சனி, 12 பிப்ரவரி, 2022

மலையாள சினிமாவின் முன்னோடி ஜே.சி.டேனியல் வாழ்க்கை வரலாறு

நடராஜ முதலியார் எப்படி மௌன படங்களை பார்த்து, வியந்து ‘’நாமும் படம் தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும்’’ என்று ஆசைப்பட்டாரோ அதே போல அன்றைய திருவிதாங்கூரில் குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிறந்த ஜே.சி.டேனியல் நாடார் என்பவருக்கும் ஆசை பிறந்தது.

செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த ஜே.சி.டேனியலுக்கு சிறுவயதுமுதலே களரி என்கிற தற்காப்புக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். தனது 15 வயதிலேயே களரி குறித்து ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தளவுக்கு களரியில் நுண்ணறிவும், ஆர்வமும் கொண்டிருந்தார்.

அவருக்கிருந்த வசதி காரணமாக, சென்னையில் பிரபலமாகிக் கொண்டிருந்த பேசாத் திரைப்படங்கள் பாக்கிற வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களின் மூலம் களரியைப் உலகளவில் பெரிதாக பேசவைக்க முடியும் என்று எண்ணினார். அதனால் திரைப்படங்கள் பார்ப்பதும், அது குறித்த தகவல்களை சேகரிப்பதுமாக தன்னுடைய நேரத்தினை செலவழித்தார். அதுவே அவருக்கு சினிமாவின் மீது தீராக்காதல் கொள்ள வைத்தது.

உலக சினிமா உருவாகி 30 வருடங்களும், இந்திய சினிமா உருவாகி 15 ஆண்டுகளும் ஆனபின்பும், மலையாளத்தில் திரைப்படமெடுக்கும் முயற்சியேதும் நிகழவில்லையே என்கிற வருத்தமும் அவரது முயற்சிக்கு வித்திட்டது.

இந்த சினிமா பற்றி தெரிந்து கொள்ள சென்னைக்கு சென்றார். அங்கு சினிமா வளாகத்திற்குள் நுழைவதே அவருக்கு பெரும் கஷ்டமாக இருந்திருக்கிறது. அதனால், மும்பைக்கு சென்று சினிமாவை தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தார்.

தான் கேரளத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும், தன் மாணவர்களுக்கு திரைப்படம் பற்றி கற்பிக்க விரும்புவதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர்களிடம் கூறி உள்ளே நுழைய அனுமதி பெற்றவர், மும்பையில் திரைப்படத் தயாரிப்பிற்கு வேண்டிய அறிவையும் உபகரணங்களையும் சேகரித்தார்.

அதன் பிறகு தனது கனவை நிறைவேற்ற மீண்டும் கேரளாவுக்கு திரும்பியவர், விகதகுமாரன் என்கிற படத்தை இயக்க முடிவு செய்து கதை எழுதினர்.

விகதகுமாரன்

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பணக்காரனின் மகனான சந்திரகுமார் என்ற சிறுவனை பூதநாதன் என்பவன் இலங்கைக்கு கடத்திச் சென்றுவிடுகிறான். இலங்கைக்கு கடத்தபட்ட சந்திரகுமார் ஒரு தோட்டத் தொழிலாளியாக வளர்க்கப்படுகிறான். தோட்ட உரிமையாளரான பிரித்தானியரின் அன்பைப் பெறுகிறான். காலப்போக்கில், சந்திரகுமார் தோட்டக் கங்காணி பதவிக்கு உயர்கிறான்.

பிறகு சந்திரகுமார் எந்த சூழலில் ஊருக்கு திரும்புகிறான், குடும்பத்தினர் எப்படி தெரிந்து கொள்கிறார்கள் என்று செண்டிமெண்ட் கலந்த சமூகப் படமாக  கதையில் புதுமையான காட்சிகளுடன் திரைக்கதை அமைத்தார்.

1926-ல் நெய்யாற்றங்கரை என்கிற ஊரில், அவருக்கிருந்த பூர்வீக சொத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றார். அந்த பணத்தில் திருவனந்தபுரத்தில் தற்போது கேரளா பப்ளிக் சர்விஸ் கமிஷன் இருக்குமிடத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி தி திருவிதாங்கூர் பிக்சர்ஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். அதன்பின்னர் ஒரு கேமராவையும் வாங்கினார். அதனை இயக்க லாலா என்கிற ஆங்கிலேயர் ஒருவரையும் ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தில் கடத்தப்பட்ட சந்திரகுமாராக அவரது நண்பர் சுந்தராஜ் நடிக்க, அவருக்கு உதவும் ஜெயச்சந்திரனாக, நாயகன் வேடத்தில் டேனியல் நடித்து விகதகுமாரன் படத்தை இயக்கி படத்தொகுப்பும் செய்துள்ளார்.  அவருடன் சரோஜினியாக பி.கே.ரோசி, கடத்தல்காரன் பூதநாதனாக ஜான்சன் என பலரும் நடித்துள்ளனர்.   

படத்தின் வெளியீட்டு தேதி சரியாக தெரியவில்லை. 1928 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று என்றும், 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6:30 மணிக்கு மணிக்கு திருவனந்தபுரத்தில் கேபிடல் தியேட்டரில் வெளியிடப்பட்டது என்றும் இரண்டு தேதிகள் கூறப்படுகின்றன.

திருவனந்தபுரம் நகரின் மையத்தில் உள்ள இன்றைய மாநில சட்டமன்றக் கட்டடத்திற்கு அருகில் இன்றைய ஏ.ஜி. அலுவலகத்திற்கு எதிரே திரையரங்கம் இருந்தது. படத்தின் திரையிடலை வழக்கறிஞர் மல்லூர் கோவிந்த பிள்ளை துவக்கி வைத்தார். இது ஒரு ஊமைப்படம் என்பதால், திரையரங்கில் ஒரு அறிவிப்பாளர் இருந்தார், அவர் கதையையும் கதைச் சூழலையிம் விளக்குவார்.

இந்தப் படம் கேரளத்தில் தயாரிக்கபட்ட முதல் படமாகவும், சமூக முக்கியத்துவம் கொண்ட படமாகவும் இருந்ததது என்றாலும் படத்தில் ஒரு பெண் இருந்த காரணத்தால் கேரளத்தின் சில இந்து சமய ஆச்சார குழுக்களின் எதிர்ப்பை சந்தித்தது. காரணம் அந்த காலத்தில் படங்களில் பெண்கள் நடிப்பது விபச்சாரத்திற்கு இணையான செயலாக கருதப்பட்டது. நாடகங்களில் கூட பெண் வேடங்களில் ஆண்கள் நடித்த காலம் அது.

உயர் சாதி இந்துக்களால் அரங்கிற்குள் படத்தின் நாயகி ரோசி அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஒரு தலித் பெண் படத்தில் உயர்சாதி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று ஆத்திரமடைந்து, ரோசியிடம் முரட்டுத்தனத்தனமாக நடந்துகொண்டனர். படம் திரையிட்ட போது, திரையில் கற்கள் வீசப்பட்டு, திரை சேதப்படுத்தப்பட்டது.

சிலர் கதாநாயகி ரோசியின் குடிசையை எரித்தனர். இதனால் அவர் தமிழ்நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். கேரளத்தின் மிக முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான ஆலப்புழாவின் பார்வையாளர்கள் தாராள சிந்தனையாளர்களாக இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் திரைப்படத்தைப் பார்த்தனர். திரை மங்கியபோது பார்வையாளர்கள் கூச்சலிட்டதால் ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதுவே முதல் மலையாள படம் என அறிவிப்பாளர் விளக்கினார், சில சிறிய பிரச்சினைகள் இருந்தன என்றாலும் பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

படத்தின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்ததால், ஜே. சி. டேனியேல் தானே படப் பெட்டியுடன் ஆலப்புழாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. கொல்லம், திருச்சூர், தலச்சேரி, நாகர்கோவில் ஆகிய ஊரிகளிலும் படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் வசூலானது படத்துக்கு ஆன செலவை விட குறைவாகவே இருந்தது.

படம் தோல்வியடைந்தத பிறகு, டேனியல் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு நிலைமையைச் சமாளிக்க, அவர் தனது உபகரணங்களை விற்று தனது ஸ்டுடியோவை மூட வேண்டியிருந்தது. பின்னடைவுகள் இருந்தபோதிலும், டேனியல் மேலும் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். இது தற்காப்பு கலையான அடிதடி முறை குறித்த ஆவணப்படமாக இருந்தது. இந்தப் படம் முடிந்தபிறகு டேனியல் முற்றிலும் கடனாளி ஆனார். இதனால் அவர் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு டேனியல் தனது வாழ்நாள் முழுவதையும் பாளையங்கோட்டை, மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் பல் மருத்துவராக தன் வாழ்வைக் கழித்தார்.

கேரள அரசு துவக்கத்தில் டேனியலுக்கு எந்த மரியாதையும் கொடுக்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜே.சி.டேனியல் பிறந்த கன்னியாகுமரி மாவட்டமானது 1956 இல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. இதனால் டேனியல் ஏதேனும் நிதி உதவியை விரும்பினால், அவர் அதற்கு தமிழக அரசிடம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

1975 ஆம் ஆண்டில் டேனியல் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு சிந்தனை மாற்றமாக, கேரள அரசு 1992 இல் கேரள மாநில திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக ஜே.சி. டேனியல் விருதை மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனைகளை கௌரவிப்பதற்காக நிறுவியது. டேனியல் இப்போது மலையாள சினிமாவின் தந்தை என்று கொண்டாடப்படுகிறார்.

ஜே. சி. டேனியலின் வாழ்க்கை மற்றும் விகதகுமாரன் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான இலக்கிய மற்றும் சினிமா படைப்புகள் உருவாக்கபட்டுள்ளன. விகதகுமாரனின் கதாநாயகி பி. கே. ரோசியின் வாழ்க்கையை விவரிக்கும் வினு ஆபிரகாமின் புதினமான நாஷ்டா நாயிகா ஆகும். இந்த படம் 2003 இல் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

2013 ஆம் ஆண்டில், ஜே.சி.டேனியலின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கமல் எழுதி இயக்கிய செல்லுலாய்ட் திரைபடம் வெளியானது. விகதகுமாரனைத் தயாரிக்கவும் திரையிடவும் டேனியல் மேற்கொண்ட போராட்டங்களையும் அவர் நிதி நெருக்கடியில் மூழ்குவதையும் அந்தப் படம் விவரித்தது. டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்க, மம்தா மோகன்தாஸ் அவரது மனைவி ஜேனட்டாகவும், புதுமுகம் சாந்தினி ரோசியாகவும் நடித்தனர். அந்தப் படம் மலையாள திரையுலகில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் பல பாராட்டுக்களையும் பெற்றது.

மலையாளிகளுக்குத் தங்கள் சினிமாகுறித்து எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமிதத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஜே.சி.டேனியல் என்றால் அது மிகையாகாது. சினிமா என்கிற அற்புதக் கலையை கேரளத்துக்கு அறிமுகம் செய்த டேனியல், காலங்கள் கடந்து இன்றைக்கு மலையாள சினிமாவின் பிதாமகன் என கொண்டாட்டப்படுகிறார் என்றால், அது உண்மை உழைப்புக்கு கிடைத்த மரியாதை.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக