படங்களிலும் வேலை செய்திருக்கிறார். 


இப்படி அனுபவங்களை சேமித்துக் கொண்டு படம் இயக்க வேண்டும் என்று களம் இறங்கிய போது காரைக்குடி வட்டாரத்தில் நடந்து வந்த பவளக்கொடி நாடகத்தை சென்று பார்த்திருக்கிறார். எஸ்.எம்.லட்சுமண செட்டியார் என்கிற லேனா செட்டியார் மற்றும் அழகப்ப செட்டியார் இருவரும் கூட்டுசேர்ந்து நடத்திய இந்த  நாடகத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் இணைந்து நடித்தனர். இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பு அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதனால், இந்த பவளக்கொடி நாடகத்தை படமாக எடுப்பது எண்ணத்திற்கு வந்திருக்கிறார், கே.சுப்பிரமணியம். 


பவளக்கொடி நாடகத்தை பேசும் படமாக எடுக்கும் சுப்பிரமணியத்தின் திட்டத்திற்கு லேனா செட்டியாரும் அழகப்பச் செட்டியாரும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். பவளக்கொடி படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி அல்லியாகவும், எம்.கே.தியாகராஜ பாகவதர் அர்ஜுனனாகவும், மணி பாகவதர் கிருஷ்ணராகவும் நடிப்பதாக முடிவாகி சென்னை அடையாறு மீனாட்சி சினிடோனில் படப்பிடிப்பு நடைபெற்றது. மீனாட்சி சினிடோன் இப்போ இருக்கிற எம்.ஜி.ஆர். அவர்களோட சத்யா ஸ்டுடியோ... இப்பதான் அந்த ஸ்டுடியோ ஜானகி எம்.ஜி.ஆர் காலேஜா மாறிட்டே....


அங்கு எடுத்த பவளக்கொடி படம் வெளியாகி செம ஓட்டம்.... வசூல் பின்னி எடுத்துட்டு.... எங்க பாத்தாலும் பாகவதர் பாட்டுதான்.... ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடி 275 நாள்... அதாவது சில்வர் ஜூப்ளி கொண்டாட்டுனுச்சு... வசூல் நாயகன்... சூப்பர் ஸ்டார்ன்னு பெரிய பேரு பாகவதருக்கு கிடைச்சது.  


முதல் படத்தில் கிடைத்த வெற்றியில் அடுத்து "சாரங்கதாரா" என்ற திரைப்படத்தை கல்கத்தாவில் தயாரித்தார். இதில் எஸ்.டி.சுப்பு லட்சுமி, எம்.கே.டி. பாகவதர் ஜோடியை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படமும் வெற்றி. பவளக்கொடி படப்பிடிப்பின்போது எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் காதல் வயப்பட்ட கே.சுப்பிரமணியம், படம் முடிந்த தருவாயில் அவரை தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்


முதல் இரண்டு படங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் இணைந்து 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார்இந்த கம்பெனி 19 நாட்களில் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம்தான் "நவின சதாரம்". 


அதற்கடுத்து அவர் பக்த குசேலா, உஷா கல்யாணம், பாலயோகினி, மிஸ்டர் அம்மாஞ்சி, கௌசல்யா கல்யாணம் போன்ற படங்களை இயக்கியவர் 1937 ஆம் ஆண்டு சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை பகுதியிலிருந்த "ஸ்பிரிங் கார்டன்" (Spring Garden) என்ற இடத்தில் "மோஷன் ஃபிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கன்பைன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு நிலையத்தைத் தொடங்கினார், கே. சுப்ரமணியம். 


இந்த ஸ்டுடியோவில் உயர்ந்த தொழில் நுட்பங்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் எண்ணத்தில், வட நாட்டில் இருந்து சைலன்போஸ், கமால்கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களையும் ஒலிப்பதிவு கலையில் தேர்ச்சியுற்ற சி.எஸ்.நிகாம், "சரண் பஹதூர் போன்ற நிபுணர்களை தன் ஸ்டுடியோவில் பணியமர்த்தினார் கே.சுப்பிரமணியம்.


இந்த ஸ்டுடியோவில் பிரபலமாக விளங்கிய கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி சினிமா பிரவேசம் செய்த முதல் படம் "சேவா சதனம் தொடங்கியது. 1938-ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கே.சுப்பிரமணியம். கொடுமைப்படுத்தும் கணவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்காமல் வெளியேறி தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிக்கும் பெண்ணின் கதைதான் சேவா சதனம். இதில் மனைவி சுமதியாக எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.


அடுத்து அந்த ஸ்டுடியோவில் கோவை அய்யாமுத்து எழுதிய "இன்பசாகரன்" என்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. படத்தை கே.சுப்பிரமணியம் டைரக்ட் செய்தார். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆரின் துணைவியாரும் முன்னாள் முதல்வருமான வி.என்.ஜானகி அறிமுகமானார்.

ஜானகிக்கு அப்பொழுது வயது 13. இந்தப் படத் தயாரிப்பின் போது துர்சகுனமாக ஒரு சம்பவம் நடந்தது. படம் முழுவதுமாகத் தயாரிக்கப் பெற்று வெளிவரும் நாளும் விளம்பரப்படுத்திவிட்ட சூழலில் எதிர்பாராதவிதமாக 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதி அந்த ஸ்டுடியோ முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அதில் 'இன்ப சாகரன்' படத்தின் நெகடிவ்களும் எரிந்து போயின. இதனால், பெரும் நட்டத்திற்கு ஆளானார் சுப்ரமணியம். 


அந்த ஸ்டுடியோவின் கடனை அவரால் அடைக்க முடியவில்லை. ஸ்டுடியோ ஏலத்திற்கு சென்றது. அதை ஏலத்தில் எடுத்து அந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்து புது ஸ்டுடியோவாங்கியவர் எஸ்.எஸ்.வாசன். அந்த தகவலை வேறொரு காணொளியில் தெரிந்து கொள்ளலாம். 


கே.சுப்பிரமணியம் அடுத்து இயக்கிய படம் தியாகபூமி. பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களால் ஆனந்த விகடனில் இருபது வாரம் தொடராக வெளிவந்தது, வாசகர்களின் அமோக  ஆதரவைப்பெற்ற தியாக பூமி நாவலை தொடராக வெளிவரும்போதே திரைப் படமாகவும் தயாரித்துக் கொண்டிருந்தார். தியாகபூமியில் 'சாவித்திரி' வேஷத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். சம்பு சாஸ்திரியாக பாபநாசம் சிவன் நடித்தார்.


படத்தில் ஓர் காட்சி, "சாவித்திரியிடம் சாஸ்திரிஇந்திய பூமி, தியாக பூமி. இங்கு மனைவிமார்கள் கணவர்களோடு வாழ்வதுதான் பண்பு" என்று எடுத்துக் கூறி கணவனோடு இணையச் சொல்கிறார். ஆனால் அதற்கு சாவித்திரி, "மனைவி சீதையாக இருக்க வேண்டுமானால், கணவன் ராமனாக இருக்க வேண்டும் என்று சொல்லி மறுத்து விடுகிறாள்.


நீதிமன்றத்தில் தன் கணவன் பிந்தரனோடு தன்னால் வாழமுடியாது என்று கூறும் சாவித்திரி, “வேண்டுமானால் ஆண்கள் மனைவிமார்களுக்கு அளிப்பதுபோல் தான் தன் கணவனுக்கு ஜீவனாம்சம் அளிப்பதாகவும் கூறுகிறாள். அக்காலத்தில் புரட்சிகர சிந்தனை கொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தியது இந்தப்படம். பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் காங்கிரஸ் பிரசாரப் படம் என்று நினைத்து அரசு தடை செய்ய தீர்மானித்தது. இதை கேள்விப்பட்ட இயக்குனர் கே.சுப்ரமணியம் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு வரும் முன், அனுமதி இலவசம் என்று அறிவித்து தொடர்ந்து பல காட்சிகள் நடத்தினார்.


அதன் பிறகு பக்த தேசா, மலையாளத்தால் பிரகலாதா,  அனந்தசயனம், பர்த்ருஹரி, மானசம்ரட்சணம், விகடயோகி, கச்சதேவயானி,          விசித்திரவனிதா, கோகுலதாசி, கீதகாந்தி போன்ற படங்களை இயக்கினார். 


தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில் அறிமுகம் செய்ததும் கே.சுப்பிரமணியம்தான். சுப்பிரமணியத்தின் "கச்ச தேவயானி" படத்தில் நடித்தபின் டி.ஆர்.ராஜகுமாரியின் "கவர்ச்சி புகழ்" தமிழகம் முழுவதும் பரவியது

"பிரேம் சாகர்" என்ற இந்திப் படத்தை தமிழ்நாட்டில் தயாரித்த முதல் தென்னிந்தியரும் இவரே. 


1960 ஆம் ஆண்டு "மோரக்" (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் கீழ் "பாண்டித்தேவன்" படத்தை தயாரித்தார்.

 பால யோகினி படத்தில் சாதிக்கொடுமைகளை சாடியது, சேவாசதனம் திரைப்படத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அவசியத்தை முன்வைத்தது, "பக்தசேதாவில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தது போன்ற அந்நாளில் பேசத் தயங்கிய பல கருத்துக்களை சினிமாவில் முன்வைத்ததால் கே.சுப்ரமணியம், புரட்சி இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.

 1952 ஆம் ஆண்டு "அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு" உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக நான்குமுறை  பணியாற்றியுள்ளார். 


பத்மினி, சரோஜாதேவி என திறமையான நடிகர்கள் திரையுலகிறகு வர காரணமாக இருந்தவர். ஹாலிவுட், ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தொழில் முறையாக சென்று வந்தார். ரஷ்ய அரசால் சிறப்பு விருந்தினராக ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்ட தென்னிந்திய கலைஞர்கள் குழுவில் கலைவாணர் என்.எஸ்.கே.வுடன் ரஷ்யா சென்று வந்தவர் டைரக்டர் கே.சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். 


அனந்தசயனம் படத்தில் கிருஷ்ணன் வேஷத்தில் நடித்திருந்தார் கே.சுப்பிரமணியம். 1942 ல் நிருத்யோதயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்தார். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள்.

தன் திரைவாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள்.   2005- ல் கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக